கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்ட போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மளமளவெனச் சரிந்தது யாராலும் மறந்திருக்க முடியாது. இந்தச் சரிவில் இருந்து மீண்டு வர அம்பானிக்குக் குறைந்தது 1 வருடம் ஆகும் எனப் பேசப்பட்டு வந்த நிலையில் ஓரே மாதத்தில் மீண்டும் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர் என்ற தான் விட்ட இடத்தை மீண்டும் பிடித்தார்.
லாக்டவுன் காலத்தின் மோசமான வர்த்தகச் சூழ்நிலையில் ஜியோ நிறுவனத்தின் டிஜிட்டல் வர்த்தகத்தின் பங்குகளை விற்பனையின் மூலம் சரிவில் இருந்து மொத்தமாக மீண்டு தற்போது இந்திய பங்குச்சந்தையிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சிறப்பான வளர்ச்சியை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஜியோ நிறுவனத்தில் கடைசி முதலீட்டை யார் செய்வது என்ற போட்டி தற்போது அமெரிக்க டெக் நிறுவனங்களான கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் இடையே போட்டி நிலவுகிறது.
1 லட்சம் கோடி ரூபாய்
முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ஜியோ இன்போகாம் நிறுவனம் கடந்த 7 வாரத்தில் மட்டும் 8 முதலீடு சுற்றுகள் மூலம் சுமார் 13 பில்லியன் டாலர், அதாவது 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளது ஜியோ. இது உண்மையில் மிகப்பெரிய விஷயம், இந்தியாவில் இப்படியொரு முதலீட்டை இதுவரை யாரும் ஈர்த்தது இல்லை.
இதனாலேயே ரிலையனஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு லாக்டவுன் முழுமையாக முடியும் முன்பே பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது.
அடுத்த முதலீடு
இந்நிலையில் ஜியோ நிறுவனத்தில் அடுத்தாக Saudi Arabia's sovereign Public Investment Fund நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதற்காக ஜியோ மற்றும் சவுதி முதலீட்டு நிறுவனங்கள் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை எட்டியுள்ளது.
இது ஜியோ நிறுவனத்திற்கு வரும் 9வது முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி முதலீடு
சவுதி முதலீட்டு நிறுவனத்திற்குப் பின் ஜியோ நிர்வாகம் கடைசியாக ஒரு பெரும் முதலீட்டைப் பெற வேண்டும் என்றும் அதுதான் கடைசி முதலீடாக இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.
இந்த முதலீட்டை யாரிடம் பெற வேண்டும் என்பது தான் தற்போது ரிலையன்ஸ் நிர்வாகத்திற்கு முக்கியப் பிரச்சனையாக உள்ளது.
மைக்ரோசாப்ட் Vs கூகிள்
ஜியோ டிஜிட்டல் சேவையில் முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள் ஆகிய இரு நிறுவனங்களுமே ஆர்வமாக உள்ளது. இவ்விரு நிறுவனங்களும் ஜியோ நிறுவனத்தில் 6 சதவீத பங்குகளைக் கைப்பற்றத் தயாராக உள்ளது.
ஆனால் ஜியோ ஒரு நிறுவனத்தைக் கைவிட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. ஏற்கனவே கிளவுட் சேவைக்காக ஜியோ மைக்ரோசாப்ட் உடன் கூட்டணி சேர்ந்துள்ளது. ஆனால் கூகிள் போன்ற ஒரு உலகளாவிய நிறுவனத்தையும் கைவிட முடியாத சூழ்நிலையில் ரிலையன்ஸ் நிர்வாகம் உள்ளது.
கூகிள்
ஜியோ உடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் கூகிள் அதேவேளையில் வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மே 29ஆம் தேதி தகவல் வெளியானது. ஜியோ உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் கூகிள் நிச்சயம் வோடபோன்-ஐடியா நிறுவனத்தில் முதலீடு செய்யும்.
இதை எப்படி முகேஷ் அம்பானி கையாள போகிறார்..?
அமேசான்
இதேவேளையில் அமெரிக்க ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான், ஜியோவின் சக போட்டி நிறுவனமான ஏர்டெல் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் இதை ஏர்டெல் மறுத்துவிட்டது.
ஏற்கனவே ரிலையன்ஸ் ரீடைல் நிறுவன பங்குகளை அமேசான் வாங்க பேச்சுவார்த்தை நடத்தி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
21 சதவீத பங்குகள்
இதுவரை ஜியோ தனது 21 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் 97,885.65 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளது.
இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் மொத்த மதிப்பு 5.16 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.