இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் நிறுவனம் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
இவர்கள் பெட்ரோல் தொடங்கி சில்லறை வணிகம், டெலிகாம், மீடியா, கேபிள் டீவி என பல துறைகளில் தனிக் காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த ரிலையன்ஸ் குழும நிறுவனங்களை நம்பி சுமாராக 6,00,000 பேர் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ்
இப்போது ஒட்டு மொத்த உலகத்தையும் இந்த கொரோனா வைரஸ் ஸ்தம்பிக்க வைத்து இருப்பதால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தன் ஊழியர்களை நெகிழ வைக்கும் விதத்தில் ஒரு காரியத்தைச் செய்து இருக்கிறது. அப்படி என்ன செய்து இருக்கிறார்கள் என்பதைத் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
2 முறை பேமெண்ட்
இந்த 6 லட்சம் ஊழியர்களில் ஒரு கணிசமானவர்கள் மாதம் 30,000 ரூபாய்க்குள் தான் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த 30,000 ரூபாய்க்குக் கீழ் சம்பளம் வாங்குபவர்களுக்கு மாதம் இரண்டு முறை பேமெண்ட் செய்ய இருப்பதாகச் சொல்லி இருக்கிறது ரிலையன்ஸ் குழுமம்.
ஏன் 2 முறை
இந்த நடுத்தர மற்றும் ஏழை ஊழியர்கள், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் நிதிச் சுமையை குறைத்துக் கொள்ளவும், அவர்கள் கையில் பணம் புழங்க வேண்டும் என்பதால் இப்படி மாதம் 2 முறை பேமெண்ட் செய்கிறார்களாம்.
தற்காலிக & ஒப்பந்த ஊழியர்கள்
ரிலையன்ஸ் குழுமத்தில் தற்காலிக ஊழியர்களாகவும், ஒப்பந்த ஊழியர்களாகவும் இருப்பவர்களுக்கு வேலை நடந்தாலும், நடக்காவிட்டாலும், பேமெண்ட்களைக் கொடுக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது ரிலையன்ஸ் குழுமம். சமீபத்தில் டாடா குழுமம் கூட தன் தற்காலிக & ஒப்பந்த ஊழியர்களுக்கு பேமெண்ட் கொடுப்பதாகச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை
ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனை, மும்பை கார்ப்பரேஷன் உடன் இணைந்து ஒரு 100 படுக்கை கொண்ட சிறப்பு கொரோனா வைரஸ் மருத்துவமனையை செவன் ஹில்ஸ் பகுதியில் அமைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதோடு மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து இருக்கிறது ரிலையன்ஸ் குழுமம்.
இலவச எரிபொருள்
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான போக்குவரத்து வாகனங்களுக்கு இலவசமாக பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருளைக் கொடுக்க இருப்பதாகவும் சொல்லி இருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம். அதோடு இந்தியாவில் இருக்கும் 700-க்கும் மேற்பட்ட ரிலையன்ஸ் ரீடெயில் கடைகள் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை விற்றுக் கொண்டே இருக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.