வேளாண் சட்டங்களை எதிர்த்து 1 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு மத்தியில் சில தினங்களுக்கு முன் பல செல்போன் டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
Recommended Video
ஏனெனில் இந்த விவசாய மசோதாக்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். இதற்கிடையில் கார்ப்பரேட் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் திட்டம் தங்களுக்கு இல்லை என்றும் , எந்த விவசாய நிலத்தையும் வாங்குவதாக இல்லை என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் விளக்கம்
அதோடு ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் உணவுப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து, நேரடியாகக் கொள்முதல் செய்வதில்லை. குறைந்தபட்ச ஆதார விலை என்பதை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு எங்கள் சப்ளையர்களுக்கு திட்டவட்டமாக அறிவுறுத்தியிருக்கிறோம் என கூறியுள்ளது. இந்த நிலையில் தான் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள தங்களது உள்கட்டமைப்பு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நீதிமன்றத்தினை அணுகியுள்ளது.
மூன்று வேளாண் மசோதாக்கள்
சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய சட்டங்களில் இந்த நிறுவனத்தின் பங்கும் இருப்பதாக, கோபமடைந்த விவசாயிகள் இந்த சேதத்தினை செய்துள்ளனர். குறிப்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கேபிள்களை சேதப்படுத்தியும் , உள்கட்டமைப்புகளை சேதப்படித்தியும் தங்களது கோபத்தினை காட்டியுள்ளனர்.
ரிலையன்ஸ் முக்கிய பயனாளி
இந்த விவசாய மசோதாவால் ரிலையன்ஸ் நிறுவனத்தையும் ஒரு முக்கிய பயனாளியாக விவசாயிகள் கருதுகின்றனர். இந்த நிலையில் தான் இப்படி ஒரு சேதம் விளைவித்துள்ளனர். இதற்கு தனது பதிலை அளிக்கும் விதமாக, ஒப்பந்த
விவசாயத்தில் ஈடுபடும் திட்டமும் இல்லை எந்த ஒரு விவசாய நிலத்தை வாங்கப்போவதும் இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஒப்பந்த விவசாயத்தில் விருப்பமில்லை
அதோடு விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதில் ரிலையன்ஸ் கவனம் செலுத்தும் என கூறியுள்ளது. மேலும் தங்களுக்கு ஒப்பந்த விவசாயத்திலும் ஈடுபட விருப்பமில்லை எனவும் தெளிபடக் கூறியுள்ளது. எதிர்காலத்திலும் அப்படி ஒரு
திட்டம் இல்லை என்றும் எந்த நிலத்தையும் வாங்க திட்டமில்லை என்றும் அறிவித்துள்ளது.
மொபைல் டவர்கள் சேதம்
பஞ்சாபில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோவுக்குச் சொந்தமான 9,000 டவர்களில் 1,500 மொபைல் டவர்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலின் பின்னணியில், சில வர்த்தகப் போட்டி நிறுவனங்களும் இருப்பதாக ரிலையன்ஸ் கருதுகிறது என்று
ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வழக்கு தொடர முடிவு
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகளான மொபைல் டவர் உள்ளிட்டவற்றை, சிலர் வன்முறைக்கு இலக்காக்கி சேதம் செய்த விவகாரத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.
ஊழியர்களுக்கும் ஆபத்து
மேலும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறைச் செயல்களினால் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து விளைந்துள்ளது. முக்கியமான தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. இதன் துணை நிறுவனங்களின் சேவை மையங்கள் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பெரிய அளவில் இடையூறுக்கு ஆளாகியுள்ளன என்று கூறியுள்ளது.
அரசு தலையீடு அவசியம்
இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டோருக்கு தக்க தண்டனை வழங்கவும் இனி வன்முறையில் ஈடுபடாதவாறு அச்சுறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள அரசு தலையீடு அவசியம் என்றும் கோரி பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்போவதாக ரிலையன்ஸ் ஜியோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இப்படி அவதூறாகத் தொடர்புபடுத்துவதன் மூலம் எங்கள் வர்த்தகங்களை அழிப்பதும், எங்கள் மதிப்பை சேதம் செய்வதுமே குறிக்கோள் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.