இன்றைய காலகட்டத்தில் வங்கி சேவைகளில் பற்பல புதிய மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால் அதே அளவு பிரச்சனைகளும் வளர்ந்துள்ளன. சொல்லப்போனால் ஒரு காலகட்டத்தில் வங்கிக்கு சென்று மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று பணம் எடுத்த காலம் போய், இன்று ஏடிஎம், டிஜிட்டல் பே என பல்வேறு புதிய அம்சங்கள் வந்து விட்டன.
முந்தைய காலக்கட்டங்களில் கடைக்கு சென்று பொருளை வாங்கிவிட்டு, அதற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கையில் கொடுப்போம். ஆனால் இது தற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பேமெண்ட் ஆப்கள் மூலம் செலுத்தினால் போதும் என்ற நிலை உள்ளது.
தொழில் நுட்பம் என்பது ஒரு புறம் நமது வேலைகளை மிக சுலபமாக மாற்றினாலும், மறுபுறம் சைபர் கிரைம் பிரச்சனைகளும் மிக அதிகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது.
தொழில் நுட்ப வளர்ச்சி
ஆக வங்கிகள் தொழில் நுட்பத்தினை அதிகரிக்க அதிகரிக்க அதற்குண்டான, தடுப்பு நடவடிக்கைகளையும், கடுமையான கட்டுபாடுகளையும் விதித்து வருகின்றது. இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புறம் கடினமாக தோன்றினாலும், மறுபுறம் அது அவர்களின் நலனுக்கு எனும்போது ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம். எனினும் இது பாதுகாப்பான ஒரு விஷயம் என்பதால் அதனை ஏற்றுக் கொள்வதில் தவறேதுமில்லை.
பாதுகாப்பு நடவடிக்கை
அப்படி பாதுகாப்பு நடவடிக்கையினை தான் ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. இது குறித்து ஏற்கனவே முந்தைய கட்டுரைகளில் பார்த்துள்ளோம் என்றாலும், இது எதிர்காலத்தில் மக்களுக்கு பயனுள்ள விஷயமா? இந்த நடவடிக்கைகள் அவசியமானதா? என்பதையும் பார்க்கலாம் வாருங்கள்.
நீங்கள் ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாக பரிவர்த்தனை செய்பவராக இருந்தால், நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான்.
ஒவ்வொருமுறையும் விவரங்கள் வேண்டும்
இனி நீங்கள் ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாக பொருட்களை வாங்குகிறீர்கள் அல்லது வேறு ஏதேனும் இடத்தில் தொடர்ச்சியாக பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்படி பயன்படுத்தும்போது கடைக்காரர்கள் அல்லது விற்பனையாளார்கள் உங்களது விவரங்களை சேமித்து வைத்திருப்பர், ஆனால் இனி அப்படி வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமிக்க முடியாது. இதனால் வாடிக்கையாளர் ஒவ்வொரு முறையும் விவரங்களை பதிவிட வேண்டியிருக்கும்.
விவரங்கள் கொடுத்தால் மட்டுமே பரிவர்த்தனை
இது குறித்து தான் ரிசர்வ் வங்கியும் ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் மூலம் ஜனவரி 1 முதல் ஷாப்பிங் செய்யும் இடங்களில் உங்களது விவரங்கள் சேமிக்கப்படாது. இதனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரிடத்தில் உங்களது கார்டினை பய்னபடுத்தும் போது விவரங்கள் கொடுக்கப்பட வேண்டியிருக்கும். குறிப்பாக உங்களது கார்டின் 18 இலக்க எண் உள்ளிட்ட சில விவரங்களை முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
வரவேற்க தக்க விஷயமே
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது சற்று கடினமானதாக் தோன்றலாம். ஆனால் இதுபோன்ற சிறிய விஷயங்கள் தான் சைபர் கிரைம் திருடர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. ஆக ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாடுகள் நிச்சயம் மிக சரியான விஷயமே. மக்களுக்கு பாதுகாப்பு என்பதோடு, வங்கி துறையில் மேற்கொண்டு மோசடிகளை தடுக்க உதவும், குறிப்பாக சாமனிய மக்கள் தற்போது தான் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு திரும்பி வரும் நிலையில், இது வரவேற்கதக்க ஒரு விஷயமே.