ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவு வர்த்தகம் கடந்த 30 நாட்களில் வெறும் 13.37 சதவீத பங்குகளை விற்பனை செய்து 60,596.37 கோடி ரூபாய் முதலீட்டினை பெற்றுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தப் புதிய முதலீடுகளால் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 5.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது சக டெலிகாம் நிறுவனங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
இந்நிலையில் ஜியோ இன்னும் அதிகமான பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும், இதை வாங்க அமெரிக்க, சவுதி முதலீட்டு நிறுவனங்கள் போட்டிப் போடுவதாகவும் தெரிகிறது.
2 புதிய நிறுவனங்கள்
முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டிஜிட்டல் மற்றும் டெலிகாம் வர்த்தகம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஒரு மாத காலத்திலேயே 3 வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்த நிலையில் தற்போது 2 புதிய நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஜெனரல் அட்லான்டிக்
அமெரிக்கத் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லான்டிக் ஜியோ டிஜிட்டல் சேவை நிறுவனத்தில் 850 மில்லியன் முதல் 950 மில்லியன் டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்திகள் மூலம் தெரிகிறது.
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி இந்த மாதத்திற்குள் ஜெனரல் அட்லான்டிக் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒப்பந்தம் குறித்து இதுவரை எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்டு
இதேபோல் சவுதி அரேபியாவின் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்டு, ஜியோ டிஜிட்டல் சேவை நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்க முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இதுவும் உறுதியான தகவல் இல்லை.
8% பங்குகள் விற்பனை
முகேஷ் அம்பானி, ஜியோ நிறுவனத்தின் சேவை மற்றும் வர்த்தக வளர்ச்சியை வலிமையாக்க வேண்டும் என நோக்கத்தில், சில நாட்களுக்கு முன்பு ஒரு முக்கியமான ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
இதன் பின்பு தான் விஸ்டா ஈக்விட்டி 2.32 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது, ஆனால் இது முன்பே திட்டமிட்டிருந்த முதலீடு என்றால் ஜியோ இன்னும் 8 சதவீத பங்குகளை விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த 8 சதவீத பங்குகளைத் தற்போது கிடைத்துள்ள தகவல் படி சவுதி அரேபியாவின் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்டு மற்றும் அமெரிக்காவின் ஜெனரல் அட்லான்டிக் வாங்க வாய்ப்பு உள்ளது.
கடன் சுமை
இப்பங்கு விற்பனை மூலம் ஜியோ அடுத்த தலைமுறை இண்டர்நெட் சேவை வழங்க 5G அலைக்கற்றை வாங்கவும், தற்போது இருக்கும் 850 MHz அலைக்கற்றை மறுபதிவு செய்யவும், கூடுதலாக வாங்கவும் முடியும். இதோடு தனது கடன் அளவையும் பெரிய அளவில் குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக்பாட்
இந்த முதலீடுகள் மூலம் ரிலையன்ஸ் ஜியோ இன்னும் சில ஆண்டுகளுக்கு முதலீட்டுக்காகப் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டிய அவசியம் இல்லை என்பது முகேஷ் அம்பானிக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.