இந்திய டாக்டர்களை பணியமர்த்த இருப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ள நிலையில் இந்திய டாக்டர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த 3 ஆண்டுகளில் 180 இந்திய டாக்டர்கள் சிங்கப்பூரில் பணியாற்றுவார்கள் என கூறப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியாகியுள்ள நிலையில் இந்திய டாக்டர்கள் சிங்கப்பூர் செல்ல தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டாக்டர்கள்
அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து 180 டாக்டர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. இதுகுறித்த ஊடக அறிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பூரில் பணி
தற்போது சிங்கப்பூரில் பணி புரிந்து வரும் பல வெளிநாட்டு டாக்டர்களின் ஒப்பந்தம் அக்டோபர் 10ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரில் பணிபுரிய இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 60 டாக்டர்கள் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் 2025 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் டாக்டர்களை பணியில் அமர்த்தும் திட்டம் தொடரும் என்றும் சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது.
சுகாதாரத்துறை
சிங்கப்பூர் மருத்துவர்களின் அதிகமான பணிச்சுமையை குறைக்கவும் சிங்கப்பூரின் சுகாதாரத்தை பூர்த்தி செய்யவும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் அரசு டாக்டர்களை நியமித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து டாக்டர்களை பணியமர்த்த இருப்பதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.
பதிவு பெற்ற மருத்துவ கல்லூரிகள்
ஆனால் அதே நேரத்தில் சிங்கப்பூர் மருத்துவ கவுன்சிலில் பட்டியலிடப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் பட்டம் பெற்ற டாக்டர்களை மட்டுமே சிங்கப்பூர் அரசு தேர்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. சிங்கப்பூர் மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சம்பளம்
பணக்கார நாடான சிங்கப்பூரில் மருத்துவராக செல்லும் இந்திய டாக்டர்களுக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.