சென்னை: திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் மரணம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் அனைவரின் பார்வையும் போர்வெல்காரர்கள் மீது திரும்பியுள்ளது.
ஆங்காங்கே பரவிக் கிடைக்கும் பயனற்ற போர்களை எப்படி பயனுள்ளதாக மாற்றலாம், இதை போர்வெல் நிறுவனங்கள் எப்படி மக்களுக்கு சாதமாக மாற்றலாம், இது தவிர எந்த மாதிரியான விதிமுறைகள் அரசு வகுத்துள்ளது என்ற விவாதங்கள் கிளம்பியுள்ளன.
புற்றீசல் போல ஆங்காங்கே பரவிக் கிடக்கும் போர்வெல் நிறுவனங்கள் யார் பணம் கொடுத்தாலும் சரி, எங்கு வேண்டுமானலும் போர் போடலாம் என்ற நிலையே தமிழகத்தில் நிலவி வருகிறது.
போர்வெல் விதிமுறைகள்
அதிலும் அரசின் விதிமுறைகள் பல இருந்தாலும் அதனை காற்றில் பறக்கவிட்டு, அதை யாரும் பின்பற்றுவது கிடையாது. சரி அப்படி என்ன தான் விதிமுறைகள் இருக்கிறது இந்த போர்வெல்லுக்கு, அதைத் தான் பார்க்க போகிறோம். முதலாவதாக ஒரு இடத்தில் போர்வெல் அமைக்க வேண்டுமெனில், நிலத்தின் உரிமையாளர் 15 நாட்களுக்கு முன்பே அரசுக்கு இதை தெரியபடுத்த வேண்டும். மேலும் போர்வெல் போடும் நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்திடமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரியிடமோ பதிவு செய்து முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பது கவனிக்கதக்கது.
தகவல் பலகை வைக்க வேண்டும்
மேலும் அப்படி போடப்பட்ட போர்வெல் பற்றிய தகவல்களையும், போர்வெல் நிறுவனத்தின் தகவல்களையும் அதன் உரிமையாளர் தகவல் பலகையாக வைத்திருக்க வேண்டும், போர்போடும் போது அந்த இடத்தை சுற்றிலும் சரியான தடுப்பு வேலிகளும் தடுப்புகளும் சுற்றிலும் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு போடப்படும் போர்வெல் பணிகள் முடிவடைந்தவுடன் ஆழ்துளைக் கிணறுகளை சரியான மூடிகள் மூலம் மூடப்படவேண்டும்.
பயனற்ற போர்வெல்கள் நிரப்பப்பட வேண்டும்
மேலும் போர்வெல் பணிகள் முடிந்தவுடன் அந்த இடத்தினை முன்பு போலவே சரியாக சீரமைத்தல், குறிப்பாக நிலத்தை முன்பு போல அதன் அசல் நிலைக்கு மீட்டெடுப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதே பயன்பாட்டில் அல்லாத உபயோகமற்ற போர்வெல்களைப் பொருத்தவரை கிணற்றின் அடிப்பகுதியில் இருந்து தரைமட்டம் வரை களிமண், மணல் கூழாங்கற்கள் ஆகியவற்றை கொண்டு நிரப்பப்பட வேண்டும்.
விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா?
இது எல்லாவற்றையும் விட, உச்ச நீதிமன்றத்தில் விதிமுறைப்படி, ஆள்துளைக் கிணறுகளில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா? என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சோதனை செய்ய வேண்டும். மேலும் அவ்வாறு தோண்டப்பட்ட கிணறுகளின் நிலை என்ன? எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. பயன் பாட்டில் இல்லாதவை எத்தனை, இதில் சரிவர மூடப்படாத ஆழ்துழைக் கிணறுகள் எத்தனை, என்பது குறித்து மாவட்டம், தாலுக்கா, கிராம அளவில் தகவல்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
திடீர் ஆய்வு செய்ய வேண்டும்
ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டவற்றை கிராம தலைவர்கள் மற்றும் விவசாய துறை நிர்வாகிகள் இதனை கவனிக்க வேண்டும். இதே நகர்புறங்களில் இளநிலை உதவியாளர், பொதுத் சுகாதாரம் மாநகராட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கவனிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது குறிபிடத்தக்கது. மேலும் கைவிடப்பட்ட கிணறுகள் உள்ள இடங்களில் திடீர் ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
உச்ச நிதிமன்றம் விதிமுறைகள்
மேலும் இந்த தகவல்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரோ அல்லது தொகுதி மேம்பாட்டு அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டும். இது அவர்களுக்காக அல்ல, நமது சமூகத்திற்காகவாவது பயன்படுத்த வேண்டும், இந்த விதிமுறைகளை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் விதித்திருந்த நிலையில், இது யாரும் சரிவர பயன்படுத்துவதில்லை என்பது உண்மை.
போர்வெல் நிறுவனங்கள் இதை செய்யலாமே
சரி விதிமுறைகள் ஒரு புறம் இருக்கட்டும் லட்சக் கணக்கில் செலவு செய்து போர் போடும் ஒரு நபர் 100 - 200 ரூபாய் மதிப்பிலான ஒரு மூடியை அதற்கு போடலாமே. இல்லையேல் போர்வெல் நிறுவனங்கள் தாங்கள் போர்வெல் அமைக்கும் போதே, மழை நீர் வடிகாலையும் அதோடு சேர்த்து அமைக்கலாம். இதற்குண்டான பணத்தையும் உரிமையாளரிடம் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம். ஒரு வேளை போர்வெல் அமைத்தும் அதில் தண்ணீர் இல்லை என்றாலும், வரும் காலத்தில் அதில் தண்ணீர் இருக்கலாம். அந்த நேரத்தில் இது உபயோகமானதாக இருக்கலாம்.
வருவாயும் உண்டு பாதுக்காப்பும் இருக்கும்
இது போர்வெல் நிறுவனங்களின் வருவாயும் அதிகரிப்பதோடு, மக்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கும். இதே ஒரு போர்வெல் அமைத்து அது பயனற்றதாகிவிடுகிறது எனில், அதன் உரிமையாளர்கள் இவ்வளவு செலவும் செய்தும் பயனற்றதாகி விட்டதே என்று அதிருப்தி அடையாமல், போர்வெல் நிறுவனங்களே அதை மழை நீர் வடிகாலாக மாற்றித் தருவதன் மூலம் வீணாகி விட்டது என்ற எண்ணத்தை மாற்றலாம்.
என்னவெல்லாம் பாதுகாப்பு அம்சங்கள்
மேலும் போர்வெல் நிறுவனங்கள் கட்டாயம் எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்களையெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்றும் உரிமையாளர்களுக்கு கூற வேண்டும் இப்படி இருக்கும் பட்சத்தில் பெரும்பான்மையான விபத்துகள் தடுக்கப்படும். அதே உங்களின் போர்வெல் வர்த்தகமும் நன்றாக இருக்கும். இது இன்னொரு சுஜித்தை நாம் இழந்துவிடக் கூடாது என்பதற்காக எழுதப்பட்ட ஒரு விழிப்புணர்வு கட்டுரையே.