ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் பல மாற்றங்களைச் செய்து வரும் நிலையில், தற்போது இளைஞர்கள் நலனுக்காக முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றி 1 வருடம் முழுமையாக முடிந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்-ஐ தாலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கைப்பற்றினர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை இரண்டாவது முறையாகக் கைப்பற்றியதால் இது தாலிபான் ஆட்சி 2.0 என்று அழைக்கப்படுகிறது.
தலிபான்களின் 1990 ஆட்சியிலும் சரி, தற்போதைய தாலிபான் ஆட்சி 2.0 ஆட்சியிலும் சரி பெண்களின் சுதந்திரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் நாட்டை மீண்டும் வளர்ச்சி அடையும் நாடாக மாற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு வரும் தாலிபான்களுக்கு நிதி பற்றாக்குறை பெரிய பிரச்சனையாக இருந்தாலும், பல நாடுகள் தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இந்த நிலையில் சீன நிறுவனங்களுக்கு எதிரான முடிவை ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் அரசு எடுக்க உள்ளது.
டிக்டாக் மற்றும் PUBG
அடுத்த 3 மாதத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஷாட் வீடியோ தளமான டிக்டாக் மற்றும் பிரபலமான மொபைல் கேமிங் செயலியான PUBG ஆகியவைற்றைத் தடை செய்யத் திட்டமிட்டு வருவதாகத் தாலிபான்கள் அரசு தெரிவித்துள்ளது. தாலிபான்களின் இந்த முடிவு சீன பையிட் டான்ஸ் மற்றும் டென்சென்ட் ஆகிய நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது.
இளைஞர்கள்
ஏப்ரல் மாதத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் இஸ்லாமிய குழுவானது ஆப்கானிய இளைஞர்களை "தவறாக" வழிநடத்துவதாகக் கூறி டிக்டாக் மற்றும் PUBG ஆகியவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்து இருந்தது.
தாலிபான் செய்தித் தொடர்பாளர்
"இளைய தலைமுறையினர் தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுக்க" TikTok மற்றும் PUBG மீதான தடை அவசியம் என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் இனாமுல்லா சமங்கானி கூறியுள்ளார்.
தடை அறிவிப்பு
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தொலைத்தொடர்புத் துறையின் அறிவிப்பை மேற்கோள் காட்டி, பாதுகாப்புத் துறையின் பிரதிநிதிகள் மற்றும் ஷரியா சட்ட அமலாக்க நிர்வாகத்தின் பிரதிநிதியுடனான சந்திப்பின் போது தடை அறிவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
90 நாட்கள்
இளம் ஆப்கானியர்கள் மத்தியில் அதிகளவில் பயன்படுத்தப்படும் TikTok மற்றும் PUBG மீதான தடை அடுத்த 90 நாட்களில் அமல்படுத்தப்படும். இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தொலைத்தொடர்பு மற்றும் இணையச் சேவை நிறுவனங்களைக் குறிப்பிட்ட 90 நாட்களுக்குள் தடையை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.