ஜிஎஸ்டி வந்த பின்பு மாநிலங்களின் வருவாய் பெரிய அளவில் குறைந்த நிலையில், கூடுதல் வருமானத்தை ஈட்டவும், மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அதிலும் குறிப்பாக நாட்டின் முன்னணி பொருளாதார மாநிலங்களாக இருக்கும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடாக, ஆந்திரா, தெலுங்கானா மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது.
இப்படி ஒரு நிறுவனத்தின் திட்டத்திற்காகத் தற்போது 3 மாநிலங்கள் போட்டிப்போட்டு வருகிறது.
பாக்ஸ்கான்
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான், இந்தியாவில் மிகப்பெரிய உற்பத்தி விரிவாக்கத் திட்டங்களைக் கொண்டு உள்ளது.இத்திட்டத்தை எந்த மாநிலங்கள் முதலில் கைப்பற்றுவது என்பது தான் தற்போது போட்டி.
ஸ்மார்ட்போன், செமிகண்டக்டர் சிப்
பாக்ஸ்கான் மொபைல் போன் உற்பத்தியை விரிவுபடுத்துவது மட்டும் அல்லாமல், சுரங்க மற்றும் காப்பர் உற்பத்தி நிறுவனமான வேதாந்தா உடன் இணைந்து பல ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் செமிகண்டக்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி செய்யக் கூட்டணி அமைக்க உள்ளது.
எலக்ட்ரிக் கார்
அதைத் தாண்டி தைவான் நாட்டு நிறுவனமான பாக்ஸ்கான் ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து கொடுக்கும் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை இந்தியாவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த மூன்று முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவும் ஆலைகளை அமைப்பதற்காகச் சரியான மாநிலங்களில் இடத்தைத் தேடி வருகிறது.
தமிழ்நாடு
பாக்ஸ்கான் ஏற்கனவே தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொழிற்சாலையை வைத்திருக்கும் நிலையில் இந்நிறுவன தலைவர் யங் லியு பிரதமர் மோடியை சந்தித்து இந்திய விரிவாக்கத் திட்டம் குறித்து ஒப்புதல் பெற்ற கையோடு தமிழ்நாடு அரசு சார்பில் நோடல் ஏஜென்சியான Guidance Tamilnadu அமைப்பின் தலைவர் பூஜா குல்கர்னி ஐஏஎஸ் டெல்லியில் சந்தித்தார்.
3 உற்பத்தி திட்டம்
இதேவேளையில் பாக்ஸ்கான் இந்த 3 உற்பத்தி திட்டத்தையும் ஓரே மாநிலத்தில் செய்யத் தேர்வு செய்யும் எனச் சந்தை வல்லுனர்கள் கூறுவதாகக் கருத்து நிலவும் இதேவேளையில் ஒவ்வொரு திட்டத்தையும் ஒவ்வொரு மாநிலத்தில் அமைக்கும் எனச் செய்திகள் வெளியாகி வருகிறது.
5 மாநிலங்கள் போட்டி
தமிழ்நாட்டின் சார்பாகப் பூஜா குல்கர்னி பாக்ஸ்கான் தலைவர் யங் லியு-ஐ டெல்லியில் சந்தித்தது போல் கர்நாடக தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி-யும் சந்தித்துள்ளார். தற்போது பாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிற்சாலையை ஈர்க்க தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடாக, ஆந்திரா என 5 மாநிலங்கள் போட்டிப்போடுகிறது.