இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஒரு பொருள் அடையாளம் இருக்கிறது. அப்படி அஸ்ஸாம் மாநிலத்தின் டீ உலகப் புகழ் பெற்றது. தற்போது வட கிழக்கு மாநிலங்களில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் போராட்டங்களால், டீ உற்பத்தி மற்றும் வியாபாரம் இந்த ஆண்டில் பாதிக்கப்படுமோ என டீ உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தங்கள் பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
வட கிழக்கு மாநிலங்களில் பரவலாக நடந்து வரும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் காரணத்தால், ஏற்கனவே உற்பத்தி செய்து பதப்படுத்தி வைத்திருக்கும் டீ பாக்கெட்களைக் கூட முறையாக போக்குவரத்து செய்ய முடியவில்லை எனவும் சொல்கிறார்கள்.
ஏற்கனவே டீ எஸ்டேட்களில் தேயிலைகளைப் பறித்து பதப்படுத்துவது பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் வட கிழக்கு டீ சங்கத்தின் ஆலோசகர் பித்யானந்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சொல்லி இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இந்த 2019-ம் ஆண்டில் தட்ப வெப்பநிலை டீ உற்பத்திக்கு சாதகமாக இருக்கிறதாம். எனவே நல்ல தரமான டீ-யை இந்த ஆண்டில் தயாரிக்க முடியும். ஆனால் வட கிழக்கு மாநிலங்கள் முழுக்க போராட்ட மேகம் சூழ்ந்து இருப்பதால் டீ உற்பத்திப் பணிகளே பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் பித்யானந்தா.
கடந்த செவ்வாய்க்கிழமை பந்த் அறிவித்ததால், தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. அதன் பின் வெள்ளிக்கிழமை தேயிலை பறிக்கத் தொடங்கினோம். அப்போதும் போக்குவரத்து வசதிகள் முறையாக இல்லாததால், பல தொழிலாளர்களால் வேலைக்கு வர முடியவில்லை என அனைத்து அஸ்ஸாம் சிறு குறு டீ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கருணா மஹனதா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சொல்லி இருக்கிறார். இந்த போராட்ட பிரச்னை இருப்பதால், தேயிலை பறிப்பதற்கான காலக் கெடுவை வரும் டிசம்பர் 19-ம் தேதி வரை நீட்டித்து இருக்கிறார்கள்.
வட கிழக்கு மாநிலங்களில் சில பகுதிகளில், இணைய சேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருப்பதால், தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் கூட போட முடியாமல் தவிப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள் டீ எஸ்டேட் உரிமையாளர்கள். இந்த வருடம் டீ வியாபாரம் என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை.