கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் Work From Home என்றால் என்ன என்பதே பலருக்கு தெரியாது.
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து அரசு நிறுவனங்கள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை Work From Home என்பதை செயல்படுத்தி வந்தன.
இதன் காரணமாக வீட்டில் இருந்தபடியே ஐடி ஊழியர்கள் உட்பட பல ஊழியர்கள் பணி புரிந்தனர்.
Work From Home
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து விட்டதை அடுத்து மீண்டும் அலுவலகம் திறக்கப்பட்டு, அலுவலகங்களுக்கு சென்று பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஐடி துறையை பொருத்தவரை வீட்டிலிருந்தே பணிபுரியும் Work From Home முறையை தான் பெரும்பாலான ஊழியர்கள் விரும்புவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
ஆய்வறிக்கை
நாஸ்காம்-பிசிஜி ஆய்வறிக்கையில் வெளியாகிய தகவலின்படி 'உலகம் முழுவதும் உள்ள இரண்டு லட்சம் ஐடி ஊழியர்களிடம் Work From Home குறித்து கருத்து கேட்கப்பட்டதாகவும், அதில் 70% பேர் Work From Home முறையில் வீட்டிலிருந்தே பணி செய்து கொண்டு அவ்வப்போது தேவைப்பட்டால் மட்டும் அலுவலகத்திற்கு செல்ல ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது.
கருத்து
20 சதவீதம் பேரும் முழுமையாக வீட்டிலிருந்து பணிபுரிய விரும்புவதாகவும், 5% பேர் முழுமையாக அலுவலகத்திற்கு வந்து பணி செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அறிக்கையில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் அலுவலகம் வந்து வேலை செய்யலாம் என்றும் மற்ற நாட்கள் வீட்டில் இருந்து பணி செய்யலாம் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நேரமிச்சம்
வீட்டிலிருந்து பணி செய்வதால் அலுவலக நிர்வாகத்திற்கும் சரி, ஊழியர்களுக்கும் சரியை பல்வேறு வசதிகள் உள்ளன. போக்குவரத்து நெரிசல், அலைச்சல், போக்குவரத்து செலவு ஆகிய பல காரணங்களால் ஐடி ஊழியர்கள் Work From Home முறையை விரும்புகின்றனர்.
செலவு மிச்சம்
அதேபோல் மிகப்பெரிய கட்டிடத்திற்கு வாடகை, மின்சார கட்டணம், இன்டர்நெட் கட்டணம் என அலுவலக நிர்வாகத்திற்கும் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் மிச்சம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்துடன் மகிழ்ச்சி
வீட்டில் இருந்து வேலை பார்ப்பதன் மூலம் சமூக ரீதியான தொடர்பு, அலுவலக நண்பர்கள், கலந்துரையாடல் ஆகியவைகளை இழந்தாலும், குடும்பத்தினருடன் அதிகமாக அதிக நேரம் செலவு செய்ய முடிகிறது என்றும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவு செய்ய முடிகிறது என்றும் ஐடி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நிரந்தரம்
அதுமட்டுமின்றி வீட்டிலிருந்தே பணி செய்வதால் ஒரு குறிப்பிட்ட நேரம்தான் வேலை பார்க்கவேண்டும் என்ற நிலை இல்லை என்பதும் நமக்கு சௌகரியமான நேரத்தில் வேலை பார்த்துக் கொள்ளும் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட காரணங்களால் பல நிறுவனங்கள் நிரந்தரமாகவே Work From Home முறையை நடைமுறைப்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றுதான் கூறப்படுகிறது.