உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் குறித்த தீர்வுகள் எடுக்கப்படாத நிலையில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் உலக நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு அதிகப்படியான நிதியுதவியை அளித்து வருகிறது.
உக்ரைன் நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களைத் தாய் நாட்டிற்குத் திரும்ப அழைக்கும் பணி அதிதீவிரமாக நடந்து வரும் வேளையில் இரு நாட்டு ராணுவமும் கடுமையாகப் போரிட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா மிகவும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
உக்ரைன் மக்கள்
ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து போரிட உக்ரைன் நாட்டில் ராணுவ வீரர்களைத் தாண்டி மக்களும் ஆயுதங்களுடன் போடி வருகின்றனர். உக்ரைன் நாட்டின் அதிபர் மக்களுக்கு அழைப்பு விடுத்தது மட்டும் அல்லாமல் அந்நாட்டில் இருந்து 18 வயதுக்கு அதிகமான ஆண்கள் வெளியேறவும் தடை விதித்துள்ளது.
டெஸ்லா நிறுவனம்
இதனால் உலக நாடுகளில் இருக்கும் உக்ரைன் மக்கள் போரிடுவதற்காக உக்ரைன் நாட்டிற்குள் குவியத் துவங்கியுள்ளனர். இந்த நிலையில் டெஸ்லா நிறுவனம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உக்ரைன் மக்களுக்கு உதவியுள்ளது.
3 மாத சம்பளம், வேலைவாய்ப்பு உறுதி
டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து உக்ரைன் குடிமக்களுக்கும் உக்ரைன் நாட்டில் போரிடச் செல்வோருக்கும் 3 மாத சம்பளமும் அளிக்கப்படுவது மட்டும் அல்லாமல் அவர்களின் வேலைக்கு உத்தரவாதமும் அளிக்கப்படுவதாக டெஸ்லா தனது ஊழியர்களுக்கு ஈமெயில் அனுப்பியுள்ளதாக அறிவித்துள்ளது.
முக்கியப் பகுதிகள்
மேலும் இந்த 3 மாத காலத்தைப் போரின் நிலவரத்தின் அடிப்படையில் நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா வர்த்தகச் சந்தையில் பல உக்ரைன் நாட்டவர்கள் பணியாற்றி வரும் காரணத்தால் டெஸ்லா நிறுவனத்தின் ஈமெயிலில் இப்பகுதிகள் குறிப்பிட்டு உள்ளது.
ஸ்டார்லிங்க் சேவை
எலான் மஸ்க் ஏற்கனவே ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்தி உக்ரைன் நாட்டில் இண்டர்நெட் சேவை அளித்து வரும் நிலையில், தற்போது ஸ்டார்லிங்க் கருவிகளைப் பயன்படுத்த டெஸ்ஸா பவர்வால்ஸ்-ஐ (Tesla powerwall) அளிக்க முடிவு செய்துள்ளது டெஸ்லா நிறுவனம்.
டெஸ்லா சூப்பர்சார்ஜர்
மேலும் உக்ரைன் நாட்டில் இருக்கும் 5000க்கும் அதிகமான டெஸ்லா கார் உரிமையாளர்களுக்கும் அனைத்து சூப்பர்சார்ஜர்களிலும் இலவசமாகப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது டெஸ்லா. இதன் மூலம் டெஸ்லா கார் மட்டும் அல்லாமல் பிற பிராண்டு கார்களும் இலவசமாகச் சார்ஜ் செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளது.
பிற நாடுகள்
மேலும் உக்ரைன் நாட்டின் டெஸ்லா கார் உரிமையாளர்கள் உக்ரைன் நாட்டில் மட்டும் அல்லாமல் போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளிலும் இலவசமாகச் சார்ஜ் செய்துக்கொள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.