டெல்லி: பட்ஜெட் என்றாலே நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம். இது ரொம்ப போரான விஷயம் என்று நினைப்பவர்கள் தான் இங்கு அதிகம். ஆனால் உண்மை அதுவல்ல நம் ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைக்க இருக்கும் விஷயம் என்றால் அது பட்ஜெட் தான்.
அத்தகைய பட்ஜெட் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டாமா? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
வரவிருக்கும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், என்னவெல்லாம் ஆச்சர்யங்களும், சுவாரஸ்யங்களும் காத்திருக்கிறது என்ற நிலையில், பட்ஜெட் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பட்ஜெட் என்ற சொல்லுக்கு அர்த்தம்
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் பட்ஜெட் என்ற வார்த்தைக்கு, அர்த்தம் என்ன தெரியுமா உங்களுக்கு. Bougette என்ற பிரெஞ்சு மொழியில் இருந்து வந்ததே பட்ஜெட் என்று கூறப்படுகிறது. Bougette என்ற வார்த்தைக்கு தோல் பை என்று பொருள். இதில் பழங்காலத்தில் பட்ஜெட் குறித்தான ஆவணங்களை தோல்பையில் பாதுகாப்பாக எடுத்து வந்து தாக்கல் செய்வார்களாம். இது பிற்காலத்தில் பட்ஜெட் என்றும் மாறியதாக கூறப்படுகிறது.
நீண்ட பட்ஜெட் உரை
ஆறு முறை தனது பட்ஜெட்டை தாக்கல் செய்த முன்னார் பிரதமர் மன்மோகன் சிங், 1991ல் நிதியமைச்சராக இருந்த காலத்தில் 18,650 சொற்களை உள்ளடக்கிய நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. இதே 1977ம் ஆண்டு 800 சொற்களை மட்டுமே கொண்ட மிகக் குறுகிய பட்ஜெட் உரை ஹெச்.எம் பட்டேல் தாக்கல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
எத்தனை நிதியமைச்சர்
இந்தியாவில் இதுவரை சுதந்திரத்திற்கு பின்பு 26 நிதியமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். ஏப்ரல் 7, 1860 அன்று இந்தியாவில் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் 10 முறை தனது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதற்கு அடுத்தாற் போல் இரண்டாவது இடத்தில் ப சிதம்பரம் 8 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
பட்ஜெட் நேரம்
1999 ஆம் ஆண்டு வரை பிப்ரவரி கடைசி வேலை நாளில் மாலை ஐந்து மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அப்போதைய அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா 1999ம் ஆண்டு முதல் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நேரத்தை மாற்றினார்.
பட்ஜெட் தேதியும் மாற்றம்
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி கடைசி வேலை நாளில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தேதியினை, அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார். இதோடு சுமார் 92 ஆண்டுகளாக தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டும், மத்திய பட்ஜெட்டில் இணைக்கப்பட்டது. இவ்வாறு முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, ஏப்ரல் 1ம் தேதி முதல் வரவு செலவு திட்டங்களை செயல்படுத்த போதுமான கால அவகாசத்தை இது கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
முக்கிய படைப்பு
இந்தியாவில் எந்தவொரு முக்கியமான நல்ல செயலையும் தொடங்குவதற்கு முன்பு இனிப்புடன் தொடங்குவது வழக்கமான செயலாகும். இதை எதிரொலிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலுக்கும் முன்னதாக, 10 நாட்களுக்கு முன்னால் அல்வா கிண்டும் நிகழ்ச்சியுடன் பட்ஜெட் அறிக்கை அச்சிடும் பணி தொடங்கப்படும். இது ஒரு பாரம்பரிய நிகழ்வாகும்.
பெண்கள் பட்ஜெட்
பிப்ரவரி 28, 1970ம் ஆண்டில் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, முதன் முறையாக தனது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்தியா வரலாற்றிலேயே முதல் பெண் பட்ஜெட் தாக்கல் செய்த பெருமை இவரையே சாரும். தான் பிரதமராக இருந்தாலும், அப்போதைய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இந்திரா காந்தி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எனினும் ஒரு நிதியமைச்சராக முழு நேர நிதியமைச்சராக தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான்.
பட்ஜெட் சூட்கேஸ்
பாரம்பரியமாக இந்திய பட்ஜெட் அறிக்கைகள் ஒரு லெதர் சூட்கேஸில் வைத்து எடுத்து வருவது வழக்கமான ஒரு செயலாகும். 1991ல் மன்மோகன் சிங் கறுப்பு நிற பெட்டியில் பட்ஜெட் அறிக்கையை வைத்து எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் 1998 - 99ல் யஷ்வந்த் சின்ஹா கறுப்பு நிற பையை எடுத்து வந்தாகவும், இதன் பின்னர் ப சிதம்பரம் மீண்டும் சிவப்பு நிற சூட்கேஸையும் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்ம்லா சீதாராமன் சூட்கேஸ் எதுவும் இல்லாமல், சிவப்பு நிற துணியில் அறிக்கையை கட்டி எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இது தான் கறுப்பு பட்ஜெட்
1973 - 74ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தான் கறுப்பு பட்ஜெட் என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் இதில் 550 கோடி ரூபாய் பற்றாக்குறையை ஈட்டியதாகவும் கூறப்படுகிறது. இதே 1997- 98ல் ப சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் கனவு பட்ஜெட் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த பட்ஜெட்டில் வருமான வரியை குறைத்தல், கார்ப்பரேட் வரிகளை குறைத்தல் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியதாகவும் கூறப்படுகிறது.