இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை கடுமையான போராட்டங்களுக்குப் பின் கட்டுப்படுத்தப்பட்டு மக்கள், இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் டெல்டா வைரஸ், 3வது கொரோனா அலை வர உள்ளதாகப் பல முக்கிய கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமியா கன்டி கோஷ் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
3வது கொரோனா தொற்று அலை
சமீபத்தில் எஸ்பிஐ வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில் இந்தியாவில் 3வது கொரோனா தொற்று அலை ஜூலை 2வது வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை அடையும் எனத் தெரிவித்திருந்தது. முதல் அலை, 2வது அலையைப் போராடிக் கடந்துள்ள இந்தியாவில் 3வது அலை வர உள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமியா கன்டி கோஷ், இந்தியாவில் 3வது அலை பாதிப்பைக் குறைக்கவும், 3வது அலையில் இருந்து தப்பிக்கவும் வேக்சின் மட்டுமே தீர்வு என்று கூறியுள்ளார்.
வேக்சின் தட்டுப்பாடு
உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருந்த நிலையிலும், மத்திய அரசு முன்கூட்டியே திட்டமிட்டு வேக்சின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்போது நாடு முழுவதும் வேக்சின் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஒன்றிய அரசு நடவடிக்கை
வேக்சின் தட்டுப்பாட்டைப் போக்க ஒன்றிய அரசு அடுத்தடுத்து புதிய வேக்சின்களுக்கு அனுமதி அளித்து வெளிநாட்டில் இருந்து வேக்சினை இறக்குமதி செய்வது மட்டும் அல்லாமல் உள்நாட்டிலும் உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை.
சௌமியா கன்டி கோஷ்
இந்நிலையில் ஜூலை 5ஆம் தேதி எஸ்பிஐ வெளியிட்ட "கோவிட் 19: தி ரைஸ் டூ பினிஷிங் லைன்" என்ற ஆய்வறிக்கையில் எஸ்பிஐ தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமியா கன்டி கோஷ் 3வது அலையில் உச்ச அளவை தீர்மானிக்கப்போவது வேக்சின் தான். எந்த அளவிற்கு வேக்சின் அதிகரிக்கப்படுகிறதோ, அந்த அளவிற்குக் கட்டுப்படுத்த முடியும்.
டெல்டா வகை வைரஸ்
இது மட்டும் அல்லாமல் இந்தியாவில் புதிதாகப் பரவி வரும் டெல்டா வகை வைரஸ் மற்றும் அதன் தொற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் சௌமியா கோஷ் எஸ்பிஐ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் 2வது தொற்று அளவை விடவும் 3வது தொற்றில் அலை 1.7 மடங்கு அதிகமாக இருக்கும் எனவும் சௌமியா கோஷ் கணித்துள்ளார்.
குடும்பங்களின் கடன் அளவு
மேலும் இந்தியாவில் குடும்பங்களின் கடன் அளவு நாட்டின் ஜிடிபி அளவில் 37.3 சதவீதமாக உள்ளது, கொரோனா தொற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இது 32.5 சதவீதமாக இருந்தது. இது நாட்டின் நிதி நிலையைக் கட்டாயம் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
டெபாசிட்கள் வெளியேறும்
இதேபோல் 2வது கொரோனா தொற்றுக் காலத்தில் வங்கிகளில் இருந்து அதிகளவிலான டெபாசிட்கள் வெளியேறியுள்ளது. இது மக்கள் மத்தியில் பணம் குறைவாக உள்ளதைக் காட்டுகிறது எனவும் எஸ்பிஐ வெளியிட்ட "கோவிட் 19: தி ரைஸ் டூ பினிஷிங் லைன்" அறிக்கையில் சௌமியா கோஷ் தெரிவித்துள்ளார்.