சென்னை போன்ற பெரு நகரங்களில் அதிக அளவு டீசல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் மாசு அதிகரித்து கொண்டே வருகிறது.
இதன் காரணமாக பெருநகரங்களில் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகளை இயக்க சுற்றுச்சூழல் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே டெல்லி உள்பட பல நகரங்களில் மின்சார பேருந்துகள் இயங்க தொடங்கிவிட்ட நிலையில் விரைவில் சென்னையிலும் மின்சார பேருந்து நிலையங்கள் இயக்கப்பட உள்ளன.
மின்சார பேருந்துகள்
பெங்களூரில் கடந்த 2014ஆம் ஆண்டு மின்சார பேருந்து இயக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து நாட்டில் உள்ள 64 நகரங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மின்சார பேருந்துகள்
டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் தற்போது மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னையில் மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிதியுதவி
ஜெர்மனி வங்கியான KfW வங்கியின் நிதி உதவியால் சென்னையில் 50 மின்சார பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சென்னை சாலைகளில் மின்சார பேருந்துகளை பார்க்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழல்
சென்னையை பொருத்தவரை தற்போது 3000க்கும் அதிகமான பேருந்துகள் இயங்கி வருகின்றன என்பதும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் அதிக அளவில் டீசல் பேருந்துகள் ஓடுவதால் அதிக அளவில் மாசு ஏற்படுவதன் காரணமாக சுற்றுச்சூழல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
100 பேருந்துகள்
மொத்தம் 500 பேருந்துகள் வாங்க சாலைப் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்தாலும் முதல்கட்டமாக 100 பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
15 ஆண்டு காலம்
மின்சார பேருந்துகள் 3300 மிமீ அகலம் மற்றும் 12,000 மிமீ உயரம் இருக்கும் என்பதால் இதில் பயணிகள் வசதியாக பயணம் செய்ய முடியும். இந்தப் பேருந்துகள் 15 ஆண்டு காலம் உழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
80 கிமீ வேகம்
80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும் மின்சார பேருந்துகள் முழுக்க முழுக்க ஏசி வசதி கொண்டது என்பதும் இந்த பேருந்தில் 35 பேர் அமர்ந்து கொண்டும், 35 பேர் நின்று கொண்டும் என மொத்தம் 70 பேர் பயணம் செய்யலாம் என்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதி செய்யப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சார்ஜ்
மின்சார பேருந்துகளை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 2 மணி நேரம் ஆகும் என்றும், ஆனால் அதே நேரத்தில் தேவைக்கு ஏற்ப 10 முதல் 30 நிமிடங்கள் வரை சார்ஜ் செய்ய சென்னையின் முக்கிய இடங்களில் சார்ஜ் ஸ்டேசன் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி
தினசரி சுமார் 250-300 கிமீ வரை இயங்கும் அளவுக்கு இந்த பேருந்துகளின் பேட்டரி வடிவமைக்கப்படும் என்றும் அதற்கேற்ற வகையில் சார்ஜ் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மற்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
6 மாதங்கள்
100 மின்சார பேருந்துகளை வாங்க தமிழக அரசு தற்போது டெண்டர் கோரியுள்ள நிலையில் இந்த டெண்டர் உரிய காலத்தில் இறுதி செய்யப்பட்டால் இன்னும் ஆறு மாதங்களில் சென்னையில் மின்சார பேருந்துகளில் மக்கள் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.