பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு அறிவித்து 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது நினைத்தது நடந்துள்ளதா? கறுப்பு பணம் ஒழிந்துள்ளதா? தீவிரவாதத்திற்கு வரும் பணத்தை தடுப்பது போன்ற பல முக்கிய அம்சங்களை இலக்காக கொண்டு செயல்படுத்தப்பட்டது.
இன்று இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்த இலக்கினை அடைந்துள்ளோமா? என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.
மேலும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது டிஜிட்டல் நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளதா? அரசின் இந்த முடிவு சரியானதா? தரவுகள் என்ன சொல்கின்றன வாருங்கள் பார்க்கலாம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அறிவிக்கப்பட்டது. இதனால் ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் அடுத்து என்ன செய்வதறியாது தவித்தனர். குறிப்பாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க நிற்கும் கூட்டத்தினை விட, வங்கி வாசல்களில் குழந்தை குட்டிகளோடு நின்றது மறக்க முடியாத தருணம்.
பணமதிப்பிழப்பால் தள்ளாடிய மக்கள்
தங்களது கையில் காசு இருந்தும் அப்போது செலவழிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். ஏன் அந்த காலகட்டத்தில் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க ஏடிஎம்-களில் நின்ற சில உயிரிழப்புகளும் அடங்கும். இப்படி மக்கள் 1000 ரூபாய்க்கும், 500-க்கும் தள்ளாடிய காலகட்டத்தில், கோடிக் கணக்கில் கறுப்பு பணத்தினை வைத்திருந்தவர்கள் பெரியளவி;ல் பாதிக்கப்பட்டார்களா என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.
கறுப்பு பணம் ஒழிந்ததா?
கறுப்பு பணத்தினை ஒழிப்பதற்காக இந்த திட்டத்தினை அரசு கையில் எடுத்தது என்றும் கூறப்பட்டது. ஆனால் அதில் பெரியளவில் கறுப்பு பணம் சிக்கியது என்று எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. அதெல்லாம் சரி அப்படி எனில் என்ன தான் மாற்றம் வந்துள்ளது. இந்த பணமதிப்பிழப்பால் யாருக்கு தான் நன்மை? பொருளாதாரத்தில் முக்கிய மாற்றம் வந்துள்ளதா? வாருங்கள் பார்க்கலாம்.
டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிப்பு
பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்கான ஒரு நடவடிக்கை என கூறப்பட்டது. இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. எனினும் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது நிச்சயம் அதிகரித்துள்ளது எனலாம். ஏனெனில் சிறு கிராமங்களில் இருக்கும் மளிகை கடை, பால் பூத் முதல் அம்பானியில் மால் வரையிலும் பரவியுள்ளது. சொல்லப்போனால் ஆரம்பத்தில் கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு என பயன்படுத்தியவர்கள், தற்போது யுபிஐ பரிவர்த்தனைக்கு மாறியுள்ளனர். இதனால் பெரும்பாலும் பணம் வங்கிக் கணக்கில் வர ஆரம்பித்துள்ளது என கூறப்படுகின்றது.
பணப்புழக்கம் அதிகரிப்பு
கடந்த நிதியாண்டில் இந்தியாவில் மொத்த பணப்புழக்கம் ஜிடிபியில் 14.5% ஆக இருந்தது. இதே கடந்த 2017ல் 8.2% ஆக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில் 16% என்ற அளவுக்கு வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக டிஜிட்டல் பயன்பாடு என்பது கணிசமானது கணிசமாக அதிகரித்து இருந்தாலும், இன்றளவிலும் கையில் பணப்புழக்கம் என்பது அதிகமாகவே இருந்து வருகின்றது.
நாமினல் ஜிடிபி
கடந்த 2015 - 16ம் ஆண்டில் 12.1% ஆக இருந்தது. இது அடுத்த 2016 - 17ம் ஆண்டில் 8.7% ஆக சரிவினைக் கண்டது. எனினும் அதன் பிறகு 2019 - 20ம் ஆண்டில் சற்று அதிகரித்து மீண்டும் 12% என்ற அளவுக்கு வளர்ச்சி கண்டது. இதுவே கடந்த 2020 - 21ம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக -3% ஆக சரிவினைக் கண்டுள்ளது. இது நாட்டில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் சரிவினைக் கண்ட நிலையில், இது பணமதிப்பிழப்பால் இல்லை என நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
வரி வருவாயை பாதித்ததா?
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரி வசூலை பாதித்ததா என்றால், அது மட்டும் காரணம் அல்ல, ஏனெனில் பணமதிப்பிழப்பினை தொடர்ந்து 2017ல் ஜிஎஸ்டியும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2019ல் அரசு கார்ப்பரேட்டுகளுக்கு வரி விகிதங்களை குறைத்தது. இதனால் நேரடி வரி வசூல் விகிதமானது கடும் சரிவினைக் கண்டது.
பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு, நீண்டகால நோக்கில் பலன் கொடுக்கலாம் என்றாலும், அதனை தொடர்ந்து கொரோனா வந்து படுத்தி எடுத்தது. ஆக இதுபோன்ற பல காரணங்களால் பொருளாதாரம் படு வீழ்ச்சியினை கண்டது. இதற்கிடையில் அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயும் வீழ்ச்சி கண்டது.
வரி வருவாய் இலக்கினை எட்டியதா?
கடந்த 2016 - 17ம் ஆண்டில் 105.21% ஆக இருந்த வரி வருவாய் இலக்கு 2020 - 21ல் 78.4% ஆக குறைந்துள்ளது. இது பணமதிப்பிழப்பிற்கு பிறகு படிப்படியாக தொடர்ந்து குறைந்து கொண்டே தான் வந்துள்ளது.
எனினும் வரவிருக்கும் ஆண்டுகளில் பொருளாதாரம் மீட்சி காணும் போது, இந்த வரி வசூலும் அதிகரிக்கலாம் என்றாலும், அதனை சரியாக கணிப்பது என்பது கஷ்டமான விஷயமே.
ஜிடிபி வளர்ச்சி
கடந்த 2016க்கு பிறகு ஜிடிபி விகிதமானது தொடர்ச்சியாக சரிவினையே கண்டு வருகின்றது. குறிப்பாக கடந்த 2016 - 17ம் ஆண்டில் 8.3% ஆக இருந்த ஜிடிபி விகிதமானது, 2019 - 20ல் வெறும் 4% ஆக சரிந்தது. இதே கொரோனாவின் காரணமாக 2020 - 21ல் -7.3 ஆக சரிவினைக் கண்டது. இது கொரோனாவின் காரணமாக சரிவினைக் கண்டு இருந்தாலும், 2016க்கு பிறகு ஜிடிபி விகிதமானது தொடர்ந்து சரிவினையே கண்டு வருகின்றது. எனினும் இது அடுத்து வரும் ஆண்டுகளில் மீண்டும் வலுவான வளர்ச்சி காணலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் தாக்கம்
யுபிஐ மூலமாக செய்யப்பட்ட பரிவர்த்தனையானது அக்டோபர் 2021 நிலபரப்படி 100 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. ஆனால் இந்த யுபிஐ ஆப்சன் ஆனது பணமதிப்பிழப்புக்கு பிறகே அறிமுகப்படுத்தப்பட்டது. இது விரைவான் வளர்ச்சியானது, கார்டு மற்றும் மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வெகுவாக குறைந்துள்ளன. குறிப்பாக கடந்த 2019 மற்றும் 2020, 21ல் இதுவரையில் குறைந்துள்ளது.
மொத்தத்தில் இந்த பணமதிப்பிழப்பால் பெரும் வளர்ச்சி எதுவும் காணவில்லை என்பதையே இந்த தரவுகள் சுட்டுக் காட்டுகின்றன.