இந்திய ஐடி நிறுவனங்களின் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மூன்லைட்டிங்.
குறிப்பாக இந்திய ஐடி தலைவர்கள் தங்களது ஐடி ஊழியர்கள் ஓரே நேரத்தில் கூடுதலான ஒரு நிறுவனத்தில் பணியாற்றினால் சீட்டிங் செய்வதாகவும், விதிமுறை மீறுவதாகவும், நாணயமற்ற முறையில் நடந்துகொள்வதாகவும் நினைக்கின்றனர்.
இதனால் பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பயமுறுத்தும் வகையில், மூன்லைட்டிங் செய்த பலரை பணிநீக்கம் செய்துள்ளது. ஆனால் இந்தப் பிரச்சனையை இதன் மூலம் கட்டாயம் தீர்க்க முடியாது என்பது அனைத்து ஐடி நிறுவன தலைவர்களுக்கும் தெரியும்.
இன்போசிஸ், டெக் மஹிந்திரா
நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான இன்போசிஸ், டெக் மஹிந்திரா போன்றவை தனது ஊழியர்களுக்கு ஓரே நேர்த்தில் இரண்டு நிறுவனத்தில் பணியாற்று அனுமதி அளித்துள்ளது. உண்மையில் மூன்லைட்டிங் பிரச்சனையைத் தீர்க்க சரியான வழி ஒன்று உள்ளது. இது மட்டும் நடந்தால் ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.
பணம் தான் காரணம்
இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் இருக்கும் ஊழியர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்துடன் கூடுதலாக ஒரு நிறுவனத்தில் பணியாற்ற மிகவும் முக்கியமான காரணம் சிலருக்கு அறிவு பசி, பெரும்பாலானவர்களுக்குப் பணம் தான் முக்கியக் காரணமாக உள்ளது.
ஜூனியர் மற்றும் சீனியர் ஊழியர்கள்
இந்திய ஐடி துறையில் ஜூனியர் மற்றும் சீனியர் ஊழியர்களுக்கு மத்தியிலான சம்பள இடைவேளை எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது. இத்தகைய நிலை இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் அனைத்து துறையிலும் இருக்கும் முக்கியப் பிரச்சனையாக விளங்குகிறது.
சம்பள வித்தியாசம்
அதாவது ஜூனியர் பிரிவில் இருக்கும் ஒரு ஊழியர் மாதம் 2000 ரூபாய் அளவிலான சம்பள உயர்வைப் பெறும் போது, அவர்களுடைய சீனியர் மேனேஜர்கள் புதிய BMW காரை வாங்குவதற்குத் திட்டமிட்டு வருகிறார்கள். இதுதான் இங்கு அடிப்படை பிரச்சனை, இதேபோல் நிறுவனத்தின் சிஇஓ-க்களுக்கு ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விடப் பல நூறு மடங்கு அதிகச் சம்பளம் அளிக்கப்படுவது சீனியர் மேனேஜர்கள் மத்தியில் பெரும் பிரச்சனையாக உள்ளது.
சம்பள இடைவெளி
இந்தச் சம்பள இடைவெளியை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்பது தான் தற்போது பெரும்பாலான ஊழியர்களின் நோக்கமாக உள்ளது. இதை ஈடுக்கட்டவே ஐடி ஊழியர்கள் உட்பட அனைத்துத் தரப்பு ஊழியர்களும் மூன்லைட்டிங் செய்யத் துவங்கியுள்ளனர்.
இந்திய நிறுவனங்களுக்கு நெருக்கடி
இந்திய நிறுவனங்கள் ஜூனியர் ஊழியர்களின் சம்பளத்தை எப்படி உயர்த்த முடியாத கட்டத்தில் உள்ளதோ அதேபோலத் தான் சீஇஓ-க்களின் சம்பளத்தைக் குறைக்க முடியாமல் உள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் மூன்லைட்டிங் போன்ற பிரச்சனைகளைக் கடந்து செல்ல வேண்டும் அல்லது இன்போசிஸ், டெக் மஹிந்திரா போல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இன்போசிஸ், டெக் மஹிந்திரா கண்டிஷன்
இதேவேளையில் இன்போசிஸ், டெக் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் முன்லைட்டிங்-ஐ ஏற்றுக்கொண்டாலும் மூன்லைட்டிங் செய்ய விரும்பும் அனைத்து ஊழியர்களும் தங்களது மேனேஜர் மற்றும் ஹெச்ஆர் பிரிவு அதிகாரிகள் மத்தியில் அனுமதி பெற்ற பின்னரே வேறு நிறுவனத்தில் பணியாற்ற முடியும். இந்த விதிமுறையை மீறும் பட்சத்தில் இன்போசிஸ், டெக் மஹிந்திரா-வும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக எச்சரித்துள்ளனர்.