வாஷிங்டன்: ஈரான் மற்றும் அமெரிக்கா நடுவேயான முதல் சுற்று போர் பதற்றம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. உலக சந்தைகள் நார்மல் நிலைக்கு திரும்பி உள்ளன. கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது.
ஈரான் நாட்டு ராணுவத் தளபதி சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்கியது. இதனால் இரு நாடுகள் நடுவே போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால், உலக பொருளாதாரம் ஆட்டம் கண்டது, இந்தியாவிலும் பங்குச் சந்தை உட்பட, தங்கம் விலை என பல்வேறு விஷயங்களில் அதன் தாக்கம் எதிரொலித்தது.
ஆனால் யார் செய்த புண்ணியமோ, கடந்த இரு நாட்களாக இரு நாடுகளிடையேயான போர் பதட்டம் தணிந்து உள்ளது. ராணுவ பலத்தை மட்டுமின்றி பொருளாதார பலமும் இந்தப் போர் பின்னணியில், முக்கிய அங்கம் வகிக்கிறது என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.
கீரி, பாம்பு
அமெரிக்காவுடன் முழு அளவிலான போரில் ஈடுபடுவதற்கு ஈரான் நாட்டு, பொருளாதாரம் கை கொடுக்காது என்பது அனைவரும் தெரிந்த ஒரு விஷயம். ஆனால் அமெரிக்காவும் கூட இந்தப் போரால் பொருளாதாரரீதியாக பாதிப்பு காணும் இடத்தில்தான் இருக்கிறது என்கிறார்கள் சில பொருளாதார வல்லுநர்கள். எனவே, கீரியும், பாம்பும் சண்டையிடப்போவதாக அறிவிக்கும் ஒரு வித்தைக்காரனை போல, இந்த இரு நாடுகளும் போரிடப் போவதாக உருமிக்கொண்ட இருக்குமே தவிர, நேரடியாக போரிடப் போவது இல்லை என்கிறார்கள் அவர்கள்.
குழுக்கள்
நியூ அமெரிக்கா அறக்கட்டளையின் பீட்டர் சிங்கர், சைபர் தாக்குதல்களின் அதிகரிப்புக்கு வாய்ப்புள்ளதாக கூறுகிறார். "ஈரான் அதன் பகையை வளர்ப்பதற்கு ஏராளமான குழுக்களை வைத்திருக்கிறது, அவை அமெரிக்காவிற்கு அருகில் இல்லை, ஆனால் தூரத்திலிருக்கும் உண்மையான அச்சுறுத்தலாகும். இதுவரை, அவர்கள் தொடர்ச்சியான இணைய தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மீண்டும் அது தொடரும் வாய்ப்பு அதிகம். "
தாக்குதலுக்கு வாய்ப்பு
ரைஸ் பல்கலைக்கழகத்தின் பேக்கர் இன்ஸ்டிடியூட்டில், ஆற்றல் மற்றும் உலகளாவிய எண்ணெ ஆய்வாளர் மார்க் பின்லே கூறுகையில், "ஈரான் நாற்பது ஆண்டுகளாக சமச்சீரற்ற போரை செய்து வருகிறது. ஆயில் டேங்கர்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் அல்லது ஒருவேளை ஆயில் குழாய் மீதான தாக்குதல்கள் நடந்தால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். " என்றார் அவர். ஹெஸ்புல்லா போன்ற தீவிரவாத குழுக்களால் குண்டுவெடிப்பு மற்றும் படுகொலைகள் அரங்கேற்றப்பட வாய்ப்பு உள்ளது என்றும் அவர் எச்சரிக்கிறார்.
பழைய காலம் இல்லை
இதுபோன்ற தாக்குதல்கள் கச்சா ஆயில் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். டிராவல், உற்பத்தி மற்றும் வேளாண்மை போன்ற துறைகள் எண்ணெய் விலை ஏற்றத்தால் அதிக பாதிப்பை சந்திக்கும் வாய்ப்பு உள்ளவை. இருப்பினும், உலகளாவிய பொருளாதாரத்தின் மீதான தாக்கம் 1970 களின் எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டதைப் போல பெரிதாக இருக்காது. பொருளாதாரங்கள் எண்ணெய் விலையை அதிகம் நம்பி இருக்கவில்லை.
அமெரிக்கா நிலை
இதற்கு ஷேல் எண்ணெய்க்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஷேல் ஆயில் கண்டுபிடிப்புகளால், அமெரிக்கா கிட்டத்தட்ட பெட்ரோலியத்தில் தன்னிறைவு பெற்றுவிட்டது. அதற்காக ஆயில் விலையேற்றத்தால் அமெரிக்கா பாதிக்கப்படாது என்று அர்த்தமல்ல. இதன் விளைவுகள் சீரற்றதாகவும் உள்ளூர்மயமாக்கப்பட்டதாகவும் இருக்கும். பல பிராந்தியங்கள், குறிப்பாக கிராமப்புற மற்றும் குறைந்த வசதி கொண்ட பகுதிகளை பாதிக்கும். ஆனால், டெக்சாஸ் மற்றும் அலாஸ்கா போன்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் உண்மையில் பொருளாதார வளர்ச்சியை பெறும்.
முழு போர் முடியாது
ஒரு முழுமையான யுத்தம், கச்சா எண்ணை விநியோகத்தில் நீண்டகால இடையூறுகளை ஏற்படுத்தும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்க்கான விலையில்,100 டாலர் வரை உயர்வை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் சிங்கர். "உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் மோசமான விளைவுகள் ஒரு தலைமுறைக்கு நீடிக்கும். ஈரான் அல்லது ஈராக்கில் மேலும் தாக்குதல்கள் நடந்தால், இப்படித்தான் நிலைமை போகும்" என்கிறார் அவர். ட்ரம்ப் நிர்வாகத்தில் மிகவும் சக்திவாய்ந்த குரல்கள் உள்ளன, அவை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்பட வேண்டாம். இவ்வாறு பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.