இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ 2022-23 ஆம் நிதியாண்டு வர்த்தகத்தில் அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்ட நிலையில், ஊழியர்களும் பல பிரச்சனைகளை எதிர் கொண்டனர்.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு முடியும் தறுவாயில் ஊழியர்களின் மனம் குளிரும் வகையில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் விப்ரோ ஊழியர்கள் மத்தியில் கொண்டாட்டமாகவும், குதுகலம் அதிகரித்துள்ளது.
அது சரி விப்ரோ வெளியிட்ட அறிவிப்பை டிசிஎஸ், இன்போசிஸ் ஆகியவை வெளியிடுமா..? முதல்ல என்ன அறிவிப்புன்னு நீங்க கேட்பது புரிகிறது வாங்க சொல்றேன்.
ESOP திட்டம்
பொதுவாக நிறுவனங்கள் தங்களது வளர்ச்சிப் பாதையை உறுதி செய்வதற்காகத் தத்தம் நிறுவனத்தில் பணியாற்றும் முக்கியமான ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், வளர்ச்சியை உறுதி செய்யவும் நிறுவனப் பங்குகளைக் கொடுத்து நிறுவன வளர்ச்சியில் சிறிய அளவிலான பங்கை அளிக்கும். இதை ESOP என அழைக்கப்படுகிறது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
பெரிய டெக் நிறுவனங்களில் உயர் மட்ட அதிகாரிகள், முக்கியப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமே ESOP போன்ற சலுகைகள் கிடைக்கும், ஆனால் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், புதிதாகத் துவங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் உங்கள் திறமையைக் காட்டினாலே போதும், நிறுவனம் உங்கள் திறமையைப் பாராட்டி ESOP திட்டம் மூலம் பங்குகளை அளிக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
விப்ரோ ESOP திட்டம்
இந்த நிலையில் இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ தனது ஊழியர்களுக்கு 2004 Restricted Stock திட்டத்தின் படி சுமார் 1,70,206 பங்குகளை அளித்துள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த ஊழியர்கள் விப்ரோ பங்குகளைப் பெறுவார்கள்.
6.7 கோடி ரூபாய்
இந்தப் பங்குகள் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கவில்லை, ஆனால் இந்த 1,70,206 பங்குகளின் மதிப்பு சுமார் 6.7 கோடி ரூபாய். இன்றைய வர்த்தக முடிவில் விப்ரோ பங்குகள் 0.37 சதவீதம் அதிகரித்து 397.80 ரூபாயாக உள்ளது, இதன் மூலம் விப்ரோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வேரியபிள் பே
விப்ரோ கடந்த காலாண்டில் லாப அளவீடுகளை அதிகரித்துக் கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக அதிகப்படியான ஊழியர்களின் வேரியபிள் பே தொகையைக் குறைத்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் A முதல் B3 வரையிலான அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் முழு வேரியபிள் பே தொகையை அளிப்பதாக அறிவித்தது.
வருவாய் வளர்ச்சி
இது விப்ரோ நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது esop திட்டத்தையும் செயல்படுத்திச் சுமார் 1.7 லட்சம் பங்குகளைக் கொடுத்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 14.6 சதவீதம் வரையிலான வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்த காரணத்தால் பிரஷ்ஷர்கள் முதல் டீம் லீடர் வரையில் அனைத்து ஊழியர்களுக்கும் வேரியபிள் பே தொகையை அளிக்கப்பட்டது.
புதிய தலைமை இயக்க அதிகாரி
ஜூன் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தில் 85 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விப்ரோ நிறுவனம் தனது செயல்திறனை மேம்படுத்துவதற்காகப் புதிய தலைமை இயக்க அதிகாரியை நியமனம் செய்தது.
அமித் செளத்ரி
விப்ரோ நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக அமித் செளத்ரி என்பவர் நியமிக்கப்பட்டார். விப்ரோ நிறுவனத்தில் இணைவதற்கு முன்பாகக் கேப்ஜெமினி நிறுவனத்தின் நிதிச் சேவை வணிகப் பிரிவின் தலைமை இயக்க அதிகாரியாகவும், அதன் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.