சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கித்துறையும் அதன் சேவைகளும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து உள்ளது. குறிப்பாக வங்கித்துறை இன்றளவில் 24x7 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. இன்றைய வாழ்க்கை முறையில் வங்கிச் சேவை மிக முக்கியமானதாக உள்ளது.
மேலும் வாடிக்கையாளர் சேவை, தனியார் வங்கிகள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளும் சரி, தனியார் வங்கிகளும் சரி வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவைகளுக்காகப் பல்வேறு விதமான கட்டணங்களை டிசைன் டிசைனாக வசூலிக்கின்றன.
இதில் வங்கிகள் தமக்கென்று சில கட்டண நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு, இந்தச் சேவைக் கட்டணங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வசூலிக்கின்றன.
பொதுத்துறை வங்கிகளை ஒப்பிடும்போது தனியார் வங்கிக் கட்டணங்கள் சற்று அதிகமாக இருந்தாலும் சேவைகளின் தரத்தை ஒப்பிடுகையில் தனியார் வங்கிகள் முன்னிலையில் உள்ளன.
சரி இந்தியாவில் ஒரு சாதாரணச் சேமிப்பு வங்கிக் கணக்கிற்காக வங்கிகள் எப்படி எல்லாம் கட்டணம் என்ற பெயரில் பணத்தைக் கரக்கிறது என்பதைப் பார்க்கலாம் வாங்க..
காலாண்டு சராசரி இருப்பு (பாலன்ஸ்)
நீங்கள் ஒரு சேமிப்புக் (எஸ்பி) கணக்கு அல்லது நடப்புக் கணக்கு வைத்திருந்தால் அதற்குண்டான குறைந்தபட்ச அளவு இருப்பை வைத்திருக்க வேண்டியது அவசியம். கணக்கிற்கு ஏற்ப இந்த அளவு வேறுபாடும்.
குறைந்தபட்ச அளவு இருப்பை வைத்திருக்காவிட்டால் வங்கிகள் அதற்கான அபராத கட்டணம் விதிக்கிறது.
டெபிட் கார்டு கட்டணம்
சில வங்கிகள் டெபிட் கார்டுகள் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ புதிய கார்டை வழங்கக் கட்டணம் வசூலிக்கின்றன. இதற்குண்டான கட்டணம் ரூபாய் 100 லிருந்து 500 வரை கார்டைப் பொறுத்து வேறுபடும்.
மேலும் வங்கிகள் நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக வாங்கும் ஆட்-ஆன் கார்டுகளுக்கும் கட்டணம் வசூலிக்கும்.
ஏடிஎம் பயன்பாடு
நீங்கள் ஏடிஎம் சேவையை மாதத்திற்கு மூன்று முறைக்கு மேல் பயன்படுத்தினால் 20 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆனால் இந்த விதி மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களுக்கு மட்டும் பொருந்தும். இந்தோர் மற்றும் போப்பால் போன்ற பிற நகரங்களில் 5 முறை பயன்படுத்தலாம்.
எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் தகவல்கள்
இதற்குக் காலாண்டிற்கு ரூபாய் 15 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது (எஸ் பி ஐ)
விவரப்பட்டியல் (ஸ்டேட்மெண்ட்)
இலவச அளவை விட அதிகமான தகவல்களுக்கு ஒரு பக்கத்திற்கு 100 ரூபாய் விதம் பழைய தகவல்களைப் பெற வசூலிக்கப்படுகிறது. எனினும் இணையச் சேவை மூலம் பிரிண்ட் செய்து கொள்வதும் உங்கள் கம்பியூட்டரில் சேவ் செய்து கொள்வதும் சிறந்தது.
காசோலை திருப்பம் (பவுன்ஸ்)
காசோலை ஒருவருக்குத் தரப்பட்டு அது பணமின்றித் திரும்பினால் இருவருக்குமே அபராத கட்டணம் விதிக்கப்படும். இது 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும்.
பணப் பட்டுவாடா நிறுத்தம்
நீங்கள் ஒரு காசோலையைக் கொடுத்து அதனை ஏதோ ஒரு காரணத்திற்காக நிறுத்த விரும்பினால்ஸ அதற்கு 50 ரூபாயும் சேவைக் கட்டணமும், மூன்று காசோலைகளுக்கு 300 ரூபாயும் சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படும்.
பாஸ்வேர்ட் மற்றும் பின் நம்பர் மாற்றம்
எடுத்துக்காட்டாக ஹெச் டி எப் சி வங்கி பின் நம்பரை மாற்ற நீங்கள் அந்த வங்கிக் கிளையில் விண்ணப்பித்தால் அதற்கு 50 ரூபாய் வசூலிக்கப்படும்.
கணக்கில் போதிய பணம் இல்லாதிருத்தல்
உலகின் ஏதாவது ஒரு பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் அல்லது விற்பனைக் கூடத்தில் பயன்பாட்டின்போது பணம் இல்லாமல் இருந்தால் 25 ரூபாய் ஒவ்வொரு முறையும் சேவைக் கட்டணத்துடன் வசூலிக்கப்படும்.
கணக்கை முடித்தல்
கணக்கைத் திறந்து ஒருவருடத்திற்குள் மூட நினைத்தால் வங்கியால் அந்தக் கணக்கைத் திறக்க செய்த செலவை வசூலிக்க இயலாது. எனவே இதற்கான கட்டணம் கணக்கைப் பொறுத்துக் குறைந்த பட்சம் 100 ரூபாயாக இருந்தாலும் தனியார் வங்கிகளில் 250 முதல் 1000 ரூபாய் வரை இருக்கும். ஹெச் டி எப் சி வங்கி 500 ரூபாய் வசூலிக்கிறது.
முடிவாக
இந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுகிறது. எனவே நீங்கள் கணக்கைத் துவங்கும் முன் விதிமுறைகள் அனைத்தையும் ஒரு முறை படித்துப் புரிந்துகொள்வது நல்லது. ஓகேவா? வேறு வழியே இல்லை.
அல்லது வங்கி சேவைகள் மற்றும் கட்டணங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் சேவை மையத்தின் இலவச எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளுங்கள்.