இப்போதெல்லாம் யாருக்காவது பணம் அனுப்ப வேண்டுமென்றால், வங்கிக்குச் சென்று படிவங்களைப் பூர்த்திச் செய்து, வரிசையில் நின்று கஷ்டப்பட வேண்டியதில்லை. இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே, ஆன்லைன் பேங்கிங் எனும் இணையவழி வங்கி சேவையில் சுலபமாகப் பரிவர்த்தனைகளைச் செய்துவிடலாம்.
நல்ல விஷயம் தானே! இதைப் பயன்படுத்தி வங்கி கணக்கை கண்காணிப்பது, கட்டணங்களைச் செலுத்துவது, பணப் பரிமாற்றம் எனப் பலவற்றைச் செய்யலாம். மேலும், நமது நிதி கட்டமைப்பை நன்கு பராமரிக்க முடியும். இணையவழி வங்கி சேவைகள், நுகர்வோர் வங்கிகளுக்குக் கூடுதல் வசதியாக இருப்பது மட்டுமல்லாமல், வங்கிகளுக்கு மாற்றாகவும் இருக்கிறது.
இந்நிலையில் இணைய வங்கிகளுக்கான (Internet Banks) தேவை என்ன, அதிலுள்ள குறைகள் என்ன..? இணைய வங்கியியலுக்கும் இணைய வங்கிக்கும் வித்தியாசம் உள்ளது.
இணைய வங்கிகளின் பரிணாம வளர்ச்சி
பாரம்பரியமாகக் கட்டிடங்களில் இயங்கிவந்த வங்கிகள், 1990 களின் தொடக்கத்தில், தங்கள் செயல்பாட்டு செலவுகளைக் குறைக்க, குறிப்பிட்ட வங்கி சேவைகளை இணைய வழியில் வழங்க முயற்சி எடுத்தன. அதில் அடைந்த வெற்றியின் காரணமாக, அனைத்து வங்கிகளும் மேம்படுத்தப்பட்ட மற்றும் பல்வேறு வசதிகள் கொண்ட இணையதளத்தைக் கட்டமைத்து, புது வங்கி கணக்குகளைத் திறத்தல், படிவங்களைப் பதிவிறக்கம் செய்தல், கடன் விண்ணப்பங்களைப் பரிசீலித்தல் போன்ற பணிகளை அதன்மூலமே செய்தன.
அடுத்தகட்ட வளர்ச்சி
கிளை அலுவலகங்களே இல்லாமல், தனது அனைத்து வித வங்கி சேவைகளையும் இணையதளம் மூலமாகவே வழங்கும் 'இணையவழி வங்கிகள்' தொடங்கப்பட்டன. 'மெய்நிகர்' அல்லது 'நேரிடை' வங்கிகள் என அழைக்கப்பட்ட இவ்வங்கிகளில், பணியாளர்கள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் இல்லாததால், அந்தப் பணத்தை வைப்புநிதிக்கு அதிக வட்டிவிகிதம், கடனுக்குக் குறைந்த வட்டி, சேவை கட்டணங்கள் குறைவு எனச் சலுகைகளாகத் தருகின்றன.
மெய்நிகர் வங்கி
முழுவதுமான பயன்பாட்டுக்கு வந்த நேரிடை வங்கி ' செக்யூரிட்டி பர்ஸ்ட் நெட்வொர்க் பேங்க்' FDIC - ஆல் காப்பீட்டுச் செய்யப்பட்டது. அட்லாண்டாவை தலைமையிடமாகக் கொண்டு, 1995 அக்டோபர் 18 ல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வங்கி, தொடக்கத்தில் அதிக லாபமீட்டாவிட்டாலும், 3 ஆண்டுகளுக்குப் பின் மெய்நிகர் வங்கி என்ற கருத்துருவை நிரூபித்தது.
இணையவழி வங்கிகளின் நன்மைகள்
இணையவசதி உள்ள எந்தவொரு இடத்திலிருந்தும் நேரிடை வங்கிகளைப் பயன்படுத்தலாம். தொழில்நுட்ப ரீதியான பராமரிப்புக் காலங்களைத் தவிர, 365 நாட்களும் 24 மணிநேரமும் வங்கிசேவைகளைப் பெறலாம். இணையவசதி இல்லையென்றாலும் கூட வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலம் சேவைகளைப் பெறலாம். பண இருப்பு விவரங்கள் மற்றும் இதர தரவுகளைச் சில பொத்தான்களை அழுத்துவதன் மூலம் எளிதாகப் பெறலாம். இதன் மூலம் வேகமான, எளிதான, பயனுள்ள வங்கிசேவையை வாடிக்கையாளர் பெற முடியும்.
நேரிடை வங்கி கணக்குகளைப் பராமரிப்பது மிகவும் எளிதானது. மின்னஞ்சல் முகவரியை மாற்றுவது, நடப்பு வட்டிவிகிதத்தை அறிவது, விவரங்களைச் சரிபார்ப்பது போன்றவற்றைச் சில நிமிடங்களில் செய்யலாம்.
சிறந்த வட்டி விகிதங்கள்
வங்கி கட்டமைப்புகள், பணியாளர்கள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் இல்லாததால், நேரிடை வங்கிகள் அந்தப் பணத்தை வைப்புநிதிக்கு அதிக வட்டிவிகிதம், கடனுக்குக் குறைந்த வட்டி, சேவை கட்டணங்கள் குறைவு எனச் சலுகைகளாகத் தருகின்றன. மேலும் இவை, அதிக லாபம் தரும் வங்கிகணக்குகள், முதலீட்டுப் பத்திரங்கள், முன்கூடியே எடுக்கப்படும் பத்திரங்களுக்கு அபராதம் இல்லை எனச் சலுகைகளை வாரியிறைக்கின்றன. சில வகை வங்கி கணக்குகளை, குறைந்தபட்ச இருப்பு, வைப்புநிதி, சேவைகட்டணங்கள் இல்லாமல் கூடத் திறக்க முடியும்.
சேவைகள்
பாரம்பரிய வங்கிகளைக் காட்டிலும் நேரிடை வங்கிகள், விரிவான வசதிகளைக் கொண்ட நல்ல பலமான இணையதளத்தை வைத்துள்ளன. அதன் மூலம் நிதிநிலை திட்டமிடல், நிதி கணிப்புகள், முதலீட்டு ஆய்வுகள், கடன் கணிப்பான்கள் மற்றும் பங்குவர்த்தகத் தளம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கட்டணங்களைச் செலுத்துதல், வரிப் படிவங்கள் நிரப்புதல், வறிதாக்கல் வசதிகளும் உள்ளன.
எளிதாக இயங்குதல் (Mobility)
நேரிடை வங்கிகள் தற்போது கைப்பேசியில் வங்கிசேவைகளைப் பெறும் வசதியையும் கொண்டுள்ளது. ஸ்மார்ட் போன்களில் உள்ள செயலிகளின் மூலம் இன்னும் எளிதாக நேரிடை வங்கிகளைப் பயன்படுத்தலாம்.
பரிமாற்றங்கள்
பாரம்பரிய வங்கிகணக்குகளில் இருந்து, தானியங்கி மின்னணு பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இந்த அளவில்லா பரிமாற்றங்களுக்கு நேரிடை வங்கிகள் கட்டணம் வசூலிப்பதில்லை. வேறு வங்கி பரிமாற்றங்களுக்கும் கட்டணம் இல்லை. மேலும், தானியங்கி கட்டணம் கட்டுதல், நேரிடை வைப்பு நிதி போன்ற வசதிகளும் உள்ளன.
சுலபமாகப் பயன்படுத்தலாம்
பாரம்பரிய வங்கி கணக்குகளைக் காட்டிலும், அதிகத் தகவல்களைத் தராமல் இந்த நேரிடை கணக்குகளைத் திறக்க முடியும். இணையத்திலேயே தகவல்களை உள்ளீடு செய்ய, படிவங்களைப் பதிவிறக்க, மின்னஞ்சல் அனுப்ப வசதிகள் உள்ளன. ஏதாவது பிரச்சனை என்றால், உடனே வங்கியை தொலைப்பேசி அல்லது மின்னஞ்சல் வாயிலாக அணுகலாம். மேலும் ஒரு வசதியாக, ஏற்கெனவே நாம் பணம் அனுப்பியவர்களின் தகவல்கள் சேமிக்கப்படுவதால், அதை மீண்டும் உள்ளீடு செய்யாமல் பயன்படுத்தலாம்.
நேரிடை வங்கிகள் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக உள்ளது. மின்னணு பரிவர்த்தனைகளுக்குக் காகிதங்கள் தேவையில்லை. வாகன போக்குவரத்தை குறைத்து மாசு கட்டுப்படுத்தப்படுகிறது. அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் தேவை குறைகிறது.
நேரிடை வங்கிகளின் குறைபாடுகள்
இணையவழி நேரிடை வங்கிகளிலும் சில குறைபாடுகளும், சிரமங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை இங்கே காணலாம்.
வங்கி உறவுகள்
பாரம்பரிய வங்கி சேவைகளின் மூலம், வங்கிகளுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவை வளர்த்துக்கொள்ள முடியும். வங்கி கிளையில் உள்ள ஊழியர்களுடன் பரிச்சயமானால், கடன் மற்றும் சிறப்புச் சேவைகளில் முன்னுரிமை பெறலாம். மேலாளருடன் நல்லுறவு பேணினால், அவர் மூலம் உங்கள் வங்கிகணக்குகளின் சில சலுகைகள் பெறலாம். சேவைக் கட்டணம் போன்ற பிரச்சனைகளை எளிதில் தீர்க்கலாம்.
வங்கி ஊழியர்கள், உங்களின் தனிப்பட்ட தேவைகளை எளிதில் தெரிந்துகொள்வார்கள். உங்களுக்கு அதிக மூலதனம் கொண்ட தொழில் கணக்கு துவங்க உதவிகள் கிடைக்கும். தொழிலுக்கான தேவைகள் மற்றும் திட்டமிடலுக்கு வங்கியின் உதவி எளிதில் கிட்டும்.
பரிவர்த்தனை பிரச்சனைகள்
சிக்கலான பரிவர்த்தனைகள், முகவரி மாற்றம் போன்றவை நேரிடையாகச் சந்தித்துத் தீர்க்கப்பட வேண்டியவை. பாரம்பரிய வங்கிகள் தனது ஊழியர்களைச் சந்திக்க வைத்து இதைச் சரிசெய்யும். ஆனால், நேரிடை வங்கிகளுக்கு இது மிகக் கடினம்.
அதிகப் பணப் பரிமாற்றம்
நீங்கள் அடிக்கடி பணம் செலுத்துபவராக இருந்தால், சிறந்த , எளிதான முறையைக் கொண்ட பாரம்பரிய வங்கிகளே சிறந்தது. மேலும் குறை என்னவென்றால், நேரிடை வங்கிகள் சொந்தமாகப் பணம் எடுக்கும் இயந்திரங்களை (ஏடிஎம்) வைத்திருக்கவில்லை. வேறு வங்கிகளுடன் அவை உடன்பாடு வைக்கவில்லை என்றால், உங்கள் ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.
வழங்கப்படாத சேவைகள்
காப்பீடு , தரகு கணக்குகள் போன்ற பல நிதி சார்ந்த சேவைகளை நேரிடை வங்கிகள் வழங்குவது இல்லை.பாரம்பரிய வங்கிகள், தங்கள் சிறந்த வாடிக்கையாளர்களுக்கு , தேவையான வட்டிவிகிதம் மற்றும் முதலீட்டு அறிவுரைகளை இலவசமாகத் தருகிறது.
முக்கியமான சேவைகள்
மேலும் வழக்கமான சேவைகளான, நோட்டரி வழங்குவது, வங்கி உத்திரவாத கடிதம் போன்றவை நேரிடை வங்கிகளில் தரப்படுவதில்லை. ஆனால், இவை பெரும்பாலான நிதி மற்றும் சட்டரீதியான பரிவர்த்தனைக்குத் தேவைப்படுபவை.
பாதுகாப்பு
பாரம்பரிய வங்கிகளுக்கான, அனைத்துச் சட்டங்களும், ஒழுங்குமுறைகளும் நேரிடை வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால் , வங்கி கணக்குகள் FDIC ஆல் பாதுகாக்கப்படுகின்றன. அதிநவீன குறியாக்கம் (Encryption)மூலம் கணக்குகள் பாதுகாக்கப்படுகிறது. எனினும், எந்த அமைப்பு ம் முழுவதும் சரியானது இல்லையே! ஆகவே, அங்கீகரிக்கப்படாத ஊடுருவல்கள், தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் அதிகம். நாம் எளிதில் கணக்குகளைக் கண்காணிக்கமுடியும் என்பதால், அவற்றைத் தடுக்க முடியும்.
தொடர் கண்காணிப்பு
பெரும்பாலான வங்கிகள், இணையத்தில் அனைத்துக் கண்காணிப்பு அமைப்புகளையும் வைத்துள்ளதால், இந்த ஊடுருவல்களை எளிதில் கண்டறியப்பட்டு, உடனுக்குடன் விசாரிக்கப்படுகிறது. அவ்வளவு ஏன், வாடிக்கையாளர் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகிறது.
சவால்
மற்ற வங்கிகளைக் காட்டிலும், நேரிடை வங்கிகளுக்கு இந்த இணையவழி குற்றங்கள் சவாலான ஒன்றாகவே இருக்கும். எனவே, நேரிடை வங்கிகளில் கணக்கு துவங்கும் முன், அதன் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கொள்கைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
இப்போது, நேரிடை வங்கிகளால், வங்கித்துறையில் போட்டிகள் அதிகரித்து வருகிறது. பாரம்பரிய மற்றும் நேரிடை வங்கிகள் அதற்கே உரித்தான நிறைகளும் குறைகளும் இல்லாமல் இல்லை. எனவே, ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பது நல்ல முடிவாக இருக்காது. அனைவருக்கும் இது சாத்தியம் இல்லையென்றாலும், இரண்டிலும் கணக்கு துவங்கி சலுகைகளை அனுபவிப்பதே புத்திசாலித்தனமானது.
நேரிடை வங்கிகளின் இணையவழி சேவைகள், சிறந்த வட்டி விகிதமும் கிடைக்கும். பாரம்பரிய வங்கிகளின் மூலம் வங்கிகளின் நல்லுறவும் கிடைக்கும்.