முடிவுக்கு வந்துவிட்டது சில இலவச வங்கி சேவை. சில வங்கிகள் கடந்த நவம்பர் 1 முதல் சில பண பரிவத்தனைக்கு கட்டணங்களை வசூலிக்க ஆரம்பித்துள்ளன.
அந்த வகையில் பேங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ வங்கிகள் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இவ்விரு வங்கிகளும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்களை உயர்த்தியுள்ளதாகவும், கட்டணங்களை வசூலிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளன.
நோ இலவச சேவை
ஆக மொத்தத்தில் இந்த வங்கிகளில் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு இனி இலவச சேவை கிடையாது. அதாவது குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பணத்தினை கையாளும் போது கட்டணம் வசூலிக்க உள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது. இந்த லிஸ்டில் ஆக்ஸிஸ் வங்கி ஏற்கனவே கட்டணம் வசூலித்து வருகின்றது.
மெஷினில் டெபாசிட் செய்ய கட்டணம்
ஐசிஐசிஐ வங்கி, இனி வங்கி விடுமுறை நாட்களில், பணம் டெபாசிட் செய்ய 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் என்று தெரிவித்துள்ளது. ஆக வாடிக்கையாளர்கள் இனி விடுமுறை நாட்களில் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நாட்களில் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை பண இயந்திரத்தை பயன்படுத்த வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
விடுமுறை நாட்களில் தான் கட்டணம்
எனினும் இந்த கட்டணம் இயந்திரங்களில் மட்டுமே என்று இவ்வங்கி தெளிவு படுத்தியுள்ளது. ஒரு வாடிக்கையாளர் வங்கி நேரத்திற்கு அப்பால் ஒரு வங்கிக் கிளையில் பணத்தினை ஏற்றுக் கொள்ளும் டெபாசிட் மெஷினில் டெபாசிட் செய்தால் மட்டுமே இந்த கட்டணங்கள் பொருந்தும். அதுவும் 10,000 ரூபாய் வரையில் டெபாசிட் செய்பவர்களுக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை எனவும் இவ்வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாக செய்திகள் கூறுகின்றன.
அடிப்படை சேவைகளுக்கு கட்டணங்கள் இல்லை
ஏற்கனவே கணிசமான தொகைக்கு மேலே செல்லும் போது சில வங்கிகள் கட்டணங்களை வசூலித்து தான் வருகின்றன. ஆனால் அந்த கட்டணம் தற்போது அதிகமாகியிருக்கலாம். இருப்பினும் அடிப்படை வங்கி சேவைகளுக்கு இந்த கட்டணங்கள் கிடையாது. வங்கிகள் அல்லது வணிக நிறுவனங்கள், சேவைகள் மற்றும் வசதிகளை வழங்குவதற்கான செலவினை மீட்டெடுக்க வேண்டும். ஆக வங்கி விடுமுறை நாட்களில் இந்த கட்டணங்கள் இருக்ககூடும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும். ஆனால் ரிசர்வ் வங்கி இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாக மணி கண்ட்ரோல் செய்திகள் கூறுகின்றது.
ஆக்ஸிஸ் வங்கியும் கட்டணம் வசூல்
கடந்த ஆகஸ்ட் 1ல் இருந்து ஆக்சிஸ் வங்கியும் கட்டணங்களை வசூலித்து வருகின்றது. ஆகஸ்ட் 1, 2020 முதல், வங்கி நேரத்திற்கு பின்பு (மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை) மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் டெபாசிட் மெஷின்களில் செய்யும் டெபாசிட்களுக்கு, 50 ரூபாய் வசூலித்து வருகின்றது. தற்போது இவ்வங்கியில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 50 ரூபாய் சலுகைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பாங்க் ஆப் பரோடாவில் என்ன கட்டணம்?
நவம்பர் 1 முதல் பாங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறிய பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது. கரண்ட் அக்கவுண்ட் / ஓவர் டிராஃப்ட் / சிசி-யிலிருந்து அடிப்படைக் கிளை, உள்ளூர் அடிப்படை அல்லாத கிளை மற்றும் வெளிநிலைக் கிளை மூலம் மாதத்திற்கு 3 முறை பணத்தை திரும்பப் பெறுவது இப்போது இலவசம். அதே நேரத்தில், நான்காவது முறையாக, ஒரு பரிவர்த்தனைக்கு 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
மெட்ரோ நகரங்களில் எவ்வளவு கட்டணம்
இதே மெட்ரோ நகரங்களில் டெபாசிட் மூன்று முறைக்கு மேல் செய்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதுவே மூத்த குடி மக்கள், பென்சன் வாங்குபவர்கள், சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள், புற நகர் பகுதி வாடிக்கையாளர்களுக்கு 40 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும், என்றும் பாங்க் ஆப் பரோடா அறிவித்துள்ளது.
பணம் எடுக்க எவ்வளவு கட்டணம்
ஒரு மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே வழங்கப்படும். எனினும் இதில் ஏடிஎம் சேவை இல்லை. மெட்ரோ நகரத்தில் உள்ள சேமிப்பு கணக்கு வாடிக்கையாளார் ஒருவர் மூன்று முறைக்கு மேல் பரிவர்த்தனை செய்தால், ஒரு பரிவர்த்தனைக்கு 125 ரூபாய் கட்டணமாக கொடுக்க வேண்டியிருக்கும். இது கிராமப்புறங்களில், மூத்த குடிமக்கள், பென்சன் பெறுவோர் ஒரு பரிவர்த்தனைக்கு 100 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும் என BOB தெரிவித்துள்ளது.
இனி கட்டணம் கொடுக்க வேண்டும்
இதே நடப்புக் கணக்கு / ஓவர் டிராஃப்ட் / ரொக்க கிரெடிட் / பிற கணக்குகளுக்கு, நவம்பர் 1 முதல் அடிப்படை மற்றும் உள்ளூர் அடிப்படை அல்லாத கிளைகளில் பண கையாளுதல் கட்டணம் வசூலிக்கப்படும், இது ஒரு கணக்கிற்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய, ரூ.1000 க்கு 1 ரூபாயாக இருக்கும் என்கிறது BOB. ஆக இனி நீங்கள் டெபாசிட் செய்யும்போது இந்த கட்டணத்தினையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும்.
மேற்கண்ட வங்கிகள் தவிர, பிஎன்பி, பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளும் சில கட்டணங்களை வசூலித்து வருகின்றன.