எல்லோருக்கும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதனை செயல்படுத்துவதில் தான் பிரச்சனையே. அதிலும் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை எதில் முதலீடு செய்வது என்பது தான்.
இது குறித்து குட் ரிட்டர்ன்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், 26.64% பேர் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டத்தினையும், 13.66% பேர் தங்கத்தினையும், இதே பங்கு சந்தையில் 6.83% பேரும், மியூச்சுவல் ஃபண்டில் 6.83% பேரும் முதலீடு செய்ய விரும்புவதாகத் தான் தெரிவித்துள்ளனர். எனினும் 46.345 பேர் சேமிப்பு இல்லை என்றே கூறியுள்ளனர்.
ஆக இந்தளவுக்கு நம் மக்களிடன் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு உள்ளது. அப்படி முதலீடு செய்யும் பலரும் நாடுவது அஞ்சலக சேமிப்பினைத் தான். அப்படி ஒரு அஞ்சலக சேமிப்பினைத் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். அதிபும் நிபுணர்கள் இந்த அஞ்சல சேமிப்பினை வங்கி டெபாசிட்டுகளை விட சிறந்தது என்று கூறுகின்றனர் ஏன்? வாருங்கள் பார்க்கலாம்.
பிபிஎஃப் ஒரு பாதுகாப்பான முதலீடு
நம் முதுமை காலத்திற்கு ஏற்ற ஒரு முதலீட்டு திட்டம் தான், பிபிஎஃப் எனப்படும் அரசின் பொது வருங்கால வைப்பு நிதி. அதுவும் ரிஸ்க் குறைந்த, அரசின் ஒரு பாதுகாப்பான திட்டம், கணிசமான வருவாய் கொடுக்கும் பாதுகாப்பான முதலீடு என்றால் வேண்டாம் என்று கூற முடியுமா என்ன?
அரசின் அம்சமான திட்டம்
நீண்டகால நோக்கங்களுக்காக, அதுவும் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம், இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. அதிலும் கடந்த சில மாதங்களாக வங்கிகளில் வட்டி விகிதம் குறைந்து வருவதால், வங்கி டெபாசிட்டுகளுக்கும் வட்டி விகிதம் குறைந்துள்ளது. ஆனால் அரசின் இது போன்ற சேமிப்பு திட்டங்களில் பெரியளவில் வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படவில்லை. உண்மையில் இது டெபாசிட்டினை விட நல்ல திட்டம் தானே.
கண்னை கவரும் வட்டி விகிதம்
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள முக்கிய அம்சமே வட்டி விகிதம் தான். ஏனெனில் முன்னணி வங்கிகளில் கூட 2.5 - 6%குள் தான் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஆனால் அரசின் இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.1% ஆகும்.நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கூட 5.5% வரை தான் வட்டியினை வழங்கி வருகின்றது.
என்ன வரி சலுகை?
அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் வருமான வரி பிரிவு 80சியின் கீழ் வரி சலுகை உண்டு. இது 1.5 லட்சம் வரையில் வரிச்சலுகை பெற முடியும். எனினும் இந்த முதலீட்டின் மூலம் பெரும் வருமானத்திற்கு வரி சலுகை கிடையாது. ஆனால் வங்கி டெபாசிட்டுகளில் இந்த வரிச்சலுகை கிடையாது.
முன்கூட்டியே பணத்தினை எடுத்தல்
அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் பணத்தினை 5 வருடம் கழித்தே எடுக்க முடியும். ஆனால் வங்கி டெபாசிட்டுகளில் குறைந்தபட்ச லாகின் அம்சங்களும் உண்டு. ஆக குறைந்த காலத்தில் நீங்கள் தேவைப்படும் போது பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். அதே போல் இந்த சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் உங்களது முதலீடு லாக் செய்யப்படும். ஆனால் வங்கி டெபாசிட்டுகளில் இந்த காலம் மிக மிகக் குறைவு. உங்களின் விருப்பத்தின் பேரில் தேர்தெடுத்துக் கொள்ளலாம்.
அதிகபட்சம் வரம்புத் தொகை
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதிகபட்சம் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே முதலீட்டினை செய்ய முடியும். ஆனால் வங்கி டெபாட்சிட்களில் அப்படி இல்லை. அதே போல் இந்த வைப்பு தொகையினை வைத்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகே கடன் பெற முடியும். ஆனால் பிக்ஸட் டெபாசிட்டுகளில் கடன் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும்.
முதலீடு செய்யும் வரம்பு?
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ள முடியும். ஆனால் பிக்ஸட் டெபாசிட்டுகள் அப்படி செய்ய முடியாது. ஆக மொத்தத்தில் வங்கி பிக்ஸட் டெபாசிட்டுகள் நெகிழ்வுத் தன்மையுடன் உள்ளது. ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் உகந்ததாக இருக்கும்.
அதெல்லாம் சரி இந்த திட்டத்தில் எப்படி இணைவது? என்ன தகுதி? வாருங்கள் பார்க்கலாம்.
யார் இதற்கு தகுதியானவர்?
இந்தியாரான எந்தவொரு தனிப்பட்ட நபரும் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை துவங்க தகுதியானவர் தான். என்ஆர்ஐ-களுக்கு இந்த கணக்கு தொடங்க அனுமதியில்லை. ஒரு வேளை இந்த கணக்கினை தொடங்கும்போது இந்தியாவில் இருந்து, பின்னர் வெளி நாடுகளுக்கு சென்றிருந்தால், அவர்கள் இந்த வைப்பு நிதி கணக்கு முதிர்வடையும் வரை தொடர்ந்து கொள்ளலாம். இதே மைனர் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரோ இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் ஒருவர் ஒரு கணக்கினை மட்டுமே தொடங்க முடியும்.
எவ்வளவு பங்களிப்பு செய்யலாம்?
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம். அதாவது 12 தவணைகளாக உங்களது தொகையை நீங்கள் செலுத்திக் கொள்ளலாம்.
எப்படி இந்த கணக்கினை எப்படி தொடங்குவது?
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம். குறிப்பாக தனியார் வங்கிகளில் ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட சில வங்கிகளில் தொடங்கி கொள்ள முடியும். இதனை உங்களது வங்கி நெட் பேங்கிங்கிலும் கூட தொடங்கிக் கொள்ளலாம்.