நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வரவிருக்கும் நிதியாண்டில் பல புதிய வருமான வரி மாற்றங்கள் வரவிருக்கின்றன.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஏப்ரலில் இருந்து வருமான வரியில் வரவிருக்கும் மாற்றங்களைத் தான்.
இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2021ல் அறிவித்திருந்தார். இந்த புதிய அறிவிப்புகளினால் யாருக்கு என்ன பலன்? யாருக்கு பாதிப்பு? என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை பற்றித் தான் பார்க்கவிருக்கிறோம்.
வருங்கால வைப்பு நிதி- வரி மாற்றங்கள்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி குறித்தான வரி சலுகையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது. அதன் படி, ஒரு நிதியாண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானதுக்கு வரி விகிதம் உண்டு. பொதுவாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டம் வரி சலுகை உண்டு என்பதால் தான் பலரையும் ஈர்க்கிறது. ஆனால் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தும்போது வரி செலுத்த வேண்டியிருக்கும்.
டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ்
வருமான வரி தாக்கலை அதிகரிக்க பட்ஜெட்டில் டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் ஆகியவற்றை பற்றி நிதியமைச்சர் அறிவித்தார். இது ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் புதியதாக வருமான வரி சட்டத்தில் 206AB மற்றும் 206CCA என்ற புதிய பிரிவுகள் அமலுக்கு வரவுள்ளன. இதன் படி வருமான வரி தாக்கல் செய்யாத நபர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே 50,000 ரூபாய் டிடிஎஸ்(TDS) அல்லது டிசிஎஸ் (TCS) விலக்கு பெற்றிருந்தால், டிடிஎஸ்(TDS) அல்லது டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பிடித்தம் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் 5% செலுத்த வேண்டியிருக்கும்.
வருமான வரி தாக்கல்
75 வயது அல்லது அதற்கு அதிகமாக வயதுடைய மூத்த குடிமக்கள், பென்ஷன் மற்றும் வங்கி வட்டி வருமானம் மட்டுமே வருடாந்திர வருமானமாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யத் தேவையில்லை. வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் மற்ற ஏதேனும் ஒரு வகையில் வருமானம் ஈட்டும் மூத்த குடிமக்களுக்கு இது பொருந்தாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதை இனி முன் கூட்டியே செய்ய தேவையில்லை
வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது சம்பள வருமானம், வங்கி கணக்கு, வரி செலுத்திய தகவல், டிடிஎஸ் விபரம் ஆகியவை முன்கூட்டியே பதிவிட்டு இருக்கும் நிலையில், தற்போது மூலதன ஆதாயங்கள், டிவிடெண்ட் வருமானம், வங்கியில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி வருமானம், போஸ்ட் ஆபீஸ்-ல் இருந்து கிடைத்த வருமானம் ஆகியவற்றையும் நேரடியாக வருமான வரி அறிக்கையில் சேர்க்கப்படும். ஆக அவற்றை துல்லியமாக இருப்பதை வருமான வரி செலுத்துவோர் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
விடுமுறை பயண சலுகை
மத்திய அரசு ஊழியர்களுக்கு நெருக்கடியான இந்த நேரத்தில் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், அரசு ஊழியர்களுக்கான எல்டிசி கேஷ் வவுச்சர் திட்டத்தை (LTC Cash Voucher Scheme) அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பயணம் செய்து பெறும் கொடுப்பனவை, பயணம் செய்யாமலேயே பணமாக பெறலாம். இதில் 2020 - 21ம் நிதியாண்டிற்கான தொகையினை மார்ச் 31, 2021-க்கு முன் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஊழியர்கள் இந்த தொகையை ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை பெற செலவழிக்க வேண்டும் என்பது தான். இந்த திட்டமானது மார்ச் 31வுடன் முடிவடையவுள்ளது. ஆக ஊழியர்களை இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2019 – 20ம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல்
2019 - 20ம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கலுக்கு கடைசி தேதி மார்ச் 31 ஆகும். ஆக மார்ச் 31க்குள் வருமான வரி தாக்கலை செய்யாதவர்கள் தாமதக் கட்டணத்தினை செலுத்த வேண்டியிருக்கும். ஆக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், முதலில் அதனை தாக்கல் செய்வது நல்லது.