கொரோனாவின் வருகைக்கு பிறகு முதலீட்டின் மீதான ஆர்வம் என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகள் எனில் சொல்லவே வேண்டாம். பிறந்த உடனேயே பிக்சட் செய்யும் குடும்பங்கள் இன்றும் ஏராளம். என்னதான் பல வகையான முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி மற்ற திட்டங்களில் முதலீடுகளை செய்வதில்லை.
ஆனால் பிக்சட் டெபாசிட் திட்டங்களை போலவே பாதுகாப்பான, எனினும் அதிக வட்டி கொடுக்கும் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட 5 திட்டங்களை பற்றி பார்க்கலாம்.
பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ
பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது கடந்த 2015ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பிரத்யேக திட்டமாகும். இது குழந்தைகளின் கல்விக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் உள்ள திட்டம். இது பெண் குழந்தைகளின் எதிர்கால நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும். அவர்களின் கல்வி காலத்தில் உறுதுணையாக இருக்கும் எனலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா
அஞ்சலகத்தில் உள்ள பிரபலமான திட்டங்களில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தில் மாதம் 250 ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம், இந்த திட்டம் அதிகபட்ச முதிர்வு வயது 21 ஆகும். எனினும் பெண் குழந்தையானவர் 18 வயதிற்கு மேல் திருமணம் செய்தால் இந்த திட்டம் தானாக முடிந்துவிடும். இந்த திட்டத்திற்கு தற்போது வட்டி விகிதம் 7.6% ஆகும்.
இந்த திட்டமும் பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்காக உருவாக்கப்பட்ட இரு திட்டமாகும். இந்த திட்டத்தில் இடையில் கல்வி செலவினங்களுக்கான 50% தொகையினை திரும்ப பெற முடியும். இந்த திட்டத்தில் வரி சலுகையும் கிடைக்கும்.
CBSE உதான் திட்டம்
மத்திய அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு உதவும் வகையில், நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயிற்சித் திட்டமாக உருவாக்கப்பட்டது தான் CBSE உதான் திட்டம்.
இது மேல்நிலைப் பள்ளிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை மாணவிகள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, என்.ஐ.டி-க்களில் சேருவதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் உதான் திட்டம் செயல்படுகிறது. மத்திய அரசு அறிமுகம் செய்த இந்தத் திட்டம் மூலம் பெண்கள் தங்களது கல்வி கனவை நனவாக்க உதவும் எனலாம்.
எல்ஐசி கன்யாதான் பாலிசி
எல்ஐசியின் கன்யாதான் பாலிசி என்பது பெண்களுக்கு நிதி ரீதியாக பாதுகாப்பு அளிக்கும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் காலம் 13 - 25 ஆண்டுகளாகும். இந்த பாலிசியினை எடுத்த பின் குறைந்தது மூன்று வருடங்களுக்காவது, நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டும். கடைசி மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. இந்த பாலிசியினை 1 வயது குழந்தைக்கு கூட எடுத்துக் கொள்ளலாம். எனினும் குழந்தையின் தந்தைக்கு வயது 18 - 50 வயது இருக்க வேண்டும்.
இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் காப்பீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச தொகை என எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பாலிசி காலம் உங்களது பெண் குழந்தையின் வயதுக்கு ஏற்ப குறைத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் உங்களது வருமானத்திற்கு ஏற்ப பிரீமியத்தினை செலுத்திக் கொள்ள முடியும். சில பாலிசிகளில் ஆரம்பத்தில் என்ன பிரீமியம் செலுத்துகிறீர்களோ, இறுதி வரையில் அதனையே செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் கன்யாதான் திட்டத்தில் உங்கள் கையில் தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதிகரித்தும் செலுத்தலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பாலிசி 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதே போல் மெச்சூரிட்டி அல்லது இறப்பின் மூலம் கிடைக்கும் க்ளைமுக்கும் பிரிவு 10 (10D)யின் கீழ் வரி விலக்கு பெற முடியும்.
நந்தா தேவி கன்யா யோஜனா
உத்தரகாண்ட் அரசு பெண் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி செயல்படுத்தி வரும் திட்டம் தான் நந்தா தேவி கன்யா யோஜனா. இந்த திட்டத்தின் மூலம் ஏழை பெண் குழந்தைகள் பயனடைய முடியும். குறிப்பாக சிறப்பான கல்வியை பெற இந்த திட்டம் உதவுகிறது. இந்த திட்டத்தின் கீழ் புதியதாக பிறந்த பெண் குழந்தையின் பெயரில் 1500 ரூபாய் பிக்சட் டெபாசிட் ஆக செய்யப்படும். குழந்தை 18 வயதை அடையும்போது அசல், வட்டியுடன் திரும்ப செலுத்தப்படுகின்றது.