குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவியில் அமர்ந்த நரேந்திர மோடி, 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றார்.
2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமராக பதவியில் இருக்கிறார்.
சமீபத்தில் நரேந்திர மோடியின் சொத்து பத்து தொடர்பான விவரங்கள் வெளியாயின. அதில் அவர் முதலீடு விவரங்களும் வெளியாகி இருக்கின்றன. பிரதமரின் சொத்து பத்து மற்றும் முதலீட்டு விவரங்களைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
சொத்துக் கணக்கு
கடந்த 30 ஜூன் 2020 நிலவரப்படி, பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு 2.85 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டை விட 36 லட்சம் ரூபாய் சொத்து அதிகரித்து இருக்கிறதாம். அவருடைய சொத்து மதிப்பு உயர்வுக்கு, அவர் முதலீடு செய்து வைத்ததில் இருந்து வந்த 33 லட்சம் ரூபாய் வருமானம் தான் முக்கிய காரணமாம்.
FDR &MODS வங்கி முதலீடு
ஜூன் 30, 2020 நிலவரப்படி, மோடியின் கையில் ரொக்கமாக 31,450 ரூபாய் இருக்கிறதாம். குஜராத் காந்தி நகர் எஸ்பிஐ வங்கிக் கிளையில் இருப்பாக 3,38,173 ரூபாயை வைத்திருக்கிறார். ஆக பிரதமரே எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் தான். மோடி இதே வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் மல்டி ஆப்ஷன் டெபாசிட் திட்டங்களில் 1.60 கோடி ரூபாயை வைத்திருக்கிறார்.
National Savings Certificate-ல் முதலீடு
பிரதமர் நரேந்திர மோடி 8,43,124 ரூபாயை தேசிய சேமிப்புச் சான்றிதழ்களில் (National Savings Certificate) முதலீடு செய்து வைத்திருக்கிறார். பிரதமரே முதலீடு செய்யும் இந்த திட்டம் எப்படிப்பட்டது? சாமானியர்கள் நாம் முதலீடு செய்யலாமா? வாருங்கள் இந்த National Savings Certificate திட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். என் எஸ் சி திட்டம் குறித்து பைசா பசார் வலை தளத்தில் சொல்லி இருக்கும் விவரங்களைப் பார்ப்போம்.
தகுதியானவர்கள் யார்
அனைத்து இந்திய குடிமக்களும் இந்த தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate)-ல் முதலீடு செய்யலாம். ட்ரஸ்டுகள், இந்து கூட்டுக் குடும்பங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது. இந்து கூட்டுக் குடும்பத்தின் தலைவர், தன் சொந்த பெயரில் வேண்டுமானால் முதலீடு செய்து கொள்ளலாம். தனி நபராகவோ, இணைந்தோ இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
எங்கே கிடைக்கும் & வரி சலுகை உண்டா
இந்திய அஞ்சலக அலுவலகங்களில் தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) கிடைக்கின்றன. ஆன்லைனில் இந்த பத்திரத்தில் முதலீடு செய்ய முடியாது.
ஒரு நிதி ஆண்டில், அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) திட்டங்களில் செய்யும் முதலீட்டுக்கு, வருமான வரிச் சட்டம் 80சி-ன் கீழ் வரிக் கழிவு பெறலாம். திட்டம் முதிர்ச்சி அடைந்து வரும் வட்டி வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தகக்து.
என்ன வருமானம்
ஒவ்வொரு காலாண்டுக்கும் தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) திட்டத்துக்கான வட்டி விகிதங்களை மத்திய நிதி அமைச்சகம் நிர்ணயிக்கிறது. கடந்த 30 ஜூன் 2020 காலாண்டில் 6.8 %, 31 மார்ச் 2020 காலாண்டில் 7.9 % வட்டி கொடுத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
எப்போது வட்டி கொடுப்பார்கள்
தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கான வட்டி கணக்கிடப்பட்டு, திட்டம் முதிர்ச்சி அடையும் போது தான் கொடுப்பார்கள். இதில் கவனிக்க வேண்டிய ஒரு நல்ல விஷயம், திட்டம் முதிர்ச்சி அடையும் போது கொடுக்கப்படும் வட்டிக்கு எந்த டிடிஎஸ் (Tax Deducted at Source - TDS) பிடித்தமும் செய்யப்படாது.
எவ்வளவு முதலீடு செய்யலாம்
தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) திட்டத்தில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) 5 ஆண்டு திட்டங்கள் தான் கிடைக்கின்றன. எனவே ஐந்து ஆண்டு பத்திரங்களில் தான் முதலீடு செய்ய முடியும். 100, 500, 1000, 5000, 10000 ஆகிய டினாமினேஷன்களில் தான் இந்த பத்திரத்தில் முதலீடு செய்ய முடியும்.
முன்கூட்டி பணத்தை எடுக்கலாமா
தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) 5 வருட லாக் இன் காலம் கொண்டது.
1. திட்டத்தில் முதலீடு செய்தவர் இறந்துவிட்டாலோ
2. அரசு கெசடட் அதிகாரிகள் ரத்து செய்தாலோ
3. நீதிமன்றம் முன் கூட்டி பணத்தைக் கொடுக்கச் சொன்னாலோ மட்டும் தான் திட்டம் முதிர்ச்சி அடைவதற்கு முன் பணத்தைக் எடுக்க முடியும்.
கடன் பெறலாம்
சாவரின் தங்க பத்திரங்கள், நகை நட்டுக்களை எல்லாம் எப்படி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் பெற முடியுமோ, அதே போல, இந்த தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate)-களை அடமானம் வைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெறலாம். நாமினிக்களை குறிப்பிடும் வசதி உண்டு.
ரிஸ்க் இருக்கா
இந்திய அரசாங்கத்தின் பத்திரங்கள் என்பதால் நம்பி முதலீடு செய்யலாம். அவ்வளவு ஏன் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியே, தன் சொந்த பணத்தில் 8,43,124 ரூபாயை முதலீடு செய்து இருக்கிறார் என்றால், நாமும் தேசிய சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமே! முதலீடு செழிக்க வாழ்த்துக்கள்.