பொது பங்கு வெளியீட்டினை சுருக்கமாக ஐபிஓ என்று கூறுவார்கள். இது பங்கு சந்தையில் முதல் முறையாக வெளியிடப்படுவதால், நல்ல நிறுவனங்களின் பங்குகளை குறைவாக வாங்க முடியும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அந்த வகையில் நாளை தனது பங்கினை வெளிடவிருக்கும், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டினை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா புரோமோட்டராக இருக்கும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம், 7,249.18 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வெளியிடவுள்ளது.
எப்போது தொடக்கம்
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம் நவம்பர் 30 அன்று தனது பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. டிசம்பர் 2 அன்று இந்த வெளியீடு முடிவடையவுள்ளது.
ஸ்டார் ஹெல்த் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனமாகும். கிரிசில் அறிக்கையின் படி 2021ம் நிதியாண்டில், இது மொத்தம் GWP மூலம் 15.8% மொத்த ஹெல்த் இன்சூரன்ஸ் சந்தை பங்கினையும், இதே சில்லறை ஹெல்த் இன்சூரன்ஸ் சந்தையில் 31.3% பங்கினையும் வைத்துள்ளது.
பங்கு விலை நிர்ணயம்
இந்த பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலையானது 870 - 900 ரூபாயாக அறிவித்துள்ளது.
இந்த புதிய பங்கு வெளியீட்டில் நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்களின் விற்பனை, புதிய பங்கு வெளியீடு என்ற கலவையாக இருக்கும்.
ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம் சேஃப்கிராப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா எல்எல்பி, KONARK Trust & MMPL Trust உள்ளிட்ட புரோமோட்டர்கள் தங்களது பங்கினை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விற்பனையாளர்கள்
இவர்கள் தவிர பங்குகளை விற்கும் மற்ற முதலீட்டாளர்களில் Apis Growth 6 Ltd, Mio IV Star, University of Notre Dame Du Lac, Mio Star, ROC கேபிடல் Pty Ltd, வெங்கடசாமி ஜெகநாதன், சாய் சதீஷ் மற்றும் பெர்ஜிஸ் மினு தேசாய் ஆகியவை அடங்கும். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனது 14.98% பங்குகளை விற்பனை செய்ய மாட்டார் எனவும் கூறப்படுகிறது.
புதிய பங்கு வெளியீடு மதிப்பு
இந்த ஐபிஓவில் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஈக்விட்டி பங்குகளின் புதிய வெளியீடு மற்றும் நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்கள் 5,249 கோடி மதிப்பிலான விற்பனைக்கான சலுகை (OFS) ஆகியவை அடங்கும்.
அதோடு இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 100 கோடி ரூபாய் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படலாம்.
லாட் சைஸ் எவ்வளவு?
இந்த வெளியீட்டில் 75% தகுதிவாய்ந்த நிறுவன வாங்குபவர்களுக்கு (QIB) ஒதுக்கப்பட்டுள்ளது. 15% நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் (NII), மீதமுள்ள 10% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 16 ஈக்விட்டி பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் ஏலம் எடுக்கலாம்.
புதிய பங்கு வெளியீடு மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து, அதன் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.