இன்றைய காலகட்டத்தில் முதலீடு என்றால் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் நிச்சயம் உணர்ந்திருப்போம். ஏனெனில் அந்தளவுக்கு இந்த கொரோனா மக்களை பாடாய்படுத்தி வருகிறது.
இதற்கிடையில் பலர் தங்களது வேலையினை இழந்து, அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்கே கூட கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் மக்கள் கற்றுக் கொண்டுள்ள ஒரு பாடம் சேமிப்பு தான். அப்படி நாம் சேமிக்கும் பணம் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் லாபகரமானதாகவும் இருக்க வேண்டும். இப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு திட்டம், அதுவும் அரசின் திட்டம் என்றால் எது எவ்வளவு நல்ல விஷயம்.
அரசின் சிறந்த ஐந்து திட்டங்கள்
அப்படி அரசின் சில சிறந்த முதலீட்டு திட்டங்கள் மற்றும் சில பயனுள்ள திட்டங்களைத் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது சுகன்யா சம்ரிதி யோஜனா தான், இதனையடுத்து அடுத்த இடத்தில் இருப்பது பிரதான் மந்திரியின் ஜன் தன் யோஜனா. அடுத்தடுத்த திட்டங்களாக தேசிய சுகாதார காப்பீட்டு திட்டம், தேசிய சமூக உதவித் திட்டம், பிரதான் மந்திரியின் முத்ரா திட்டம்.
பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்டம்
அரசின் இந்த திட்டத்தின் மூலம் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, பெற்றோரை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும் இந்த எஸ்எஸ்ஒய் கணக்கை துவக்க முடியும். இந்த திட்டம் திறக்கபட்ட நாளில் இருந்து 21 ஆண்டுகளுக்கு செயல்படும்.
இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் வைப்பு ஒவ்வொரு ஆண்டும் 1000 ரூபாய் தேவைப்படுகிறது. இதே ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து கொள்ள வழிவகை செய்துள்ளது.
இந்த சுகன்யா சமிரிதி திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு, வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமான 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம்
அரசின் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் மூலம் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் வரையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டுக்கு தொடங்கினார். இந்தத் திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7½ கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. இதில் நாம் கணக்கு தொடங்குவதன் மூலம் விபத்து காப்புறுதியால் 1 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடாக பெற முடியும்.
பொதுவாக இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்ச இருப்பு என்பதை நீங்கள் வைத்திருக்க தேவையில்லை. இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவை இல்லை. வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் (RSBY)– யாருக்கு என்ன பயன்?
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்குச் சுகாதாரக் காப்பீடு வழங்குவதற்காக இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சரகம் தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் நோய்களால் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஏற்படும் பொருளாதார பிரச்சனையில் இருந்து காப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
மருத்துவ மனை சிகிச்சை தேவைப்படும் பெரும்பாலான நோய்களுக்கு ரூபாய் 30,000 ரூபாய் வரை இத்திட்டத்தின் கீழ் காப்பீடு கிடைக்கிறது. பெரும்பாலான சிகிச்சைகளுக்கு மருத்துவ மனைக் கட்டண விகிதத்தை அரசே நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே உள்ள நோய்களுக்கு சிகிச்சையின் முதல் நாளில் இருந்தே காப்பீடு உள்ளது. இதற்கு எந்த வயது வரம்பும் இல்லை. ஒரு குடும்பத்தில் தலைவர், இணையர் மற்றும் மூன்று சார்ந்திருப்போர் ஆகிய ஐவருக்குக் காப்பீடு வழங்கப்படுகிறது. பயனாளர் பதிவுக் கட்டணமாக ரூ 30 செலுத்த வேண்டும். மாநில அரசால் ஏல முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் காப்பீட்டுக் குழுமத்திற்குக் கட்டணத்தை மத்திய மாநில அரசுகள் செலுத்தும்.
தேசிய சமூக உதவி திட்டம் (national social assistance scheme)
தேசிய சமூக உதவி திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த முதியோர், கைம்பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 3 கோடிக்கும் அதிகமானோருக்கு நேரடி மானிய மாற்றத்தை விரிவுபடுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் இந்த ரொக்கப் பரிமாற்றம், புறக்கணிக்கப்பட்டதாக கருதப்படும் குடும்பங்களுக்கு அரசு அளிக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காப்பீடு ஒட்டுமொத்த சமூக பாதுகாப்பு ஆகியவற்றுடன் கூடிய சமூகப் பாதுகாப்பை அளிக்கிறது.
தேசிய சமூக உதவி திட்டத்தின் பயனாளிகள் குறித்த தகவல்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. ஆதார் அடிப்படையிலான செலுத்தும் முறையானது முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்கள் கிராமத்தில் உள்ள வங்கி முகவர்/அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பெறும் வசதியை அளிக்கும்.
அரசின் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா
சிறு குறு மற்றும் தொழில் முனைவோருக்கான திட்டம் தான் இந்த முத்ரா. இது பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி வைக்கபட்டது.
இந்த திட்டத்தின் கீழ் 3 வகைகளில் குறுந்தொழில் முனைவோர் தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவு படுத்திக் கொள்ளவும் கடன்களை வழங்கி வருகிறது.
ஒன்று சிசு திட்டம் மூலமாக 50,000 ரூபாய் வரையிலும், இதே கிஷோர் திட்டத்தின் மூலம் 50,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் வழங்கப்பட்டு வருகிறது. இதே தருண் திட்டத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் பெறலாம்.