கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை அமெரிக்காவில் சுமார் 3,782 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
69 அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலி ஆகி இருக்கிறார்கள். இந்த நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது.
இந்த நேரத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்க அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி இருக்கிறது.
அதிபர் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த மார்ச் 15, 2020 அன்று மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கைவசம் வைத்துக் கொள்ளுமாறுச் சொன்னார். ஏன் அப்படிச் சொன்னார் என்றால், அமெரிக்காவின் மூத்த சுகாதார அதிகாரிகளில் ஒருவரான அந்தோனி ஃபாசி (Anthony Fauci) அமெரிக்காவுக்கு ஒரு புதிய யோசனையைச் சொல்லி இருக்கிறார்.
அந்தோனி ஃபாசி யோசனை
14 நாட்கள் ஷட் டவுன் போன்ற அதிரடி நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசு, பெரிய பெரிய சில்லறை வணிக நிறுவனங்களிடம் பேசி இருக்கிறார்களாம். எனவே பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படாது எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
மேலும் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் "நீங்கள் நிறைய பொருட்களை வாங்கி வைக்க வேண்டியத் தேவை இல்லை. "Take it easy. Just relax." என கேஷுவலாகச் சொல்லி இருக்கிறார். இந்த வார்த்தைகளை எல்லாம் அமெரிக்க அரசு தரப்பு சொன்னதில் இருந்தே, மக்கள் அக்கம் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்குச் சென்று அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தேவையான சரக்குகளை வாங்கிக் குவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
வால்மார்ட்
உலகின் சில்லறை வணிக நிறுவனங்களுக்கு எல்லாம் பெரிய நிறுவனம் வால்மார்ட் என்றால் அது மிகை இல்லை. ஆனால் வால்மார்ட்டிலேயே பொருட்களுக்கு தட்டுப்பாடு வந்தால் என்ன செய்ய. இப்போது அப்படி ஒரு தட்டுப்பாடு தான் அமெரிக்காவில் வரத் தொடங்கி இருக்கிறது. என்ன பொருட்களுக்கு எல்லாம் தட்டுபாடு வந்துவிட்டது..?
குழந்தைகளுக்கானவைகள்
வால்மார்ட்டிலேயே குட்டி குழந்தைகளுக்கான உணவுகள், மருந்துகள், குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயாப்பர் போன்ற பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில், மயானம் போல காட்சி அளிக்கிறது. எப்போதும் தேவையான பொருட்கள் நிறைந்து இருக்க வேண்டிய வால்மார்ட் ரேக்குகள் எல்லாம், இப்போது காலியாக இருக்கிறது.
சுகாதார பொருட்கள்
அதற்கு அடுத்து தங்களை கொரோனா வைரஸ் தாக்கி விடக் கூடாது என பாதுகாத்துக் கொள்ள, நிறைய ஹேண்ட் சேனிடைஷர்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறது உலகம். அமெரிக்கா மட்டும் விதிவிலக்கா என்ன..? ஆனால் இப்போது வால்மார்ட்டிலேயே ஹேண்ட் சேனிடைஷர் இருக்க வேண்டிய இடங்கள் எல்லாம் காலியாக இருக்கிறது.
இறைச்சி
பொதுவாக அமெரிக்கர்கள் அதிகம் சைவத்தை விட அசைவம் சாப்பிடுவார்களாம். எனவே போன்லெஸ் சிக்கன், ஆண்டி பயாட்டிக் சிக்கன், ட்ரம் ஸ்டிக் சிக்கன் என பல வகையான சிக்கன்கள் அமெரிக்காவில் சக்கைபோடு போடுமாம். இந்த கொரோனா பயத்தால் சிக்கன், மீன் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை எல்லாம் வாங்கிக் குவித்துக் கொண்டு இருக்கிறார்கள் அமெரிக்கர்கள்.
விரைவு உணவுகள்
அத்தியாவசியத் தேவையான பால், உடனடி உணவுகளாக பயன்படுத்தப்படும் சீஸ், வெண்ணெய் போன்ற பொருட்கள் இருக்கும் ரேக்குகள் எல்லாம் ஏதோ கழுவி விட்டது போல் சுத்தமாக இருக்கிறது. அது போக பாக்கெட் உணவுகள் மற்றும் திண்பண்டங்களுக்கும் இதே நிலை தான். மிக முக்கியமாக அமெரிக்கர்களின் அதி முக்கிய உணவுகளில் ஒன்றான பிரெட் பாக்கெட் சுத்தமாக இல்லை.
2 வாரம் ஸ்டாக்
சரி பில்லிங் கவுண்டரில் என்ன நிலவரம் என்று பார்த்தால், வந்திருப்பவர்கள் எல்லாம், அடுத்த இரண்டு வாரத்துக்குத் தேவையான எல்லா உணவுகளையும் வாங்கிக் குவித்து இருப்பதை அவர்கள் ட்ராலியில் பார்க்க முடிகிறது. கொரோனா பயம் எந்த அளவுக்கு வல்லரசு நாட்டு மக்களான அமெரிக்கர்களைப் பிடித்து இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு வால்மார்டே சாட்சி.