சமீப மாதங்களாகவே இந்தியாவில் அடுத்தடுத்து சீன நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து அதன் மூலம், பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக வருமான துறை சோதனை மூலம் தெரிய வந்தது. இந்த சோதனை மூலம் பல முக்கிய ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள் பலவும் கண்டு பிடிக்கப்பட்டன.
இப்படி அடுத்தடுத்து இந்தியாவில் சிக்கி வரும் சீன நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும் அல்ல, பற்பல நாடுகளிலும் இதே பிரச்சனையில் சிக்கத் தொடங்கியுள்ளன.
அமெரிக்க பங்கு சந்தையில் தணிக்கையில் பிரச்சனை என பல நிறுவனங்கள் தடை செய்யவும் திட்டமிடப்பட்டு வந்தன.
இழப்பு யாருக்கு?
இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில் சீன நிறுவனங்கள் பங்களாதேஷூலும் இதே பிரச்சனையில் சிக்கியுள்ளன. இவ்வாறு அடிக்கடி மோசடி செய்வதன் மூலம், தெற்காசிய நாடுகளுக்கு பெரும் இழப்பினை சீன நிறுவனங்கள் ஏற்படுத்துவதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பங்களாதேஷ் பெரும் இழப்பு
வரி மோசடி மூலம் பெரும் இழப்பினை காணும் நாடுகளில் பங்களாதேஷும் ஒன்று. பங்களாதேஷ் அதிகாரிகள் இதுபோன்ற பல வழக்குகளை கண்டறிந்துள்ளனர். குறிப்பாக வரி ஏய்ப்பு போன்ற ஓழுக்ககேடான பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வரி ஏய்ப்பில் பெய்ஜிங் அடிப்படையாக கொண்ட நிறுவனங்கள் பலவும் அடங்கும் என பங்களாதேஷ் செய்திகள் கூறுகின்றன.
மேட் இன் சீனா டூ வங்கதேசம்
சீனாவினை சேர்ந்த நிங்போ ஆர்ட் சப்ளைஸ் குரூப் கோ லிமிடெட்-ன் துணை நிறுவனமான, கோண்டா ஆர்ட் மெட்டீரியல்ஸ் பங்களாதேஷ் கோ லிமிடெட் என்ற பெயரில், சீனாவில் இருந்து மேடு இன் வங்கதேசம் என கூறி பெரியளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளது சமீபத்தில் கண்டறியப்பட்டது. சுமார் பல கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர்.
முழுப் பொருளாக இறக்குமதி
அதோடு மூலப் பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்று பங்களாதேஷின் EPZ விதித்துள்ள கொள்கையை மீறுவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நிறுவனம் மூலப்பொருட்களுக்கு பதிலாக உற்பத்தி செய்து முடிக்கப்பட்ட முழுப் பொருட்களையும் இறக்குமதி செய்து அதனை, மற்ற நாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
பறிமுதல்
நடப்பு ஆண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடமை தவறிய அதிகாரிகளையும் கண்டுபிடித்தது. இவர்களை சூழ்ச்சியால் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்த பொருட்கள் ஏற்றப்பட்ட 10 வேன்கள் மற்றும் 7 கன்டெய்னர்களையும் பங்களாதேஷ் அதிகாரிகள் பறிமுதல் செய்ததும் நினைவுகூறத்தக்கது.
சீனாவின் முதலீடு
கடந்த 2011 - 2021ம் ஆண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில் சீனா பங்காளதேஷின் சுமார் 10 பில்லியன் டாலர், உள்கட்டமைப்புக்காக முதலீடு செய்துள்ளதாக மீடியா தகவல்கள் கூறுகின்றன. எனினும் பங்களாதேஷ் உடனான பல ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எச்சரிக்கையா இருக்கணும்
மொத்தத்தில் சீன நிறுவனங்கள் பல்வேறு மோசடிகளில் சிக்கி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை போன்ற நிலையை எதிர்கொள்வதற்கு முன்பாக பங்களாதேஷ் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஏனெனில் இன்றும் சீனா முதலீட்டின் மூலம் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் பங்களாதேஷில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.