உலக வல்லரசு நாடுகளே கொரோனாவிற்கு பயந்து என்ன முடங்கியிருந்த நிலையில், முதன் முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனா, அந்த சமயத்தில் மிக சுறுசுறுப்பாக வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது.
அதோடு உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி நிறுவனங்களில் தனது அன்னிய நேரடி முதலீட்டினை, கணிசமாக உயர்த்திக் கொண்டே வந்தது சீனா.
உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்து வந்த நேரத்தில் சீனா மட்டும் எப்படி? இயல்பாக இயங்கிக் கொண்டுள்ளது என்பதே பல நாடுகளின் சந்தேகத்திற்கு வழிவகுத்தது.
FDI விதிகள்
இதனால் அந்த சமயத்தில் பல நாடுகள் தங்களது அன்னிய முதலீட்டுக் கொள்கைகளை கடுமையாக்கின. அந்த நேரத்தில் இந்தியாவும் கூட தனது FDI விதிகளை கடுமையாக்கியது. இதனால் சீன முதலீடுகள் என்பது சற்று குறைந்துள்ளது எனலாம். ஒரு புறம் முதலீடுகளை இந்தியாவில் செய்து வந்த சீனா, மறுபுறம் இந்தியாவுடன் எல்லையிலும் பிரச்சனையில் ஈடுப்பட்டு வந்தது.
சீனா கணிசமான முதலீடு
சமீபத்திய ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீடுகளின் லிஸ்டை பார்க்கும் போது, அதில் கணிசமான அளவு முதலீடு என்பது சீனாவுடையதாகத் தான் இருந்தது. சீனாவின் பெரும் நிறுவனங்கள் தொடர்ந்து, இந்தியாவில் படிப்படியாக தங்களது முதலீடுகளை இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்திய ஸ்டார்டப் நிறுவனங்கள் பலவற்றில் சீன நிறுவனங்களின் முதலீடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடுமையான கட்டுப்பாடு
இப்படி நாடே கொரோனா ரணகளத்தில் சிக்கித் தவித்து வந்தாலும், சீனா சத்தமேயில்லாமல் முதலீடுகளை பல நாடுகளிலும் அதிகரித்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அரசு FDI விதிகளில் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் முதலீடுகள் குறையும் என்றும் கருதப்பட்டாலும், கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை, வெளிநாட்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளதாக கூறப்பட்டது.
வளர்ச்சியினை உந்துகின்றன
இதற்கு சீனா அந்த சமயத்திலேயே திறந்த நியாயமான சமமான அனைத்து வணிகச் சூழலை இந்தியா வளர்க்க வேண்டும். இந்திய உலக வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதல்களை மீறுகின்றது. நிறுவனங்கள் சந்தைக் கொள்கைக் அடிப்படையில் தேர்வுகளை செய்கின்றன. சீன முதலீடுகள் இந்திய தொழில்துறையின் வளர்ச்சியினை உந்துகின்றன. ஆக இந்தியா அனைத்து நாடுகளையும் முதலீட்டில் சமமாக நடத்த வேண்டும் என்றும் கூறியது.
எஃப்டிஐ நடவடிக்கையால் என்ன பிரச்சனை
இந்தியாவின் எஃப்டிஐ விதிகளினால் எல்லையை ஒட்டிய நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களோ, குடிமக்களோ இந்தியாவில் நேரடியாக முதலீடுகளை மேற்கொள்ள மத்திய அரசின் முன்னனுமதி பெறுவதை கட்டாயமாக்கியது. இதற்கு முன்பு வரை முதலீடு செய்துவிட்டு பின்னர் ரிசா்வ் வங்கியிடம் தெரிவித்தாலே போதுமானதாக இருந்தது. அதனால் இந்தியாவின் இந்த கட்டுப்பாடுகளினால் அனுமதி பெற்றே முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
200 ஆப்கள் தடை
இந்தியா சீனா இடையேயான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், லடாக் எல்லையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து சீனாவின் 200 ஆப்கள் படிப்படியாக தடை செய்யப்பட்டன. இது நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிய வந்ததால், இந்த தடை விதிக்கப்பட்டதாக விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்திய இணையவழி குற்றத்தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அளித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அப்போது கூறியது.
இருதரப்பினையும் பாதிக்கும்
ஆக இப்படியொரு நிலையில் தான் உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் வர்த்தக கொள்கை குறித்த கலந்துரையாடலின் போது, சீனாவின் 200 ஆப்கள் தடை, இந்தியாவின் அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை உள்ளிட்டவற்றை பற்றிய கவலையை சீனா எழுப்பியுள்ளது. இது இரு தரப்பு வர்த்தகத்தினையும் பாதிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்
அதோடு மேக் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா முயற்சிகள் மூலம் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும் சீனா கூறியுள்ளது. எனினும் சில நடவடிக்கைகள் உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளுடன் ஒத்துக் போகவில்லை என்றும் கூறியுள்ளது.