எத்தனையோ கச்சமுச்சாக்கள், அமெரிக்க மிரட்டல்கள்,சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இழப்பு என்று இந்தியாவுக்கு ஏகப்பட்ட ஏழரைகள் இருக்கும் போது தில்லாக மோடிஜி ஈரானுக்கு 1.2 மில்லியன் டன் கச்சா எண்ணெய்க்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார். இதை எப்படி டாலர் என்கிற சர்வதேச கரன்ஸி இல்லாமல் பணத்தைக் கொடுக்கப் போகிறார்கள் என்பதில் தான் இந்தியாவின் அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கே இருக்கிறது. இதை புரிந்து கொள்ள கொஞ்சம் ஈரான் தடைகளின் சுருக்கத்தையும் கவனிக்க வேண்டும்.
ஈரானுக்கு தடைகள்
அமெரிக்க டாலரை வாங்குவதற்கு தடை
அமெரிக்க டாலர்களை சேமித்து வைக்க தடை
தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களை வர்த்தகம் செய்யத் தடை
அலுமினியம், இரும்பு, கிராஃபட் போன்ற அடிப்படை உலோகங்கள் வர்த்தகம் செய்யத் தடை,
நிலக்கரி போன்ற கனிமவளங்கள் வர்த்தகம் செய்யத் தடை,
ஈரானிய ரியால்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளத் தடை,
ஈரானிய அரசாங்க கடன் பத்திரங்களை பிரசூரித்து கடன் வாங்கத் தடை,
ஈரானிய ஆட்டோமொபைல்களை வர்த்தகம் செய்யத் தடை,
ஈரானிய துறைமுகங்களைப் பயன்படுத்த தடை,
ஈரானிய கப்பல் நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்த தடை,
ஈரானிய மத்திய வங்கிகளோட மற்ற வங்கிகள் தொடர்பு கொள்ளத் தடை,
ஈரானிய கச்சா எண்ணெய் பொருட்களை வாங்கத் தடை
ஈரானிய நிறுவனங்களுக்கு இன்ஷூரன்ஸ் சேவைகள் வழங்கத் தடை
ஈரானிய எனர்ஜி துறை சார்ந்த பொருட்கள் வர்த்தகம் மேற்கொள்ளத் தடை
தடை விவரங்கள்
மேலே சொன்னது ஈரானுக்கு மட்டும் அல்ல, ஈரான் உடன் மேற் கூறிய விஷயங்களில் வர்த்தகம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகள் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். இதில் மிக முக்கிய பிரச்னை என்ன என்றால் இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ளும், இப்போது கச்சா எண்ணெய்க்கான பணத்தை எப்படி கொடுப்பது.
டாலர் அரசியல்
பொதுவாக ஏற்றுமதி இறக்குமதி என்று வரும் போது, ஒருவர் எந்த நாட்டில் இருந்து எற்றுமதி செய்தாலும், அவருக்கு டாலரில் தான் வாங்குபவர் பணம் தருவார். ஒருவர் எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும், பொருளை விற்பவருக்கு (ஏற்றுமதியாளருக்கு) டாலரில் தான் பணம் செலுத்த வேண்டும். இது தான் ஏற்றுமதி இறக்குமதியில் அடிப்படை பணப் பரிவர்த்தனைகள். சுருக்கமாக டாலரில் தான் பொருளை வாங்கவோ விற்கவோ வேண்டும். அமெரிக்கா ஈரான் மீது விதித்திருக்கும் முதல் தடையே அது தான். டாலரை தொடவே கூடாது.
இந்திய ரூபாய்
நம் இந்திய ரூபாயில், ஈரானிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கு பணத்தைக் கொடுக்கலாம். அவர்களும் வாங்கிக் கொள்ளத் தயார் தான். இப்போது ஈரானுக்கு ஒரு பொருள் இந்தியாவில் இருந்து தேவை என்றால் இந்தியாவிடம் மீண்டும் இந்திய ரூபாயைக் கொடுத்து பொருளை வாங்கிக் கொள்ளும்.
வேற தேவைகள்
ஈரானுக்கு தேவையான பொருள் இந்தியாவிடம் இல்லை என்றால் வேறு ஒரு நாட்டிடம் இருந்து தானே பொருளை வாங்க முடியும். அப்போது இந்திய ரூபாயைக் கொடுத்தால் அந்த நாடு வாங்குமா. வாங்காது. வாங்கினால் இப்போது ஈரான் இந்திய கரன்ஸியை வாங்கச் சொல்லி வேறு நாடுகளிடம் கெஞ்சுவது போல, ஈரானுக்கு புதிதாக ஏற்றுமதி செய்யும் புதிய நாடும் கெஞ்ச வேண்டி இருக்கும். எனவே எந்த நாடும் டாலர் தான் பாதுகாப்பானது. எங்களுக்கு டாலரிலேயே சேர வேண்டியதொகையைக் கொடுங்கள் என்று தெளிவாகச் சொல்லுவார்கள்.
என்ன திட்டம்
ஈரானுக்கு செலுத்த வேண்டிய தொகையில் ஒரு பெரும் பகுதியை, இந்திய ரூபாயிலேயே கொடுக்கலமா என்று ஈரானிடம் கேட்டு வந்தது. அதற்கு ஈரானும் சம்மதம் தெரிவித்திருக்கிறது. ஈரானுக்கும், இந்தியாவுக்கு இடையில் நடக்க இருக்கும் பணப் பரிவர்த்தனைகளுக்கு, முழுவதும் உதவ இருப்பது இரண்டு இந்திய நாட்டு வங்கிகள் தான்.
இந்திய வங்கிகள்
யூகோ வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி தான் இந்த ரிஸ்கான வேலையை செய்ய இருக்கிறது. இந்த இரண்டு வங்கிகளும் ஏற்கனவே ஈரான் மீது சர்வதேச தடை இருந்த காலங்களில், இந்தியா, ஈரானுக்கு செலுத்த வேண்டிய தொகையினை இந்திய ரூபாயாக செலுத்தி இருக்கிறது. ஆக அவர்களுக்கு இதில் முன் அனுபவம் இருப்பதையும் இந்தியா ஒரு அட்வாண்டேஜாகவே பார்க்கிறது.
பண்டமாற்று முறை
நம் தமிழகத்தில் ஸ்டேட் போர்ட் பிரிவில் 11-ம் வகுப்பு வணிகம் படித்தவர்களுக்கு இந்த சொல் அழுத்தமாக நினைவிருக்கலாம். Barter system, பண்டமாற்று முறை. அதையே தான் இந்தியா இப்போது ஈரானோடு செய்ய இருக்கிறது. இந்தியா வாங்கும் மொத்த கச்சா எண்ணெய் மதிப்பில் ஒரு பகுதியை பணமாக கொடுத்த பின் மீதத் தொகைக்கு நிகராக, ஈரானுக்கு தேவையான பண்டங்களாக செலுத்த இருக்கிறது.
வேறு எந்த நாடு
இந்தியாவைப் போல, நம் நட்பு நாடான சீனா, ஈரானுக்கு சீன யுவான்களாகவே தாங்கள் செலுத்த வேண்டிய தொகையை ஈரானுக்கு செலுத்துகிறார்கள். அவர்களும் பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்குகிறார்கள். சீனாவுக்கு தான் ஈரான் தன் 26 சதவிகித கச்சா எண்ணெய்யை விற்கிறது. சீனாவுக்கு பிறகு தான் இந்தியா. நாம் ஈரானின் மொத்த ஏற்றுமதியில் 23 சதவிகிதத்தை வாங்கி வருகிறோம். இந்த இரண்டு நாடுகள் தான் இப்போது வரை அமெரிக்கத் தடைகளை எதிர்த்தும் ஈரானுடன் எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன.
என்ன பண்டங்கள்
ஈரான் நாட்டுக்கு தேவையான கோதுமை, அரிசி, சோயாபீன் மீல், நுகர்வோர் சாதனங்கள் போன்ற பொருட்கள் ஈரானுக்கு பணத்துக்கு பதிலாக செலுத்த இருக்கிறது இந்தியா. இருப்பினும் இந்த முறை ஈரான் தன்னுடைய பெரும்பாலான தொகையை இந்திய ரூபாயாகவே பெற்றுக் கொள்வதாக தெரிவித்திருக்கிறது. அப்படி முழுமையாக இந்திய ரூபாயிலேயே ஈரான் பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் இந்தியாவுக்கு இரட்டை லாபம். போன பணம் மீண்டும் இந்தியா வந்தே தீரும்.
ஏன் இரட்டை லாபம்
மேலே சொன்னது போல ஈரானுக்கு தேவையான பொருட்களை வேறு ஏதாவது நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் போது டாலராகவோ அல்லது அந்த நாட்டின் கரன்ஸியாகவோ தான் தர வேண்டும். இப்போது இந்திய ரூபாய் ஈரானிடம் அதிகம் இருக்கும் பட்சத்தில், இந்தியாவிடம் இருந்து தான் ஈரான் கூடுதலாக பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. குறைந்தபட்சமாக இந்தியா கொடுத்த காசு தீரும் வரையாவது இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்தாக வேண்டும். மோடிஜி கலக்கிட்டீங்க.