சிங்கப்பூர்: ஈரான் நாட்டு எண்ணெய் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் சந்தையில் கூடுதலாக ஈரான் நாட்டு எண்ணெய்யும் விற்பனைக்கு வர உள்ளது.
ஏற்கனவே அளவிற்கு அதிகமாக இருக்கும் கச்சா எண்ணெய் சந்தையில் ஈரான் நாட்டின் வருகை இச்சந்தையை மிகப்பெரிய வீழ்ச்சியில் தள்ளியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக 11 வருடச் சரிவில் வர்த்தகம் செய்து வந்த கச்சா எண்ணெய் இன்று ஒரு பேரல் 29 டாலர் என்ற விலை வர்த்தகம் செய்யப்படுகிறது.
5 மடங்கு குறைவு...
கச்சா எண்ணெய்யின் விலை 2015ஆம் ஆண்டின் துவக்கத்திலும், தற்போதும் ஒப்பீடு செய்தால் சுமார் 5 மடங்கு விலை குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஈரான் நாட்டு வருகையையொட்டி WTI கச்சா எண்ணெய் 29.42 டாலராகவும், பிரென்ட் கச்சா எண்ணெய் 31.01 டாலராகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
நிதிநிலை மற்றும் நிதிப் பற்றாக்குறை
இத்தகைய சரிவால் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதிகளவிலான இழப்பைச் சந்தித்து வருகிறது, குறிப்பாகச் சவுதி அரேபியா. நடப்பு ஆண்டில் மட்டும் கச்சா எண்ணெய்யின் அதிரடி விலை சரிவால் சுமார் 98 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் இழப்பை இந்நாட்டு சந்தித்துள்ளது.
இதனால் பட்ஜெட் திட்டத்தை வடிவமைரக்க கூடவே பணம் இல்லாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் நிதிதிரட்ட புதிய திட்டத்தை வடிவமைத்து வருகிறது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள்.
பங்கு முதலீடுகள்
இத்தனை வருடங்களாக எண்ணெய் விற்பனையில் சேர்த்த பணத்தை அரபு நாடுகள் பல்வேறு நிறுவனங்களின் மூலம் பல்வேறு வகையில் பங்குச்சந்சையில் முதலீடு செய்துள்ளது.
தற்போது இந்நாடுகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், பங்குச்சந்தையில் செய்த முதலீட்டைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் மறைமுகமாகச் சர்வதேச பங்குச்சந்தை வர்த்தகம் பாதிக்கப்படும்.
உதாரணமாக, சவுதி ஜே.பி மோர்கன் நிறுவனத்தில் தனது பணத்தை முதலீடு செய்திருந்தால், ஜே.பி மோர்கன் பல்வேறு சந்தைகளில் இப்பணத்தை முதலீடு செய்திருக்கும். தற்போது இந்த முதலீட்டை திரும்பப்பெற நினைத்தால், மோர்கன் வாயிலாகச் சர்வதேச சந்தையில் இருக்கும் முதலீடு குறைக்கப்படும்.
இந்திய சந்தையில் எப்படி..
பொதுவாக இந்திய சந்தையில் உள்நாட்டு முதலீடுகளை விடவும் அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்களின் பணம் தான் அதிகம். இந்நிலையில், அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்கள் (உதாரணமாக ஜே.பி மோர்கன்) தங்களது முதலீட்டைக் குறைக்கும் பட்சத்தில் அதிகளவிலான முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறும்.
ஏற்றுமதி
ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடை நீக்கப்பட்டுக் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது பேரலுக்கு 29.42 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே நிலையைத் தொடர்ந்தால், அடுத்தச் சில வாரங்களில் கச்சா எண்ணெய் விலை 25 டாலராகக் குறையும் எனச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
5 லட்சம் பேரல்
கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒப்புதல் பெற்ற ஈரான் அடுத்தச் சில தினங்களில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மூழுவீச்சில் செய்யத் துவங்கும். இதனால் ஒரு நாளுக்கு 5 லட்சம் பேரல் வரையிலான கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஆசியா மற்றும் சீன சந்தை
கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை ஈரான் ஆசியா மற்றும் சீன சந்தைகளுக்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது.
ஏதற்குத் தடை.. ?
ஈரான் நாடுகள் சர்வதேச நாடுகளின் ஒப்புதல்கள் பெறாமல் மறைமுகமாக அணு ஆயுதம் செய்து வருவதாக உலகின் முக்கியப் பொருளாதார நாடுகள் இணைந்து ஈரான் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.
இதனால் கடந்த 3 வருடங்களாக ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி தடைப்பட்டது. தற்போது ஈரான் சர்வதேச கூட்டமைப்புகளின் சோதனைக்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், தடைக்கு விலக்க அளிக்கப்பட்டுள்ளது.
ஈரான்