Organization of Petroleum Exporting Countries என்று அழைக்கப்படும் OPEC நாடுகள், உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் அளவு பயங்கரமாக குறைந்து இருக்கிறதாம்.
1991-ம் ஆண்டு கால கட்டத்தில், உலக நாடுகளை எல்லாம் உலுக்கி எடுத்த வளைகுடா போர் நடந்தது. அந்த கால கட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு கணிசமாக குறைந்தது.
அதன் பின், இப்போது தான் கச்சா எண்ணெய் உற்பத்தி வரலாறு காணாத அளவுக்கு சரிந்து இருக்கிறதாம். கடந்த ஜூன் 2020-ல், ஒபெக் குழுவில் இருக்கும் நாடுகள் வழக்கமாக நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் அளவை விட 1.93 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை குறைவாகத் தயாரித்து இருக்கிறார்களாம்.
அதாவது, நாள் ஒன்றுக்கு, ஒபெக் நாடுகள் எல்லாம் சேர்ந்து 22.69 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யைத் தான் கடந்த ஜூன் 2020 மாதத்தில் தயாரித்து இருக்கிறார்கள்.
மே 1991 கால கட்டத்தில் வளைகுடா போரின் காரணமாக, கச்சா எண்ணெய் உற்பத்தி மிகப் பெரிய சரிவைச் சந்தித்தது. அதன் பின், ஜூன் 2020-ல் தான் கச்சா எண்ணெய் உற்பத்தி இவ்வளவு சரிந்து இருக்கிறது. சுருக்கமாக மே 1991-க்குப் பிறகு வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டு இருக்கிறது கச்சா எண்ணெய் உற்பத்தி.
சரி, ஏன் தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தியை இவ்வளவு குறைக்கிறார்கள்..? கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, பல நாடுகளும் கடுமையான லாக் டவுன்களை எல்லாம் அறிவித்து இருந்தார்கள். இதனால் சாதாரண கார், பைக், பேருந்து போன்ற வாகனங்கள் தொடங்கி... விமானங்கள் வரை பலதும் இயங்கவில்லை. எனவே பெட்ரோல், டீசல், விமான எரிபொருளான ஏர் டர்பைன் ஃப்யூயல் என எல்லா எரிபொருளுக்கான தேவையும் மிகப் பெரிய அளவில் சரிந்தது.
சந்தையில் எரிபொருளுக்கான தேவையே இல்லாத போது, கச்சா எண்ணெய்யை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும். ஆகையால் கச்சா எண்ணெய்க்கான தேவையும் மிகப் பெரிய அளவில் சரிந்தது. அதோடு கச்சா எண்ணெய் விலையும் வீழ்ச்சி கண்டது.
இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி கட்டத் தான் ஒபெக் நாடுகள் தன் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துக் கொண்டார்கள். ஆனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. எனவே கச்சா எண்ணெய்க்கான தேவை மீண்டும் வீழ்ச்சி காணுமோ என்கிற பயமும் சந்தையில் நிலவிக் கொண்டே இருக்கிறது.