வலுவான போட்டியின் காரணமாக சீனாவை சமாளிக்க முடியாமல் சாம்சங் நிறுவனம், சீனாவில் இருந்து தனது உற்பத்தியை நிறுத்தியது.
சாம்சங் மிகப்பெரிய வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், சீனாவில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் சீனாவில் இருந்து வெளியேறியுள்ளது.
அதிலும் சர்வதேச அளவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையை கொண்டிருக்கும் சீனாவே, தனது உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்க, தனது உள்ளூர் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், சாம்சங் நிறுவனத்துக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
கடுமையான போட்டி
கடந்த ஜூன் மாதத்திலேயே சீனாவில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக இந்த நிறுவனம், சீனாவில் உள்ள உற்பத்தி ஆலையில் உற்பத்தியை குறைத்தது. மேலும் கடந்த ஆண்டே மற்றொரு தொழில்சாலையை நிறுத்தியது, இது நாட்டில் நிலவி வரும் கடுமையான போட்டியினையே அடிக்கோடிட்டே காட்டுகிறது. இந்த போட்டியால் அதிகரித்து வரும் தொழிலாளர் செலவுகள் மற்றும் சீனாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக சீனாவில் இருந்து தனது உற்பத்தியை நிறுத்திக் கொண்டது சாம்சங். இந்த நிலையில் பலர் வேலையிழந்துள்ள நிலையும் உருவாகியுள்ளது.
சோனி நிறுவனமும் இப்படி தான்
இந்த உற்பத்தி நிறுத்தம் என்பது சாம்சங் நிறுவனத்தை மட்டும் அல்ல, இன்னும் பல நிறுவனங்களும் இப்படிதான், நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் செலவினங்கள் அதிகரிப்பு காரணமாக பல நிறுவனங்கள் வெளியேறியுள்ளன. குறிப்பாக ஜப்பானின் சோனி நிறுவனமும் சீனாவில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பெய்ஜிங்கில் இருந்த தனது உற்பத்தி தளத்தினை நிறுத்தி விட்டு வெளியேறியுள்ள சோனி, தாய்லாந்தில் மட்டும் உற்பத்தி செய்ய போவதாகவும் அறிவித்துள்ளது.
ஆப்பிள் மட்டும் மாறவில்லை
பொருளாதார மந்தம் என்ற பிரச்சனையே அமெரிக்கா - சீனாவுக்கும் இடையிலான வர்த்தகபோரால் தான், ஆனால் இதனால் பாதிப்பு என்பது இதனை சுற்றியுள்ள நாடுகளுக்கே. அமெரிக்காவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், பல்வேறு தடைகளையும் மீறி தற்போது வரை சில உதிரி பாகங்களை சீனாவில் உற்பத்தி செய்து கொண்டு தான் வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அதிக வரியையும், இதே சீனா அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரியையும் விதித்து வந்த நிலையில், இன்று வரை இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு கிடைத்தபாடில்லை. எனினும் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் உள்ள சில குறிபிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சாம்சங்கின் தேவை
சீனாவில் சாம்சங் போனின் பங்கானது கடந்த முதல் காலாண்டில் 1% மாக குறைந்துள்ளது என்றும், இது கடந்த 2013ல் 15% பங்காக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இது வேகமாக வளர்ந்து வரும் ஹூவாய் டெக்னாலஜிஸ் மற்றும் சியோமி கார்ப் நிறுவனங்கள் இந்த இடத்தை பிடித்துள்ளன என்பததையே காட்டுகிறது. ஆக சீனா உள்ளூர் பொருட்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பதை, நாம் இதன் மூலம் அறியமுடிகிறது என்றும் சந்தை ஆராய்ச்சியாளரான கவுண்டர்பாயிண்ட் தெரிவித்துள்ளது.