சீனாவின் மிகப் பிரபலமான டிக் டாக் செயலிக்கு, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, அதற்கு தடை விதிக்கும் உத்தரவின் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டு இருந்தார்.
இந்த தடை உத்தரவின் படி செப்டம்பர் 20க்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனங்களுகு விற்க வேண்டும். அல்லது இதற்கு தடை விதிகப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இதற்கான ஆணையை அமெரிக்க வர்த்தகத் துறையும் வெளியிட்டு இருந்தது. அதோடி டிக் டாக் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என அமெரிக்க வர்த்தகத்துறை கூறியது.
டிக்டாக் ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஆசிர்வாதம்
ஆரம்பத்தில் அமெரிக்கர்களின் 100 மில்லியன் பயனர்களின் தரவினை, சீனாவுக்கு கொடுப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் பைட் டான்ஸ் நிறுவனமோ இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் தான் டிக்டாக்கினை தடை செய்யப்போவதாகவும் கூறியிருந்தார். ஆனால் தற்போது ஆரக்கிள்+ வால்மார்ட்+ டிக்டாக் நிறுவனங்கள் இணைந்து ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கு தனது ஆசிர்வாதம் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா நிறுவனத்தினால் கட்டுப்படுத்தப்படும்
இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், டிக்டாக்கின் தலைமை நிறுவனமான பைட்டான்ஸ், ஆரக்கிள், வால்மார்ட் இவை மூன்றும் இணைந்து செயல்படலாம். இவை மூன்றும் இணைந்து ஒரு புதிய நிறுவனத்தினை உருவாக்க வேண்டும். இதன் மூலம் டிக்டாக் நிறுவனம், ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
டிக்டாக் குளோபல்
இது குறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தால் டிக்டாக் குளோபல் என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் பெரும்பாலும் அமெரிக்கர்கள் இயக்குனர்களாக இருப்பர். அதோடு அமெரிக்கா பாதுகாப்பு நிபுணரும் அந்த குழுவில் இருப்பர் என்று தெரிவித்துள்ளது.
யாருக்கு எவ்வளவு பங்கு?
இந்த ஒப்பந்தத்தின் படி, புதிய நிறுவனத்தின் 53% பங்குகளை அமெரிக்கா நிறுவனங்களும், 36% பங்குகளை சீனா நிறுவனமும் வைத்திருக்கும். அதோடு முக்கிய தொழில் நுட்பங்களுக்கும், அமெரிக்கர்களின் தகவல் பாதுகாப்புக்கும், ஆரக்கிள் நிறுவனம் பொறுப்பேற்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு சாதகமாக உள்ளது?
மேலும் இந்த புதிய ஒப்பந்தத்தினால் அமெரிக்கா கருவூலத்திற்கு 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய வரி கிடைக்கும். அதோடு இந்த நிறுவனம் குழந்தைகளுக்கு ஆன்லைனில் கல்வி கற்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது, இது இன்னும் திருப்தி அளிப்பதாக உள்ளது எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.
அரசியல் காரணங்களா?
ஆரம்பத்தில் டிரம்ப் அரசியல் காரணங்களுக்காக டிக் டாக்கினை தடை செய்வதாக மிரட்டுகிறார் என்ற சந்தேகங்கள் இருந்தன. இதன் காரணமாகவும், அவர் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இருப்பதாகவும் கூறப்பட்டன. ஆனால் தற்போது அதே காரணங்களுக்கான அவர் சில விதிமுறைகளை தளர்த்தி டிக் டாக் ஆரக்கிள், வால்மார்ட் நிறுவனங்களின் ஒப்பந்தத்தினை டிரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது மிகப்பெரிய வெற்றி
இந்த கூட்டணி அமெரிக்காவில் மிகப்பெரிய நிதியினை முதலீடு செய்யப்போகிறார்கள். இதனைத் தான் நான் கேட்டது. இது மிகப்பெரும் வெற்றி, இந்த புதிய நிறுவனத்தின் தலைமையகம் டெக்சாஸ் ஆக இருக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதோடு இந்த கூட்டணி 25,000 அமெரிக்கர்களை பணியில் அமர்த்துவதாக இந்த நிறுவனம் உறுதியளித்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பு ஒப்பந்தம்
இதில் மிக முக்கியமாக கவனிக்கதக்க ஒரு விஷயம் என்னவெனில், அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நவம்பர் 3 அன்று நடைபெற உள்ள நிலையில், இந்த முடிவு வந்துள்ளது. கடைசி வரையில் மிக நெருக்கடியாக சென்று கொண்டு இருந்த ஒப்பந்தமானது, இறுதியில் அமெரிக்காவுக்கு சாதகமாக முடிவடைந்துள்ளது, அமெரிக்கா மக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.
தேசிய பாதுகாப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும்
இதற்கிடையில் அரசாங்கம் தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்ட வேண்டும். ஆனால் அவர்கள் அமெரிக்கா நிறுவனங்களின் ஒப்பந்தத்தின் பின்னணியில் இருக்க கூடாது என்று கார்னகி மெலன் பல்கலைக் கழகத்தில் டிஜிட்டல் மீடியா மற்றும் மார்கெட்டிங் பேராசிரியர் அரி லைட்மேன் கூறியுள்ளார்.
ஒரே கல்லில் மூன்று மாங்காய் தான்
இப்படி பல தரப்பிலும் பலவிதமாக கருத்துகள் நிலவி வந்தாலும், டிரம்ப் பார்வையில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் இனி இது அமெரிக்கா நிறுவனமாக உருவெடுக்கும். அதோடு 25 ஆயிரம் பேருக்கு வேலை, அரசுக்கு வருமானம், எல்லாவற்றையும் விட சீனாவுக்கு பதிலடியும் கொடுக்கும் விதமாகவே உள்ளது. அதுவும் தேர்தல் சமயத்தில் இந்த முடிவு, டிரம்புக்கு சாதகமாகவே முடிந்துள்ளது. ஆக இது கொண்டாட வேண்டிய விஷயம் தானே.