உலகின் மிகவும் பிரபலமான வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்ற செயலியினைப் பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் டாலர்கள் கொடுத்து 2014-ம் ஆண்டு வாங்கி இருந்தது. அதன் தலைமை செயல் அதிகாரியாக வாட்ஸ்ஆப் செயலியை உருவாக்கிய ஜான் கூம் நிர்வகித்து வந்த நிலையில் கேம்பிர்ட்ஜ் அனலிட்டிக்கா விவகாரங்களை அடுத்து இந்த நிறுவனத்தினை விட்டுத் தற்போது முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளார்.
யார் புதிய சிஇஓ?
ஜான் கூம் பேஸ்புக் நிறுவனத்தினை வெளியேறும் நிலையில் அவரது பதவியினைக் கூகுள் நிறுவனத்தின் முன்னால் ஊழியரான நீரஜ் அரோரா நிர்வகிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
ஜான் கூம்
பேஸ்புக் நிறுவனத்தினை விட்டு வெளியேற முடிவு செய்து இருப்பதாகக் குறிப்பிட்ட ஜான் கூம் "நான் நினைத்தது போன்று வாட்ஸ்ஆப் செயலியை மக்கள் பல வகையில் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்தக் குழுவும் பல புதிய விஷயங்களை அறிமுகம் செய்யும் என நம்புகின்றேன் மற்றும் வெளியேறுகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
என்ன செய்யப் போகிறார் ஜான் கூம்?
ஜான் கூம் சில நாட்களுக்குத் தொழில்நுட்பங்களை விட்டு வெளியேற இருப்பதாகவும், குளிர்ந்த காற்று வாங்கவும், தனது கார்களைப் பராமரிக்கவும் மற்றும் ஃப்ரீஸ்பே விளையாடவும் நேரத்தினைச் செலவிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
யார் இந்த நீரஜ் அரோரா?
ஒருவழியாகப் பேஸ்புக் நிறுவனத்திற்கு ஜான் கூம் குட் பை கூறியுள்ள நிலையில் அந்த இடத்தினைக் கூகுள் நிறுவனத்தின் முன்னால் கார்ப்பரேட் மேம்பாட்டு மேலாளர் நீரஜ் அரோரா கவனிக்க அதிக வாய்ப்புள்ளதாக்வும் டெக் கிரன்ஞ் தெரிவித்துள்ளது. பேஸ்புக் வாட்ஸ்ஆப் செயலியை வாங்கும் முன்பு இருந்தே நீரஜ் அரோரா வாட்ஸ்ஆப் நிறுவனத்தில் 2011-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.
எவ்வளவு இழப்பு?
பேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை ரத்துச் செய்து விட்டு ஜான் கூம் வெளியேறுவதால் இவருக்கு 1 பில்லியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்படும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.