நிலைமை சரியில்லைங்க. முதலீட்டு சந்தை எங்கு பார்த்தாலும் ஸ்திரமற்றுக் காணப்படுகிறது. உலகப் பொருளாதாரம் இன்னும் மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. யூரோவுக்கும் பிரச்சினை, டாலருக்கும் பிரச்சினை, நம்ம இந்திய ரூபாய்க்கும் பிரச்சினைதான்.
உலகப் பொருளாதார சந்தையின் சீர்குலைவில் இந்திய நிதிச் சந்தையும் தப்பவில்லை. சமீபத்தில் நமது நாட்டின் நிதித் தரத்தை சர்வதேச கடன் வழங்கும் வங்கி அமைப்புகள் தரம் குறைத்து விட்டன. இதனால் மேலும் சிக்கலாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுப்பதெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி - என்று பேச மறுக்கிறார்கள்.
பொருளாதார நிலை இப்படி இருக்க நம்ம ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா... கையில் டப்பு கொஞ்மாச்சும் இருந்தால்தானே, டப்பா சைசிலாவது வீடு வாங்க முடியும். எனவே பொருளாதார தேக்க நிலை ரியல் எஸ்டேட்காரர்களையும் விடவில்லை.
ரியல் எஸ்டேட் தொழிலில் எங்கு பார்த்தாலும் புலம்பல் மயமாகத்தான் இருக்கிறது. ஒருபக்கம் குடியிருப்புகளின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. மறுபக்கம் பிளாட், அபார்ட்மென்ட் ஆகியவற்றை வாங்குவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.இதற்குக் காரணம், வீடுகளின் விலை அதிகமாக இருப்பதால்.
ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதற்கு பலரும் தற்போது நிறைய யோசிக்கின்றனர். காரணம் பெரும்பாலான டெவலப்பர்கள் கடனில் மூழ்கிக் கொண்டுள்ளனர். அவர்களோடு சேர்ந்து நாமும் மூழ்க வேண்டுமா என்று முதலீட்டாளர்கள் யோசிக்கின்றனர்.
ஆனால் வீடு வாங்க நினைப்போர் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நிச்சயம் அவர்களுடைய பட்ஜெட்டுக்கேற்ற, திருப்திகரமான வீடுகளை வாங்குவது சாத்தியம்தான் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.
முதலில் நல்ல ஒரு பில்டரைப் பாருங்கள். அவருடன் வீடு குறித்துப் பேசுங்கள். விலை குறித்துப் பேசுங்கள். இப்போது ரியல் எஸ்டேட் டவுனாக இருப்பதால் அடித்துப் பேசினால் ஓரளவுக்கு விலையைக் குறைக்க முடியும்.
வாங்குவதற்கு ஆள் குறைந்து வருவதால், வருகிறவர்களைத் தக்க வைத்துக் கொள்ளவே எந்த பில்டரும் நினைப்பார். எனவே புத்திசாலித்தனமாக பேசுவோருக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்புண்டு.
வீட்டுக் கடன் வட்டி விகிதம் பெரிய அளவில் குறையவில்லை என்ற போதிலும் எதிர்காலத்தில் குறையலாம். எனவே அதுகுறித்து பெரிதாக கவலைப்பட வேண்டாம். எனவே தொடர்ந்து முன்னேறப் பாருங்கள்.
ஒரு வீட்டை வாங்குவதற்கு முன்பு அந்த வீடு குறித்த சட்டரீதியான பல்வேறு தகவல்களை சரி பார்த்துக் கொள்வது நல்லது. வீட்டில் வில்லங்கம் இருக்கிறதா, சொத்துப் பிரச்சினை இருக்கிறதா, யார் பெயரில் உள்ளது என்பது குறித்தெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கட்டிக் கொண்டிருக்கும் பிளாட்டுக்குப் பதில், கட்டி முடிக்கப்பட்ட பிளாட்டை வாங்கி பால் காய்ச்சி குடியேறுவது உசிதமானது.
எந்த இடத்தில் வீடு உள்ளது என்பதும் முக்கியமானது. அதேபோல உங்களது பட்ஜெட்டையும் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டின் அளவும் அதேபோல முக்கியமானதே. வீட்டின் விலை உங்களுக்கேற்றார்போல சகாயமானதாக இருந்தாலும், ரொம்ப தூரத்தில் இருந்தாலோ, அல்லது அக்கம் பக்கத்தில் காற்றைத் தவிர வேறு யாருடைய நடமாட்டமும் இல்லாமல் இருந்தாலோ, அந்த வீட்டை வாங்குவதில் அர்த்தம் இல்லை. எனவே அப்படிப்பட்ட சூழலில் வீடு வாங்க வேண்டாம்.
பொருளாதார தேக்க நிலை வாங்குவோருக்கு பெரிய அளவில் நெருக்கடியைத் தரவில்லை என்பதே உண்மை. மாறாக, பில்டர்களுக்குத்தான் இது ஒருவிதமான நெருக்கடியைக் கொடுத்துள்ளது. எனவே பேரம் பேசி, சாதுரியமாக காய் நகர்த்தினால் விலையை சற்றுக் குறைத்து சகாயமான முறையில் வீடு வாங்குவது சாத்தியம்தான்..
கூட்டிக் கழிச்சு யோசிச்சுப் பாருங்க, கணக்கு சரியா வரும்...!