
வறண்ட ஆண்டு என்றால் என்ன?
ஒட்டுமொத்த மழை பற்றாக்குறை அளவின் நீண்ட கால சராசரியில் இருந்து 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தாலும், 20 சதவீதத்திற்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டாலும் அந்த ஆண்டை இந்திய வானிலை ஆய்வு துறை வறண்ட ஆண்டாக அறிவிக்கும்.
வறட்சியில் பல வகைகள் உண்டா?
ஆம். தாக்கத்தைப் பொறுத்து வறட்சி மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.
ஒரு பகுதியில் பெய்யும் மழையின் அளவு நீண்ட கால சராசரியில் இருந்து 25 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் அது மீட்டியராலஜிக்கல் வறட்சி எனப்படும். நிலத்தடி தண்ணீர் வெகுவாகக் குறைந்து ஏரிகள், ஆறுகள் மற்றும் நீர்தேக்கங்கள் வறண்டால் அது தண்ணீர் பஞ்சம் ஆகும். அதுவே மண்ணின் ஈரப்பதம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டால் அது விவசாய வறட்சி ஆகும்.
எப்பொழுது வறட்சி என்று அறிவிக்கப்படுகிறது?
இந்தியாவில் பயிர் உற்பத்தி மதிப்பீட்டின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்கள் வறட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள். 50 சதவீதத்திற்கும் குறைவாக பயிர்கள் விதைக்கப்படும் பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. மழை அளவு, விளைச்சல் மற்றும் மண்ணின் ஈரப்பதம் ஆகியவற்றை வைத்து வறட்சி நிலை அறியப்படும்.
வறட்சி நிலை அறிவிக்கப்பட்ட பிறகு என்ன நடக்கும்?
நிவாரணப் பணிகள் குறித்து அரசு திட்டமிட்டு செயல்படுத்தும். வேலைவாய்ப்பு அளித்தல், உணவு, குடிநீர், கால்நடைகளுக்கு தீவனம் உள்ளிட்டவற்றை மாநில அரசு வழங்கும்.
வறட்சியால் பொருளாதாரம் எப்படி பாதிக்கும்?
பொருளாதாரத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் வறட்சியின் தாக்கம் இருக்கும். விவசாய உற்பத்தியும், தண்ணீர் அளவும் குறையும், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் அதிக அளவில் இறக்கும். உற்பத்தி குறைவால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும், விவசாய கடன் அதிகரிக்கும், நுகர்வோர் தேவை அதிகரிக்கும். மேலும் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும். இதனால் மக்கள் வேறு இடங்களில் பஞ்சம் பிழைக்கச் செல்வர்.


Click it and Unblock the Notifications