
2011-2012 நிதியாண்டில் சுமார் 1.64 கோடி பேர் தங்கள் வருமான வரிக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்துள்ளனர் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இனி வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரி்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பெல்லாம் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சார்டர்டு அகௌண்டன்ட்டை தேடிச் சென்று அவரிடம் நம் வருமானம் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும். ஆனால் இன்றைய தொழில்நுட்பத்தில் எங்கிருந்தும், எந்நேரத்திலும் ஆன்லைனில் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். இதனால் காலமும், நேரமும், அலைச்சலும் மிச்சம். மேலும் ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கு பைசா செலவில்லை.
இந்த காரணங்களினால் தற்போது பெரும்பாலானோர் தங்கள் வருமான வரிக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்யவே விரும்புகிறார்கள். அதிலும் ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை கட்டாயம் ஆன்லைன் மூலம் தான் தாக்கல் செய்ய வேண்டும். ரூ. 10 லட்சத்திற்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் தாங்கள் விரும்பினால் ஆன்லைனிலோ அல்லது சார்டர்ட் அகௌண்டன்ட் மூலமாகவோ வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்.
ஆன்லைனில் தாக்கல் செய்தால் அது பாதுகாப்பானதா என்று அஞ்ச வேண்டாம். அது நிச்சயம் பாதுகாப்பானது தான். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வோர் முதலில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும் அதன் பிறகே அவர்களுக்கு ஐடியும், பாஸ்வேர்டும் வழங்கப்படும். அதனால் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வோர் தைரியமாக ஆன்லைனில் செய்யலாம்.


Click it and Unblock the Notifications