புதிதாக வீடு வாங்கினால் வீட்டுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பூஞ்செடிகள், அலங்காரப் பொருட்கள் வாங்குவதில் தான் பலர் நேரத்தை செலவிடுகின்றனர். வீடு வாங்கி அதை அழகுபடுத்தினால் மட்டும் போதாது. அதை அலங்கரிக்க செலவிடும் நேரத்தில் சிறிது நேரத்தை வீட்டுக் காப்பீடுத் திட்டம் எடுக்க செலவிடலாம். தீ விபத்தோ, திருட்டோ நடந்துவிட்டால் காப்பீட்டுத் திட்டம் எடுத்திருந்தால் கலங்கத் தேவையில்லை.
அதனால் வீடு வாங்கும் கையோடு வீட்டுக் காப்பீட்டுத் திட்டத்தையும் எடுத்து நிம்மதியாக இருங்கள். தீ விபத்து ஏற்பட்டால் வீடு மற்றும் உரிமையாளரின் பொருட்களுக்கான பணத்தை காப்பீட்டு நிறுவனம் அளிக்கும். திருடு போனாலும் கூட அந்த பொருட்களின் மதிப்பிற்குரிய பணம் கிடைக்கும். தீ விபத்தால் வீடு சேதமைடந்து அதனால் உரிமையாளர் வேறு இடத்தில் வசி்த்தால் அந்த வீட்டை சரிசெய்து மீண்டும் குடியேறும் வரை அவர் தற்காலிகமாக தங்கியிருக்கும் இடத்திற்கான வாடகையை காப்பீட்டு நிறுவனமே அளிக்கும்.
ஆனால் வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் வீட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனம் பணம் அளிக்காது. ஆனால் இயற்கை சீற்றங்களால் வீடு பாதிக்கப்பட்டாலும் காப்பீடு நிறுவனம் பணம் அளிக்கும் வசதி உள்ளது. அதை காப்பீடு எடுக்கும் சமயத்தில் நீங்கள் தான் கேட்டுப் பெற வேண்டும். அதற்காக கூடுதல் பணம் செலுத்த வேண்டும்.
இது தவிர நீங்கள் கட்டில், பீரோ போன்றவற்றை வைக்கையில் வீடு சேதமடைந்தாலும் காப்பீட்டு நிறுவனம் பணம் அளிக்காது.
அதே சமயம் தீ விபத்தில் வீடு சேதமடைந்துவிட்டால் நீங்கள் எவ்வளவு விலை கொடுத்து வீட்டை வாங்கினீர்களோ அந்த தொகையை காப்பீட்டு நிறுவனம் அளிக்கும்.
வரும் முன் காப்பதே சிறந்தது. அதனால் வீடு வாங்கும்போதே காப்பீட்டுத் திட்டம் எடுப்பது நல்லது.