திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் மண்டல, மகர விளக்கு சீசனில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்குகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தும், தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதையடுத்து பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஆன்லைன் முலம் முன்பதிவு செய்யும திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கேரள போலீசார் இந்த தி்ட்டத்தை தொடங்கினர்.
இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. கடந்த வருடம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் இந்த வருடமும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய விரும்பும் நாளுக்கு 6 முதல் 8 வாரங்களுக்கு முன்பு வரை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக கோவில் இணையதளம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்யும் தேதி, நேரம், பெயர், வயது, புகைப்படம், முகவரி, புகைப்பட அடையாள அட்டை ஆகிய விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு பதிவுக்கான கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பனை பக்தர்கள் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதில் பக்தரின் பெயர், புகைப்படம், தரிசன தேதி, நேரம், குறியீட்டு எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்த கூப்பனை பக்தர்கள் தரிசனத்துக்கு வரும்போது கொண்டு வர வேண்டும். பம்பையில் தனியாக அமைக்கப்பட்டுள்ள கேரள போலீஸ கவுன்டரில் கூப்பனை சரிபார்த்தபின் சன்னிதானத்தில் தனி வரிசையில் நின்று, தரிசனம் செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குகிறது. புரட்டாதி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. வருகிற 21ம் தேதி இரவு வரை சபரி்மலை கோயில் நடை திறந்திருக்கும்.