கிரெடிட் கார்டு மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 மாதத்தில் மட்டும் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ. 30 கோடி மோசடி நடந்துள்ளது. மோசடி நபர்கள் பெரும்பாலும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் உள்ள மெஷின்களை வைத்து தான் கிரெடிட் கார்டு விவரங்களைப் பெறுவதாக கூறப்படுகிறது.
கிரெடிட் கார்டு மோசடிகளை தடுக்க என்ன செய்யலாம்?
கிரெடிட் கார்டுகள் இரண்டு வகையில் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது. இரண்டு ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது. இந்த இரண்டு முறை பயன்பாட்டிலுமே நீங்கள் ஏமாந்துவிடாமல் இருக்க வேண்டுமா?
ஆன்லைன் பயன்பாடு:
ஆன்லைனில் கிரெடிட் கார்டை வைத்து பொருட்கள் வாங்கையில் ஹெச்டிடிபிஎஸ் என்று துவங்கும் இணையதளத்தை பயன்படுத்தவும். ஹெச்டிடிபிஎஸ்-ல் உள்ள எஸ் என்பது பாதுகாப்பானது என்பதைக் குறிப்பதாகும்.
அட்ரஸ் பாரில் அல்லது பக்கத்தின் இறுதியில் வலது புறத்தில் லாக் போன்ற வடிவம் உள்ளதா என்று பார்க்கவும்.
இந்தியாவில் ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்யும்போது கிரெடிட் கார்டு எண் தவிர அந்த கார்டுக்கு பின்னால் இருக்கும் சிவிவி என்ற 3 இலக்க எண்களை குறிப்பிடுவதுடன் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய உங்கள் வங்கி அனுப்பும் ஐஎம்இ பாஸ்வேர்டையும் பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் இணையதளத்தில் இதை எல்லாம் கேட்காவிட்டால் அதை பயன்படுத்தி பொருட்கள் வாங்காதீர்கள்.
ஆன்லைனில் வெர்ச்சுவல் கிரெடிட் கார்டுகளை மட்டும் பயன்படுத்தவும். நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டை வைத்து வழங்கப்படும் 16 இலக்க எண்கள் தான் வெர்ச்சுவல் கிரெடிட் கார்டு ஆகும். வெர்ச்சுவல் கிரெடிட் கார்டை பெற உங்கள் வங்கியில் பதிவு செய்யவும். வங்கி உங்களுக்கு லாகின் மற்றும் பாஸ்வேர்டை அளிக்கும். அதில் லாகின் செய்து வெர்ச்சுவல் கார்டை வைத்து எவ்வளவு செலவு செய்யப் போகிறீர்கள் என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் கிரெடிட் கார்டின் மொத்த மதிப்பு யாருக்கும் தெரிய வராது.
கிரெடிட் கார்டுகளுக்கு பதில் ப்ரீ-பெய்டு கார்டுகளை பயன்படுத்தலாம்.
குறைந்தபட்ச மதிப்பு உள்ள மற்றொரு கிரெடிட் கார்டை வாங்கி அதை ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம்.
ஆஃப்லைன் பயன்பாடு:
ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்கிறீர்கள். சாப்பிட்டுவிட்டு உங்கள் கிரெட்டி கார்டை வெயிட்டரிடம் கொடுக்கிறீர்கள். அந்த நபர் கார்டை எங்கோ எடுத்துச் சென்று ஸ்வைப் மெஷினில் ஸ்வைப் செய்கிறாார். அந்த நபர் மோசடிக்காரர் என்றால் அவர் உங்கள் கார்டை ஸ்கிம்மரிலும் ஒரு தேய் தேய்க்கலாம். ஸ்கிம்மர் என்னும் இயந்திரம் உங்கள் கார்டு விவரங்களை பதிவு செய்து வைத்தக்கொள்ளும். அந்த விவரங்களை வைத்து போலி கார்டு தயாரிக்கலாம். அந்த போலி கார்டை வைத்து ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்யலாம், ஏன் நேரில் கூட பயன்படுத்தலாம்.
இத்தகைய மோசடியில் இருந்து எப்படி தப்பலாம்?
ஹோட்டலில் வெயிட்டரிடம் கிரெடிட் கார்டை கொடுத்தால் அவர் ஸ்வைப் செய்ய செல்லும்போது நீங்களும் அவருடன் செல்லுங்கள். சில சமயங்களில் ஸ்வைப் மெஷினில் ஸ்கிம்மரையும் சேர்த்து வைத்திருப்பார்கள். சிலர் ஸ்வைப் மெஷினை ஹேக் செய்து கார்டு விவரங்களை எடுப்பார்கள். அப்படி இருக்கையில் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் கார்டு ஏதாவது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நினைத்தால் உடனே வங்கிக்கு போன் செய்து அதை பிளாக் செய்யுங்கள். மேலும் புது கார்டு வாங்கிக்கொள்ளுங்கள்.
சிப் மற்றும் பின் உள்ள கார்டுக்கு மாறுங்கள். அதாவது கிரெடிட் கார்டின் முன்பக்கம் சிறிய அட்டைப் போன்ற சிப் இருக்கும். சிப் உள்ள கார்டை 4 இலக்க பின் நம்பர் இல்லாமல் பயன்படுத்த முடியாது. மேலும் பண பரிவர்த்தனை விவரங்கள் அந்த சிப்பில் பதிவாகும். மேலும் இந்த கார்டில் இருந்து விவரங்களை ஸ்கிம்மரால் எடுக்க முடியாது.
கிரெடிட் கார்ட் பின்புறம் உள்ள 3 இலக்க சிவிவி எண்ணை பேனா அல்லது மார்க்கரை வைத்து அழித்துவிடுங்கள். முன்னதாக அந்த எண்ணை மனனம் செய்துகொள்ளுங்கள்.
சாதாரண கிரெடிட் கார்டுகளுக்கு பதில் சிப் உள்ள கார்டுகளை அளிக்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.