சென்னை: அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியவில் ஏராளமானோர் தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்களில் நிறைய பேர் உள்நாட்டு பயண காப்பீடு வைத்திருப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பல பகுதிகளில் உறவினர்கள் இருப்பதால், அவர்கள் பயணம் செய்யும் போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உறவினர்களை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர்.
ஆனால் எல்லா நேரமும் உறவினர்களை வைத்து சமாளிக்க முடியாது. உள்நாட்டு பயண காப்பீடு வைத்திருந்தால் இந்தியாவின் எந்த பகுதிக்கும் பிரச்சனை இல்லாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும்.
உள்நாட்டு பயண காப்பீடு எதற்கு?
விமானம் மூலம் பயணம் செய்யும் போது உடமைகள் தனியாக வைக்கப்பட்டு, விமான நிலையத்தில் நாம் இறங்கிய பின்பு அவை நம்மிடம் வந்து சேரும். ஒரு சில நேரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய உடமைகளை விமான பணியாளர்கள் மாற்றி வைத்துவிட்டால் அவை வேறொரு இடத்திற்கு சென்றுவிடும். பின் அந்த உடமைகள் நமது கைக்கு வந்து சேர 24 மணி நேரம் கூட ஆகலாம். இந்த சூழலில் நாம் காத்திருக்க வேண்டிய நிலை வரும். அல்லது நமது உடமைகள் எந்த இடத்திற்கு சென்று இருக்கிறதோ அந்த இடத்திற்கு நமது செலவில் பயணம் செய்து அவற்றைப் பெற வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் உள்நாட்டு பயண காப்பீடு அதற்கான செலவை ஏற்றுக் கொள்ளும்.
எதிர்பாராத மருத்துவச் செலவு:
மலையேற்றம் அல்லது மலை பயணம், வீரதீர விளையாட்டுகள் போன்றவற்றில் எதிர்பாராத விபத்து நேரலாம். அந்த நேரங்களில் நமது உறவினர்கள் நம்மை மருத்துவமனையில் சேர்ப்பார்கள். ஆனால் மருத்துவ செலுவுகளை நாம் தான் செலுத்த வேண்டும். உள்நாட்டு பயண காப்பீடு வைத்திருந்தால் அந்த நேரத்தில் அதுவே மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளும்.
பயணத்தை ரத்து செய்தல்:
பயணம் இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் முன்பதிவு செய்து வைத்திருப்போம். ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த பயணத்தை ரத்து செய்ய வேண்டி வரும். அப்போது முன்பதிவு செய்த டிக்கெட்டுகளையும் ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக ரயிலில் முன்பதிவு செய்த டிக்கட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்றால் அதற்கான கட்டணம் தற்போது அதிகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் உள்நாட்டு பயண காப்பீடு அந்த கட்டணத்தை செலுத்திவிடும்.
மாற்றப்படும் பயணம்:
ஒரு சில நேரங்களில் விமான பயணத்தின் போது தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வேறு இடங்களுக்கு விமானங்கள் திருப்பிவிடப்படும். அப்போது அதற்கான இழப்பு மற்றும் அங்கு ஏற்படும் விடுதி வாடகை போன்றவற்றை பயண காப்பீடு பார்த்துக் கொள்ளும்.
விமான தாமதம்:
6 மணி நேரத்திற்கும் மேலாக விமானங்கள் தாமதமானால் அதற்கான இழப்பையும் உள்நாட்டு பயண காப்பீடு நமக்கு வழங்கும்.
மேலே கூறப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் மிகச் சாதாரணமாக இந்தியாவில் நிகழக்கூடியவைகளாகும். இந்த சூழலில் நாம் உள்நாட்டு பயண காப்பீடு வைத்திருந்தால், இந்தியாவின் எந்த பகுதிக்கும் கவலை இல்லாமல் மகிழ்ச்சியுடன் பயணம் செய்யலாம்.


Click it and Unblock the Notifications