ஏற்கனவே இந்தியாவில் இருந்தபொழுது எடுத்த பாலிசிக்கள் நீங்கள் தற்பொழுது வெளிநாடு சென்று என்.ஆர்.ஐ. ஆகிவிட்டாலும், இந்திய பணமதிப்பில் செல்லத்தக்கவை. எனினும் நீங்கள் உங்களது எல்.ஐ.சி. கிளையில் உங்கள் வெளிநாட்டு முகவரி மற்றும் நீங்கள் என்.ஆர்.ஐ. ஆன தகவல் ஆகியவற்றை தெரிவித்துவிட வேண்டும்.
என்.ஆர்.ஐ.களுக்கான படிவம் ஒன்று உள்ளது. அதனையும் நிரப்பி உங்களது கிளையில் அளிக்க வேண்டும்.
1. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) என்பவர்கள் இந்திய அரசினால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் வைத்துள்ள இந்திய குடிமக்கள். ஆனால் தற்காலிகமாக வெளிநாடுகளில் வசிப்பவர்கள்.
2. வெளிநாடு வாழ் இந்தியர்கள் கிரீன் கார்டு வைத்துள்ளவர்களாக இருக்கக் கூடாது. தாம் தற்போது வசிக்கும் நாட்டிலோ, அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டிலோ குடியுரிமை கோரி விண்ணப்பித்திருக்கக் கூடாது, அல்லது எதிர்காலத்தில் விண்ணப்பிக்க திட்டமிடுபவராக இருக்கக் கூடாது.
3. இந்திய வம்சாவளி மக்கள் (PIO) வேறு நாட்டு குடியுரிமை பெற்றிருந்தாலோ, வெளிநாட்டில் வசித்து வந்தாலோ இந்தியக் காப்பீட்டுத் திட்டங்களில் சேர என்ஆர்ஐ என்று கருதப்பட மாட்டார்கள்.
4. பாலிசிக்கள் இந்திய ரூபாயில் தான் வழங்கப்படும். எல்.ஐ.சி. யின் வெளிநாட்டுக் கிளைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயலாற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தத்தமது உள்நாட்டு பண மதிப்பில் பாலிசிக்களை வழங்குகின்றன. உதாரணமாக எல்.ஐ.சி.யின் இங்கிலாந்து கிளையானது பாலிசிக்களை ஸ்டெர்லிங்க் பவுண்டு கரன்சியில் வழங்குகிறது.
5. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாம் தற்போது வசிக்கும் நாட்டில் அனைத்து காப்பீட்டு நடைமுறைகளையும் முடித்து பாலிசிக்களைப் பெறலாம். இந்த முறை ‘மெயில் ஆர்டர் பிசினஸ்' என்று அழைக்கப்படுகிறது.
6. காப்பீடு செய்யப்படும் குறைந்த பட்ச உத்தரவாதத் தொகை ரூ.2 லட்சம் ஆகும். காப்பீட்டு சட்ட நடைமுறைகளின்படி அதிகபட்சக் காப்பீட்டுத் தொகை முடிவு செய்யப்படும்.
7. காப்பீடு செய்யப்படும் உத்தரவாதத் தொகையானது மிக அதிகமாக இருந்தாலோ அல்லது ‘மெயில் ஆர்டர் பிசினஸ்' முறையில் காப்பீடு விண்ணப்பிக்கப்பட்டாலோ, ஒருவரது சுயநிதி ஆதார விவரக் குறிப்புகள் (Personal Financial Questionnaire, (PFQ), அவரது வருமானத்தைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய வருமானவரி படிவங்கள், வெளிநாடுகளில் பணியமர்த்தப்படுவதற்கான பணி ஒப்பந்த நகல்கள் மற்றும் சார்டர்ட் அகௌண்டன்ட்டின் சான்றிதழ்கள் ஆகியவை தேவையான ஆவணங்களாகக் கேட்கப்படும்.