இந்தத் திட்டங்களுள் சிலவற்றைக் காண்போம்:
சிட்ஃபண்டுகள்:
சீட்டு ஒருவகையான சேமிப்புத் திட்டம். இதில் ஒருவர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களோடு குறிப்பிட்ட அளவிலான பணத்தை குறிப்பிட காலத்திற்கு தவணைகளாக செலுத்துவதாக ஓர் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். மேலும் ஒவ்வொரு சந்தாதாரரும் குலுக்கல் முறையில் அல்லது ஏல முறையில் அவரது முறை வரும்போது சீட்டுப் பணத்தை அல்லது பரிசைப் பெறத் தகுதியுடையவராகிறார். இருப்பினும் இதுபோன்ற திட்டங்கள் பல இதை நடத்துபவர்களால் தவறாக உபயோகிக்கப்பட்டுள்ளன. பல தருணங்களில் இவர்கள் போலியான திட்டங்களை நடத்திய சம்பவங்களும் நடந்துள்ளன.
வைப்புத் தொகை திட்டங்கள் (டெபாசிட்டுகள்):
நிதி நிறுவனங்கள் மக்களிடம் இருந்து டெபாசிட்டுகள் பெற்று சராசரிக்கும் அதிகமான வட்டி தருவதாக வாக்களிக்கின்றன. தொடர்ச்சியாக அதிக வருமானம் ஈட்டுவது சாத்தியம் இல்லாததால் வட்டி மற்றும் முதலைத் தடையில்லாமல் திருப்பித் தர தொடர்ந்து புதிய டெபாசிட்டுகளையே நம்பியுள்ளனர். ஒரு கட்டத்தில் டெபாசிட்டுகள் வருவது நின்று போகும்போது முதலீட்டாளர்களுக்கு வரும் பண வரவு நின்று அவர்களை தவிக்க விட்டுச் செல்கிறது.
தனியார் பங்குகள்:
பல நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் பங்குகள், மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் மற்றும் விருப்ப பங்குகள் ஆகியவற்றை பொதுவாக பெரிய திட்டங்களின் பெயரில், அதிக வருமானம் கிடைக்குமென ஆசையூட்டி பொது மக்களுக்கு விநியோகிக்கின்றன. சட்டப்படி இது போன்ற பங்குகளை 49 பேருக்கு மேல் விற்கக் கூடாது. அதற்கு அதிகமாகும் பட்சத்தில் செபியின் வழிகாட்டுதலின் படி அந்த நிறுவனம் பொது அறிவிப்பு வெளியிட வேண்டும்.
தோட்டம் மற்றும் பண்ணை நிறுவனங்கள்:
பல நிறுவனங்கள் பண்ணைகளில் முதலீடு செய்து பணத்தைப் பெருக்குவதாக ஆசை காட்டி திட்டங்களை வெளியிடுகின்றன. இவற்றுள் பல செபியிடம் பதிவு செய்யப்பட்டிருப்பதில்லை. பொதுவாக அவர்கள் முதலீட்டாளர்களின் பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடி விடுகின்றனர்.
எனவே விரைவாக பணக்காரராக்கும் அல்லது அதிக வருமானம் தரும் திட்டங்கள் சந்தேகத்திற்குரியவை என்பதை நினைவில் கொள்க. மேலும் இந்தத் திட்டங்கள் பாதுகாப்பில்லாதவை, சட்டத்திற்கு புறம்பானவை, அரசால் அங்கீகரிக்கப்படாதவை என்பதையும் உணர வேண்டும். அதாவது நீங்கள் இந்தத் திட்டங்களால் பணத்தை இழந்தால் அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியையும் நாட இயலாது.