வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வருபவர்களா நீங்கள்? அப்படிச் செல்லும் போது வெளிநாட்டு கரன்சி மாற்றத்தில் சிரமமாக உள்ளதா? இதோ உங்களுக்கு ஓர் நற் செய்தி.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ வங்கி வெளிநாட்டிற்குப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு எனப் பிரத்தியேகமான மல்ட்டி கரன்சி கார்டு சேவையினை அறிமுகப்படுத்த இருக்கின்றது.
எஸ்பிஐ வங்கியின் மல்ட்டி கரன்சி கார்டு திட்டம் மூலமாக எளிமையாக வெளிநாடு செல்லும் போது பணத்தினைக் கையாள முடியும். இது குறித்த முழு விவரங்களை இங்குக் காணலாம்.
டிவிட்டர்
இது குறித்து எஸ்பிஐ வங்கி டிவிட்டர் மூலம் அறிவித்துள்ளது. மல்ட்டி கரன்சி கார்டு பிரீபெய்டு கார்டு போன்றது, இதன் மூலம் 4 விதமான கரன்சிகளை ஏடிஎம்-ல் உள்ள கரன்சிகளைப் பொருத்துப் பெறலாம்.
இது எப்படிச் செயல்படுகின்றது?
எஸ்பிஐ வங்கியின் டிராவர் கார்டு மூலமாக வெளிநாடு பயணத்தின் போது டிஜிட்டல் வடிவில் ஒன்றுக்கு மேற்பட்ட கரன்சிகளை ஆதரிக்கும் கார்டாகப் பயன்படுத்தலாம் என்று இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் இந்தக் கார்டு திட்டத்திற்காக மாஸ்ட்டர் கார்டு ஏசிய/பெசிபிக் இடம் இருந்து உரிமத்தினைப் பெற்றுள்ளது.
ஆதரவு அளிக்கும் கரன்சிகள்
எஸ்பிஐ-ன் மல்ட்டி கரன்சி கார்டு அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்டுகள், யூரோ மற்றும் சிங்கப்பூர் டாலர் உள்ளிட்ட கரன்சிகள் பெறக்கூடிய சேவையினை அளிக்கின்றது.
இந்தச் சிப் மற்றும் பின் சார்ந்த பிரீபெய்டு கார்டின் உதவியுடன் உலகம் முழுவதிலும் இருந்து இரண்டு மில்லியன் ஏடிஎம் மையங்களில் எங்கு எல்லாம் மாஸ்ட்டர் கார்டு சேவை வழங்கப்படுகின்றதோ அங்கு வங்கும் பொருட்களின் பில்லை செலுத்த, கடைகள், உணவகங்கள் போன்று அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம்.
எஸ்பிஐ மல்ட்டி கரன்சி கார்டு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை
1. எஸ்பிஐ மல்ட்டி கரன்சி கார்டு உங்கள் வங்கி கணக்குடன் இணைந்து செயல்படாது.
2. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் கரன்சி மதிப்பினை அறிய முடியும்
3. 4 விதமான கரன்சிகளுக்குப் பயன்படுத்த முடியும்.
4. பாதுகாப்பின் காரணமாக அது வங்கிக் கணக்கில் இணைக்கப்படாமல் சேவையினை வழங்குகிறது.
5. இந்தக் கார்டில் எத்தனை முறை வேண்டும் என்றாலும் காலாவதி தேதி வரை பணத்தினை ஏற்றி பரிமாற்றம் செய்யலாம்.
எப்படி ரீசார்ஜ் செய்வது?
வாடிக்கையாளர் தங்களது மல்ட்டி கரன்சி கார்டுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் பாஸ்போர்ட், பான் கார்டு, படிவம் 60 மற்றும் ஏ2 போன்றவற்றைப் பூர்த்திச் செய்து எடுத்துக்கொண்டு வங்கி கிளைக்குச் செல்ல வேண்டும்.
ஒருவேலை வெளிநாட்டில் உள்ள போது பணத்தினை டாப் அப் செய்ய வேண்டும் என்றால் உங்களது பாஸ்போர்ட், பான் கார்டு, படிவம் 60 மற்றும் ஏ2 ஆகியவற்றின் ஒரு நகலை தங்களது குடும்ப நபர்களிடம் அளித்துவிட்டுச் சென்றால் அவர்கள் உதவியுடன் ரீசார்ஜ் செய்ய முடியும்.
ரீசார்ஜ் கட்டணம்
உங்களுக்குத் தேவையான பணத்தினை ரீசார்ஜ் செய்யும் போது அதற்குச் சேவை கட்டணம் உள்ளிட்டவற்றைக் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
பாதுகாப்பு
இந்த மல்ட்டி கரன்சி கார்டில் உங்கள் பெயர் உள்ளிட்ட எந்தத் தனிப்பட்ட விவரங்களும் இருக்காது. எனவே தொலைந்து போனாலும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
வாடிக்கையாளர் சேவை மையம்
எஸ்பிஐ வங்கியின் இந்த மல்ட்டி கரன்சி டிராவல் கார்டு வைத்துள்ளவர்களுக்கு வங்கிகள் பணத்தை ஏற்ற விண்ணப்பம் அளிப்பது என அனைத்திற்கு வங்கி உடனடியாகச் செவி சாய்த்து உதவும் . அதுமட்டும் இல்லாமல் 24 மணி நேரம் வாடிக்கையாளர் சேவையும் பெற முடியும்.
இந்தியாவில் பயன்படுத்த முடியுமா?
எஸ்பிஐ வங்கியின் இந்த வெளிநாடு டிராவல் கார்டு இந்தியா, நேப்பால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் ஏடிஎம்களில் பயன்படுத்த முடியாது.
பரிவர்த்தனை கட்டணம்
கார்டு வாங்கும் போது மற்றும் ரீசார்ஜ் செய்யும் போது குறிப்பிட்ட கட்டணங்கள் செலுத்த வேண்டும். முதலில் வாங்கும் போது பணத்தை ஏற்றினால் 100 ரூபாய் சேவை வரியுடன் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இரண்டாம் முறையில் இருந்து 50 ரூபாய் மற்றும் சேவை வரி கட்டணமாக வசூலிக்கப்படும். ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது அமெரிக்க டாலராக எடுத்தால் ஒரு பரிவர்த்தனைக்கு 1.75 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதுவே பிரிட்டிஷ் பவுண்டு என்றால் 1.25 பவுண்டுகள் கட்டணம், யூரோ என்றால் 1.50 யூரோ, சிங்கப்பூர் டால்ர் 2 எனக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரம்புகள்
குறைந்தபட்சம் 200 டாலர்களில் இருந்து கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்ய முடியும். அதிகபட்சம் 10,000 டாலர்கள் வரை ஏடிஎம் அல்லது கடைகளில் ஸ்வைப் செய்து பயன்படுத்தலாம்.