அடையாளங்கள் திருடப்படுவது உங்களுக்குப் பல்வேறு வழிகளில் தீங்கு விளைவிக்கும். ஒருவேளை உங்கள் வங்கித் தகவல்களை யாரேனும் திருடினால் பெரும் நிதி இழப்புக்கு வழிவகுக்கலாம் அல்லது உங்கள் சமூக ஊடக கணக்கைத் திருடி அல்லது உங்கள் தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பரவச்செய்து பொதுவெளியில் சங்கடமான சூழலை ஏற்படுத்தலாம்.
உங்கள் அடையாளங்கள் திருடப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
என்ன திருடப்பட்டுள்ளது என்பதைப் பகுப்பாய்வு செய்யுங்கள்
அடையாளங்களைத் திருடுவதில் பல்வேறு வகைத் திருட்டுக்கள் இருக்கின்றன. நீங்கள் எந்த வகைத் திருட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள். ஒரே சமயத்தில் நீங்கள் பல்வேறு அடையாளத் திருட்டுகளுக்குப் பலியாகியிருக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.
மூலாதாரத்தைக் கண்டுபிடியுங்கள்
உங்கள் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்னால் அதன் தோற்ற இடத்தைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் குறிவைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்தவுடன் உடனடியாக உங்கள் சமீபத்திய ஆன்லைன் நடவடிக்கைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள், அவற்றில் எவையேனும் இதற்கு வழிவகுத்து இருக்கலாம்.
கவனிக்க வேண்டிய நடவடிக்கைகள்
உதாரணமாக ஒரு புதிய வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்வதற்கு உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி இருக்கலாம், அல்லது ஒரு வழக்கமல்லாத அல்லது புதிய ஆதாரத்திலிருந்து வந்த ஒரு மின்னஞ்சலுக்கு நீங்கள் பதிலளித்திருக்கலாம். நீங்கள் புதிய மென்பொருள்/செயலியை உங்கள் கணினி அல்லது ஸ்மார்ட் போனில் தரவிறக்கம் செய்தீர்களா அல்லது அன்னியமாகத் தோன்றிய இணைப்புகளைத் தரவிறக்கம் செய்தீர்களா? அல்லது மின்-வர்த்தகத் தளத்தில் பதிவு செய்தீர்களா?
உங்கள் கடவுச் சொற்களை மாற்றுங்கள்
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் செய்யும் அடிப்படைத் தவறு அடையாளத் திருட்டுக்குப் பிறகும் அதே கடவுச்சொற்களைத் தொடர்ந்து வைத்திருத்தல் ஆகும். உடனடியாக உங்கள் அனைத்துக் கடவுச் சொற்களையும் மாற்றி விடுங்கள். அவை உங்கள் பழைய கடவுச் சொற்களை ஒத்திருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உங்கள் நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்
உங்கள் பதிவுகளைப் பாதுகாத்துக் கொள்ள உங்கள் வங்கிகள், கடன் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், மற்றும் பலரை உடனடியதாகத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நடப்பு வங்கிக் கணக்கை முடித்துவிட்டு ஒரு புதிய வங்கிக் கணக்கை புதிய அடையாளத் தகவல்களுடன் திறக்குமாறு நீங்கள் உங்கள் வங்கியிடம் கூடக் கேட்கலாம். உங்கள் அனுமதி இல்லாமல் அணுகப்பட்ட எந்தவொரு கணக்கையும் நீங்கள் அத்துடன் மூடி விட வேண்டியது கட்டாயமாகும்.
காவல்துறைக்குத் தகவல் தெரிவியுங்கள்
நீங்கள் பாதிக்கப்பட்டதை நிரூபிக்க விரும்பினால் உடனடியாக நீங்கள் அருகாமையிலுள்ள காவல் நிலையம் அல்லது சைபர் குற்றப்பிரிவில் ஒரு புகார் தாக்கல் செய்ய வேண்டும். காவல்துறை இதை வெறுமனே ஒரு சம்பிரதாயப் புகாராகப் பதிவு செய்து கொண்டு விஷயத்தைப் பின்தொடரவில்லை என்றாலும் கூட, புகாரளிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால், இது நீங்கள் அடையாளத் திருட்டுக்கு பலியாகியுள்ளீர்கள் என்பதற்கு முக்கிய ஆதாரமாகச் செயல்படுகிறது.
நிவாரணங்கள்
ஒரு குற்றத்தில் ஈடுபடும் போது திருடன் ஆள்மாறாட்டம் செய்யும் பட்சத்தில் இந்தச் சான்று உங்கள் உதவிக்கு வரும். மேலும், நீங்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்கவில்லை என்றால், நீங்கள் வங்கி போன்ற நிறுவனங்களிலிருந்து நஷ்ட ஈடு போன்ற சட்ட ரீதியான நிவாரணங்களைப் பெற முடியாது.
கணினியில் வைரஸ் இருக்கிறதா என்று சோதனையிடுங்கள்
உங்கள் அடையாளம் வைரஸ் அல்லது மால்வேர் வழியாகத் திருடப்பட்டிருந்தால் அது இன்னமும் உங்கள் கணினியில் ஒளிந்திருந்து மீண்டும் தாக்கக்கூடும். உங்கள் கணினி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் நினைத்தால் வைரஸ்களை அகற்றுவதற்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட ஆன்டிவைரஸ் ப்ரொக்ராமை அதில் இயக்குங்கள் அல்லது கணினி நிபுணரின் உதவியை நாடுங்கள்.