இது பட்ஜெட் நேரம். பட்ஜேட் சாமானியனின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. எனவே நம் வாசகர்கள் அனைவரும் பட்ஜெட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரை பட்ஜெட்டை எளிய முறையில் புரிந்து கொள்ள உதவும்.
பட்ஜெட் நாளில் மத்திய நிதி அமைச்சர் 10-12 ஆவணங்களைச் சமர்ப்பிக்கின்றார். இவற்றில், மிக முக்கியமான ஆவணம் வருடாந்திர நிதி அறிக்கை ஆகும்.
ஆண்டு நிதி நிலை அறிக்கை
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 112-வது பிரிவின் படி, மத்திய அரசு ஒவ்வொரு நிதியாண்டிற்கும் அதாவது ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலத்திற்கான மதிப்பீடு செய்யப்பட்ட ரசீதுகள் மற்றும் செலவினங்களைப் பாராளுமன்றத்திற்கு முன் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கை வருடாந்திர நிதி நிலை அறிக்கை என அழைக்கப்படுகின்றது.
ஆண்டு நிதி நிலை அறிக்கை என்பது பொதுவாக 10 பக்க வெள்ளை ஆவணம் ஆகும். இது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒருங்கிணைந்த நிதி, தற்செயல் நிதி மற்றும் பொதுக் கணக்கு. இந்த மூன்று நிதிகளில் ஒவ்வொன்றிற்கும் அரசாங்கம் மதிப்பிடு செய்யப்பட்ட ரசீதுகள் மற்றும் செலவினங்களின் அறிக்கையை முன்வைக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த நிதியம் (Consolidated Fund)
இது அனைத்து வகையான அரசாங்க நிதிகளிலும் மிக முக்கியமானதாகும். அரசாங்கத்தால் திரட்டப்பட்ட அனைத்து விதமான வருவாய்கள், கடனாக வாங்கிய பணம், அரசாங்கம் பிறருக்கு கடனாகக் கொடுத்த பணத்திற்கான ரசீதுகள் ஆகிய அனைத்தும் இந்த நிதிக்குள் அடக்கம். அரசின் அனைத்து செலவுகளும் இதில் இருந்து தான் செய்யப்படுகின்றன. அவசர காலத்தில் தற்செயல் நிதி அல்லது பொது நிதியில் இருந்து செய்யப்படும் செலவுகள் மட்டுமே இதிலிருந்து விலக்கு பெறும். இதில் குறிப்பிடத்தக்க மிக முக்கிய அம்சம் என்னெவெனில், பாராளுமன்றத்தின் அனுமதியின்றி எந்தவொரு பணத்தையும் இந்த நிதியிலிருந்து செலவு செய்ய இயலாது.
அவசர கால நிதி (Contingency Fund)
இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த நிதியானது அவசரக்கால அல்லது எதிர்பாரா செலவினங்களுக்கானது. இந்த நிதியால் ரூ 50000 கோடி இந்திய ஜனாதிபதி அதிகாரத்தின் கீழ் பராமரிக்கப்படுகின்றது. இந்த நிதியிலிருந்து அவசர காலத்திற்குச் செலவு செய்யப்படும். அதன் பின்னர் அந்தச் செலவிற்குக் கண்டிப்பாகப் பாராளுமன்றத்தில் இருந்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் அந்த நிதியானது தற்செயல் நிதியில் திரும்ப ஒப்படைக்கப்படும்.
பொதுக் கணக்கு (Public Account)
இது அரசாங்கத்திற்குச் சொந்தமில்லாத ஆனால் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் கணக்கு ஆகும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் எனில் வங்கிக் கணக்குகளைக் கூறலாம். வங்கி கணக்குகள் வங்கிக்கு சொந்தமில்லை. வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமானது. ஆனால் வங்கியால் நிர்வகிக்கப்படுகின்றது. அதைப் போல் இந்தக் கணக்குக்கு அரசாங்கம் ஒரு வங்கியாகச் செயல்பட்டு இந்தக் கணக்கிற்கு வருகின்ற பணத்தை நிர்வகிக்கின்றது. இந்தக் கணக்கின் கீழ் பல்வேறு நிதிகள் உதாரணமாக, சேம நல நிதி, சிறு சேமிப்பு மற்றும் பல நிதிகள் உள்ளன.அரசாங்கம் சரியான உரிமையாளர்களுக்குச் சரியான நேரங்களில் இந்த நிதியிலிருந்து பணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டும். எனவே இந்த நிதிச் செலவுகளுக்குப் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை.
இந்தக் கணக்கின் கீழ் நிர்வகிக்கப்படும் பல்வேறு நிதிகள் ஒவ்வொன்றிற்கும் அரசாங்கம் ஒப்புதல் ரசீதுகள் மற்றும் செலவினங்களை அறிவிக்க வேண்டும். இந்த நிதிகளில் கீழ் வரும் பணம், ரசீதுகள், அல்லது பெறப்பட்ட நிதி என்றே குறிப்பிடப்படும். இந்த நிதியை வருவாய் என அழைக்க இயலாது. ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வருவாய் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட பொருள் உள்ளது.
அரசியலமைப்பின் படி ஆண்டு நிதி நிலை அறிக்கையானது ஒப்புதல் பெறப்பட்ட ரசீதுகள், வருவாய் கணக்குளின் மீது செய்யப்பட்ட செலவினங்கள் மற்றும் பிற கணக்குகளின் மீது செய்யப்பட்ட செலவினங்கள் ஆகியவற்றை வேறு படுத்திக் காட்ட வேண்டும். எனவே அரசாங்கத்தின் கணக்கிற்குள் வரும் மொத்த ஒப்புதல் ரசீதுகள் அனைத்தும் வருவாய் நிதி நிலை அறிக்கை மற்றும் மூலதன நிதி நிலை அறிக்கை எனப் பிரிக்கப்பட வேண்டும். இதில் மூலதன நிதி நிலை அறிக்கை என்பது வருவாய் சாராத ரசீதுகள் மற்றும் செலவுகளை உள்ளடக்கியது. வருவாய் மற்றும் மூலதன நிதி நிலை அறிக்கை ஆகிய இரண்டையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில், நாம் முதலில் வருவாய் ரசீதுகள், வருவாய் செலவுகள், மூலதன ரசீதுகள் மற்றும் மூலதனச் செலவினங்களைப் பற்றிப் புரிந்து கொள்வது முக்கியம்.
வருவாய் ரசீது மற்றும் செலவு (Revenue receipt/Expenditure)
சொத்துக்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் செய்யப்பட்ட செலவுகளைத் தவிர்த்து, அனைத்து விதமான செலவுகள் மற்றும் ரசீதுகள், பொதுவாக இந்த வருவாய் கணக்கில் சேர்க்கப்படும். இந்த ரசீதுகளைப் பொருத்தவரை வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. செலவுகளைப் பொருத்த வரை சொத்துக்களை உருவாக்காத அனைத்தும் செலவினமாகக் கருதப்படுகிறது. ஊதியம், மானியங்கள் மற்றும் வாங்கிய கடனுக்கான வட்டி ஆகிய அனைத்தையும் நாம் வருவாய் செலவினங்களுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
மூலதன ரசீது மற்றும் செலவு (Capital receipt/Expenditure)
ஒரு சொத்தை வாங்கும் பொழுது அல்லது விற்கும் பொழுது அதில் புழங்கும் பணம் அனைத்தும் இந்தக் கணக்கின் கீழ் வரும். உதாரணமாக, பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளை (disinvests) அரசாங்கம் விற்பனை செய்தால், (மாருதி நிறுவன விஷயத்தில் செய்தது போல்) அதன் மூலம் கிடைக்கும் பணம் இந்தக் கணக்கின் கீழ் வரும். அதாவது சொத்து விற்பனை ரசீதுகள் அனைத்தும் இந்த மூலதனக் கணக்கில் கீழ் வர வேண்டும். மறுபுறம், அரசாங்கம் வட்டியை எதிர்பார்த்து ஒருவருக்குக் கடனைக் கொடுக்கிறது என்றால், அந்தச் செலவு மூலதன கணக்கின் கீழ் வர வேண்டும். இது சொத்து உருவாக்கத்தின் கீழ் வரும்.
அரசாங்கத்தின் அனைத்து நிதிகளுக்கும் (தற்செயல் நிதி, பொதுக் கணக்கு, மற்றும் ஒருங்கிணைந்த கணக்கு) வருவாய் வரவு செலவுத் திட்டம் (வருவாய் ரசீதுகள் மற்றும் வருவாய் செலவினங்களை விவரிக்கும்) மற்றும் மூலதன வரவு செலவுத் திட்டம் (மூலதன ரசீதுகள் மற்றும் மூலதனச் செலவு) ஆகியவற்றைத் தயாரிக்க வேண்டும். தற்செயல் நிதி அவ்வளவாக முக்கியத்துவம் பெறுவதில்லை. பொதுக் கணக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கணக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சேமிப்பு மற்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதைக் காட்டுகிறது. எனினும் இந்தப் பொதுக் கணக்கிற்கு வரவு செலவுத் திட்ட அறிக்கையில் முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை. அரசாங்கத்தின் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி மட்டுமே மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே அதைப் பற்றி அடுத்தப் பகுதியில் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.
முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ளபடி, அரசாங்கம் தன்னுடைய மூன்று நிதிகளுக்கும் வருவாய் வரவுசெலவு (வருவாய் கணக்கு) மற்றும் மூலதன வரவு செலவு (மூலதன கணக்கு) ஆகியவற்றை வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த நிதியத்தின் வருவாய் கணக்கு இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. அதாவது ரசீதுகள் மற்றும் வழங்கல்களாகப் பிரிக்கப்படுகின்றது. எளிமையாகச் சொல்ல வேண்டும் எனில் வருமானம் மற்றும் செலவு எனப் பிரிக்கப் படுகின்றது. வருமானங்கள் பரவலாக வரி வருவாய், வரி அல்லாத வருவாய், மானிய உதவி மற்றும் பங்களிப்புகளாக உள்ளன. முக்கியமான வரி வருவாய்கள் அனைத்தும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கூட்டுத்தாபன வரி: நிறுவனங்களின் இலாபங்கள் மீது வரி (Corporation Tax: Tax on profits of companies)
நிறுவன வரியைத் தவிர்த்து நிறுவனங்களின் வருவாய் மீதான வருமான வரி: நிறுவனம் அல்லாத மதிப்பீட்டாளர்களால், மற்றும் தனி நபர்களால் வழங்கப்பட்ட வருமான வரி
விளிம்பு நன்மை வரி (Fringe benefit tax (FBT)
பணமாக வழங்கப்பட்ட சம்பளம் அல்லது ஊதியத்திற்குக் கூடுதலாக, நிறுவனத்தினால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பிற சலுகைகள் மீது விதிக்கப்படும் வரி இது. இந்த வரி 2005-06 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பல நிறுவனங்கள், வியாபார வசதிகள் மற்றும் க்ளப் செலவினங்கள் போன்றவற்றின் மூலம் வருவாயை மறைப்பதாக அரசாங்கம் கருதியது. எனவே வணிக நிறுவனங்கள் அத்தகைய செலவினங்கள் மீது ஒரு குறிப்பிட்ட அளவு வரி செலுத்த வேண்டும். இது விளிம்பு நன்மை வரி என அழைக்கப்படுகின்றது.
பத்திர பரிவர்த்தனை வரி (Securities transaction tax (STT)
நீங்கள் எந்த ஒரு சொத்தை விற்பதன் மூலம் (பங்குகள், சொத்து) உங்களுக்கு இழப்பு அல்லது இலாபம் கிடைக்கும். சொத்துகள் விற்கும் காலத்தைப் பொறுத்து இலாபங்கள் மற்றும் இழப்புகள் நீண்ட கால அல்லது குறுகிய கால மூலதன ஆதாயம் / இழப்பு என வகைப்படுத்தப்படுகின்றன. 2004-05 ம் ஆண்டுப் பட்ஜெட்டில், அரசாங்கம் நீண்டகால மூலதன ஆதாய வரியை நீக்கியது.(இலாபங்கள் மீதான வரி , ஒரு வருடத்திற்கும் மேலாக வைத்திருக்கும் பங்குகளின் விற்பனைக்கு). அதற்குப் பதில் பத்திர பரிவர்த்தனை வரி (STT) ஐ அறிமுகப்படுத்தியது. முதலீட்டாளர் ஒரு பங்கு பரிவர்த்தனையில் செலுத்தப்பட்ட / பெற்ற மொத்த பரிவர்த்தனை தொகையில் ஒரு சிறிய வரி செலுத்த வேண்டும். இரு ஒரு பரிவர்த்தனை சார்ந்த வரி ஆகும்.
வங்கி பணப் பரிவர்த்தனை வரி (Banking cash transaction tax (BCTT)
2005-06 வரவு செலவு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. BCTT என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரே நாளில் அதிகபட்சமாக வங்கியிலிருந்து ரொக்கமாகப் பெறும் பொழுது விதிக்கப்படும் சிறிய வரி ஆகும். கருப்புப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த மற்றும் பெரிய பணப் பரிவர்த்தனைகள் பற்றிய பதிவுகளை உருவாக்க இது செயல்படுத்தப்படுகின்றது.
சுங்க வரி (Customs)
இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் வரி இது. நாட்டின் வருவாய் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்போது, மற்ற நாடுகளின் நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலீடாக, உள்நாட்டுத் தொழிற்துறை அல்லது துறையை (வேளாண்மை, வணிகம்) பாதுகாக்க இறக்குமதிகளுக்கு எதிராகச் சுங்க வரி விதிக்கப்டுகின்றது.
கலால் வரி
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள்.
சேவை வரி
இது வழங்கப்பட்ட சேவைகளின் மீது விதிக்கப்படும் ஒரு வரி. உதாரணமாகத் தொலைப்பேசி என்பது சேவை. அந்தச் சேவைக்கு வரி விதிக்கப்படுகின்றது.
வரிகளைப் பற்றிப் பார்க்கும் பொழுது, ஒரு முக்கியமான வகைப்பாடு ஒன்றை நாம் மறந்து விட்டோம். அதாவது நேரடி வரி மற்றும் மறைமுக வரி. வருவாயில் இது மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
நேரடி வரி
பாரம்பரியமாக, இவை வரிவிதிப்பின் கீழ் வருபவர்களுக்கு விதிக்கப்படும் வரி ஆகும். இவை பெரும்பாலும் வருமானம் அல்லது செல்வத்தின் மீது விதிக்கப்படுகின்றது. வருமான வரி (பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது), FBT, STT மற்றும் BCTT ஆகிய அனைத்தும் இந்த நேரடி வரிகளின் கீழ் வருகின்றன.
மறைமுக வரி
மறைமுக வரிகள் என்பது வரி செலுத்துபவர் வழக்கமாக நேரிடையாகச் செலுத்தும் வரி கிடையாது. இவை பெரும்பாலும் செலவினங்கள் மீது விதிக்கப்படும் வரிகள். உதாரணமாகச் சுங்க வரி மற்றும் சேவை வரி.
மறைமுக வரிகள் என்பது எவ்விதமான வரையறைக்கும் உட்படாதது. இந்த வரிகள் அனைத்தும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியாக விதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அரசாங்கங்கள், நேரடி வரிகள் மூலம் பணக்காரர்களுக்கு அதிகமான வரிகளை விதிக்க முயற்சி செய்கின்றன. பட்ஜெட்டை பற்றைத் தெரிந்து கொள்ளும் விதமாக நாம் அடுத்ததாக வருவாய் கணக்கில் மிக முக்கியமான, வரி மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் வரி இல்லா வருவாய் பற்றித் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.
வரி அல்லாத வருவாய்
இந்தத் தலைப்பின் கீழ் மிக முக்கியமான ரசீதுகளான மத்திய அரசால் மாநில அரசு மற்றும் ரயில்வே போன்ற துறைகளுக்குக் கொடுத்த கடனுக்கான வட்டி, மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட லாபங்கள் மற்றும் டிவிடெண்ட் ஆகியவை வரும்.
அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பல்வேறு துறைகளான, காவல்துறை, ராணுவம், சமூகச் சேவைகள், எரி சக்தி, மற்றும் மற்றும் இரயில்வே போன்றவை பொருளாதாரச் சேவைகளை மக்களுக்கு வழங்குவதால் இதன் மூலம் அரசாங்கத்திற்கு வருவாய்க் கிடைக்கின்றது.
இரயில்வே ஒரு தனித் துறையாக இருந்தாலும், அதன் ரசீதுகள் மற்றும் செலவினங்கள் ஒருங்கிணைந்த நிதி மூலம் அரசாங்கத்தின் கணக்கின் கீழ் வருகின்றன.
மானியங்கள் மற்றும் பங்களிப்புகள்
வருவாய் கணக்கில் வரக்கூடிய மூன்றாவது ரசீது இது. ஒப்பீட்டளவில் சிறியது. இவை எந்தவொரு திருப்பிச் செலுத்தும் கடமையும் இன்றி அரசாங்கத்திற்குப் பரிமாற்றப்படுபவை அனைத்தும் இதன் கீழ் வரும்.
இப்போது நாம் ஒருங்கிணைந்த நிதியத்தின் வருவாய் கணக்கில் வழங்கப்பட்ட பிரிவை பார்க்கிறோம். இது அரசாங்கத்தின் அனைத்து வருவாய் செலவினங்களையும் உள்ளடக்கியது. இதில் பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் தேர்தல்கள் போன்ற பல்வேறு உறுப்புகளின் மீது ஏற்படும் செலவினங்களும் அடங்கும். இதில் பெரும் பகுதி வரி வசூல் போன்ற நிதி சேவைகளை நிர்வகிப்பதிற்குச் செலவாகின்றது. அரசாங்கத்திற்கு அதிகச் செலவு வைக்கும் ரசீது என்பது அரசாங்கம் கட்டும் வட்டி ஆகும். இதற்கு அடுத்த நிலையில் காவல்துறை, ராணுவம் போன்ற பாதுகாப்புத்துறை வருகின்றன. வருவாய் கணக்கில் ரசீதுகள் மற்றும் செலவினங்களைக் கவனித்ததில் நாங்கள் ஒரு முக்கியப் பகுதிக்கு வருகின்றோம். இவை இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம். அரசை ஆட்டிப்படைக்கும் சொல். ஆம் இதுவே வருவாய் பற்றாக்குறை.
வருவாய் பற்றாக்குறை
வருவாய் கணக்கில் ரசீதுகளுக்கு அதிகமான செலவு தொகை வருவாய் பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு முக்கியமான கட்டுப்பாட்டு அடையாளமாகும். வருவாய் கணக்கில் செய்யப்படும் அனைத்துச் செலவினங்களும் வருவாய் கணக்கில் பெறப்படும் ரசீதுகளிலிருந்து மட்டுமே செய்யப்பட வேண்டும். வருவாய்க்கு அதிகமான செலவு மிகவும் ஆபத்தானது. எனவே வருவாய் பற்றாக்குறை பூஜ்யமாக இருக்க வேண்டும்.
வருவாய்ப் பிரிவில் வருவாய்க்கும் அதிகமாகச் செலவு ஏற்படுகையில் அரசாங்கம் அந்தச் செலவை ஈடுகட்டக் கடன் பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றது. இத்தகைய கடன் வாங்கும் போக்கு உகந்ததாகக் கருதப்படாது. ஏனெனில் இந்தக் கடன் அன்றாட நிகழ்வுகளை நகர்த்த மட்டுமே பயன்படும். ஒரு சொத்து உருவாக்க அல்லது வாங்கப் பயன்படாது. இதன் காரணமாக வருவாயின் பெரும் பகுதி வட்டி கட்ட மட்டுமே பயன்படும். இறுதியில் அரசாங்கம் மீளாக் கடன் வலையில் சிக்கி விடும். நாம் பின்னால் பார்க்கக் கூடிய FRBM சட்டம், 2008-09 ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றது.
ஒருங்கிணைந்த நிதியத்தின் மூலதன கணக்கின் வருவாய்று, மூன்று வகைகளுக்குள் அடங்கி விடுகின்றது. பொதுக் கடன், திரும்பப் பெறக்கூடிய கடன்கள் மற்றும் முன்பணம், மற்றும் இதர ரசீதுகள்
பொதுக் கடன்
பொதுக் கடன் ரசீதுகள் மற்றும் பொதுக் கடன் வழங்கல் ஆகிய இரண்டும் ஒவ்வொரு ஆண்டும் முறையே பெற்ற கடன் மற்றும் கடனுக்காகத் திருப்பிச் செலுத்தியவற்றைக் குறிக்கின்றன. இவை இரண்டுக்கும் இடையேன வேறுபாடு பொதுக் கடனுக்கு நிகரானது. பொதுக் கடனை உள்நாடு (நாட்டிற்குள் பணம் திரட்டுவது) வெளிநாடு (வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதிகள்) எனப் பிரிக்கலாம். உள்நாட்டுக் கடன்கள் என்பது கருவூல பில்கள், சந்தை உறுதிப்படுத்துதல் திட்டங்கள், முன்பணம், சிறு சேமிப்பிற்கு எதிரான அரசுப் பத்திரங்கள் ஆகும்.
கருவூலப் பில்கள் (டி-பில்கள்)
இவை ஒரு வருடத்திற்கும் குறைவான முதிர்வுடன் இருக்கும் பத்திரங்கள் (கடன் பத்திரங்கள்) ஆகும். இவை வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையே இருக்கும் குறுகியகால ஏற்றத் தாழ்வுகளைச் சமாளிக்க வெளியிடப்படுகின்றன. நீண்ட கால முதிர்வுடைய பத்திரங்கள் தேதியிட்ட பத்திரங்கள் எனப்படுகின்றன.
சந்தை உறுதிப்படுத்தல் திட்டம்: பரிவர்த்தனை விகிதம் மற்றும் பண நிர்வகிப்பை மேம்படுத்த ரிசர்வ் வங்கியினால் ஏப்ரல் 2004 இல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரங்கள் அரசு செலவினங்களை நிர்வகிக்க வெளியிடாமல் ரிசர்வ் வங்கியினால் பணச் சந்தையை மேம்படுத்தும் நோக்கில் வெளி விடப்படுகின்றது.
வழிகள் மற்றும் முன்கூட்டியே திரட்டப்பட முன்பணம் (டபிள்யுஎம்ஏஎம்): ரிசர்வ் வங்கி மத்தியஸ்தராக இருந்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்காகத் திரட்டித் தரக் கூடிய நிதியாகும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்காலிக நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி இதைத் தற்காலிக ஏற்பாடாகச் செய்கின்றது.
சிறு சேமிப்புக்கு எதிரான பத்திரங்கள்
மத்திய அரசு தனக்குத் தேவைபடும் கடன்களின் ஒரு சிறு பகுதியை சிறு முதலீட்ட்டாளர்களிடம் இருந்து பெறுகின்றது. இது சிறு சேமிப்புக்கு எதிரான பத்திரங்கள் என அழைக்கப்படுகின்றது.
இதர ரசீதுகள்
இவை பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள முதலீடுகளைத் திரும்பப் பெறுவதன் மூலம் கிடைக்கும் நிதியாகும். ஒருங்கிணைக்கப்பட்ட நிதியத்தின் மூலதனக் கணக்கு ரசீதுகள் - பொதுக் கடன், கடன்கள் மற்றும் முன்பணத்தைத் திரும்பப் பெறுதல், மற்றும் பிற ரசீதுகள் மற்றும் வருவாய் ரசீதுகள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியத்தின் ரசீதுகள் ஆகும்.
நாம் இப்போது ஒருங்கினைந்த நிதியில், மூலதனக் கணக்கில் மேற்கொள்ளப்படும் செலவினங்களைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம். இதன் முதல் பகுதி பொது, சமூக மற்றும் பொருளாதாரச் சேவைகளில் ஏற்படும் மூலதன செலவினங்களைக் கையாள்கிறது. இந்த வகையின் கீழ் உள்ள மிகப்பெரிய செலவினம் ராணுவ பாதுகாப்புச் சேவைகள், விவசாய நிதி நிறுவன முதலீடு மற்றும் இரயில்வே மூலதனம் ஆகும். இதன் இரண்டாம் பகுதி பொதுக் கடன் (கடன்களைத் திருப்பிச் செலுத்துதல்) மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு கடன்களைத் திரும்பச் செலுத்தப் பயன்படுகின்றது.
ஒருங்கிணைக்கப்பட்ட நிதிக்கு என்று சில குறிப்பிட்ட முன்னுரிமைகள் உள்ளன. சில குறிப்பிட்ட செலவுகளைக் கண்டிப்பாக இது சந்திக்க வேண்டும். எனவே அத்தகைய செலவுகளுக்குப் பாராளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை. அத்தகைய செலவுகளாவன: கடனுக்கான வட்டி, ஜனாதிபதி, சம்பளம், சபானாயகரது சம்பளம், ராஜ்ய சபாவின் துணைத் தலைவர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சம்பளம், பாராளுமன்ற செலவுகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் ஆகிய அனைத்தும் இதன் கீழ் வரும்.
பட்ஜெட் ஒரு பார்வை
இந்தப் பகுதி எளிதான புரிந்துகொள்ளுதலுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஒரு படம் ஆகும். இருப்பினும், இது சில புதிய கருத்துகளை அறிமுகப்படுத்துகிறது. ரசீதுகள், வருவாய் மற்றும் மூலதனமாகப் பிரிந்துள்ள நிலையில், ஒருங்கிணைந்த நிதி போலன்றி, இது மைய அரசின் நிகர வரி வருவாயைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதற்குக் காரணம், மொத்த வரி வருவாயின் ஒரு பகுதி, சம்பந்தப்பட்ட நிதி ஆணையம் முடிவுப் படி மாநில அரசுகளுக்குச் செல்கின்றது. இந்தப் பகுதி பட்ஜெட்டை வருவாய் மற்றும் மூலதனமாகப் பிரிப்பதற்குப் பதிலாக, திட்டமிடல் மற்றும் திட்டமற்ற செலவினங்களுக்கான செலவினம் எனப் பிரிக்கின்றது. இவை ஒவ்வொன்றும் வருவாய் கணக்கு மற்றும் மூலதன கணக்கு எனப் பிரிக்கப்படுகின்றன. திட்டமிட்ட மற்றும் திட்டமிடாத செலவினங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு மத்திய பட்ஜெட்டின் ஒரு சில முக்கியக் கருத்துக்களைப் பற்றிப் பார்ப்பது மிகவும் முக்கியம்.
மத்திய திட்டம்
மத்திய அல்லது வருடாந்திர திட்டங்கள் என்பது அடிப்படையில் வருடாந்திர தவணைகளாகப் பிரிக்கப்பட்ட ஐந்து ஆண்டுத் திட்டங்கள் ஆகும். இந்தத் திட்டங்களின் மூலம், ஐந்து ஆண்டுத் திட்டங்களின் நோக்கங்களை அரசாங்கம் அடைகிறது. மத்திய திட்டத்தின் நிதி என்பது அரசு ஆதரவு (அரசாங்க செலவினங்களிடமிருந்து) மற்றும் பொது நிறுவனங்களின் உள்ளக மற்றும் கூடுதல் வரவு செலவுத் திட்ட ஆதாரங்களுக்கிடையில் சமமாகப் பிரிக்கப்படுகிறது. மத்திய திட்டத்திற்கான அரசாங்கத்தின் ஆதரவு வரவு-செலவுத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. அடுத்தக் கட்டத்தில் நாம் திட்டமிட்ட மற்றும் திட்டமிடாத செலவுகளைப் பற்றிப் பார்ப்போம்.
திட்டமிட்ட செலவினம்
இது மத்திய அரசு மற்றும் மாநில அரசு,யூனியன் பிரதேசங்களுக்கான பல்வேறு திட்டங்களுக்கான திட்டமிடப்பட்ட செலவை குறிக்கின்றது. அனைத்து விதமான வரவு செலவுத் திட்டங்களையும் போலவே இது வருவாய் மற்றும் மூலதனக் கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது.
திட்டமற்ற செலவினம்
இது பெரும்பாலும் அரசாங்கத்தின் வருவாய்ச் செலவினமாகும். இதில் வாங்கிய கடனுக்கன வட்டி மானியம், சம்பளம், ஓய்வூதியம், மற்றும் பாதுகாப்புச் செலவு ஆகிய அனைத்தும் வரும். இதில் மூலதனச் செலவு என்பது முகவும் குறைவு. அதிலும் பெரும் பகுதி ராணுவத்திற்குச் சென்று விடுகின்றது. ராணுவச் செலவு என்பது திட்டமிடாத செலவு ஆகும்.
நிதி பற்றாக்குறை
அரசாங்கத்தின் கடன் அல்லாத ரசீதுகள் அதன் மொத்த செலவினங்களை விடக் குறைவாக இருக்கும்போது, அது பற்றாக்குறையைச் சந்திக்கப் பொதுமக்களிடமிருந்து பணம் கடனாக வாங்கப்படுகின்றது. மொத்தக் செலவில் கடன் பெறாத ரசீதுகளைத் தவிர்த்து வரும் பகுதி நிதி பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது.
முதன்மை பற்றாக்குறை
அரசாங்கத்தின் வருவாய் செலவு என்பது அது வாங்கிய கடனுக்கான வட்டியையும் உள்ளடக்கியது. முதன்மை பற்றாக்குறை என்பது நிதி பற்றாக்குறையில் வட்டிக்கான செலவை கழித்தால் வருவது ஆகும். சுருங்கி வரும் முதன்மை பற்றாக்குறை என்பது நாடு நிதி ஆரோக்கியத்தை நோக்கி முன்னேற்றம் அடைகின்றது என்பதைக் குறிக்கிறது. பட்ஜெட் ஆவணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சதவீத கணக்கில் பற்றாக்குறையைக் குறிப்பிடுகிறது. இது ஒப்பீட்டை எளிதாக்கும் மற்றும் ஒரு சரியான பார்வை கிடைக்கும். புத்திசாலித்தனமான நிதி நிர்வாகமானது, சாதாரணச் செலவுகளுக்கு அரசாங்கத்தைக் கடன் வாங்காமல் தவிர்க்கச் செய்வதில் இருக்கின்றது.
FRBM சட்டம்
இது 2003 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இந்த நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேனேஜ்மெண்ட் சட்டம் 2008-09 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறையை அகற்ற வேண்டும் என வழியுறுத்துகின்றது. எனவே, 2008-09 முதல், அரசாங்கம் அதன் வருவாயிலிருந்து மட்டுமே அதனுடைய அனைத்து வருவாய் செலவினங்களையும் சந்திக்க வேண்டும். மூலதனச் செலவினங்களைச் சந்திக்க மட்டுமே கடன் பெற வேண்டும். இந்தச் சட்டம் 2008-09 க்குப் பிறகு நிதி பற்றாக்குறை என்பது 3% வரம்பிற்கு இருக்க வேண்டும் என வழியுறுத்துகின்றது.
மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் வளங்கள் மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் வளங்கள்
மத்திய அரசின் மொத்த வரி வசூலின் ஒரு பகுதி மாநில அரசுகளுக்குச் செல்கிறது. 2007-08 வரவு செலவுத் திட்டத்தில், மொத்த வரி வசூலில் 27 சதவீதத்தை மாநிலங்கள் பெற்றன. மத்திய அரசு மாநில அரசுகளின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் அதற்குத் தேவைப்படும் நிதியளிக்கிறது. இதைத் தவிர்த்து மத்திய நிதியுதவி திட்டங்களை நிர்வகிக்க மானியங்களையும் வழங்குகிறது. மாநிலங்களுக்குச் சிறு சேமிப்பின் மூலம் கிடைக்கும் நிதியை மத்திய அரசு வழங்குகின்றது. இது கடன் வரையறைக்குள் வருகின்றது.
மார்ச் 31, 1999 க்கு முன்பு, மத்திய அரசு சிறிய சேமிப்பகளில் திரட்டப்பட்ட நிகரத் தொகையை மாநில அரசுகளுக்குக் கடனாக வழங்கியது . ஏப்ரல் 1, 1999 முதல், மாநிலங்கள் நேரடியாகச் சிறிய சேமிப்புகளை 75% பெறத் தொடங்கின. மீதித் தொகை 1999-2000 முதல் 2001-2002 வரை சிறப்பு அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டது. சிறப்புப் பத்திரங்களை மீட்டெடுப்பதற்காக என்எஸ்எஸ் நிதியில் பெறப்பட்ட தொகை சிறப்பு ஜி-நோட்களி மீண்டும் முதலீடு செய்யப்பட்டது. ஏப்பிரல் 2002 ல், ஒவ்வொரு மாநிலத்திலும் யூ.டி.யில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ் மொத்த சேகரிப்பு, சம்பந்தப்பட்ட மாநில / யூ.டி. அரசாங்கத்திற்கு அதன் சிறப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
மதிப்பு-சேர்க்கப்பட்ட வரி (VAT) மற்றும் ஜிஎஸ்டி
ஒரு பொருளின் தயாரிப்பு / மதிப்புக் கூடுதலாகப் பல்வேறு நிலைகளைக் கடக்கின்றது. அப்போது ஒவ்வொரு நிலையிலும் வரி சேர்க்கப்படுகின்றது. இதைத் தவிர்க்க மதிப்புச் சேர்க்கப்பட்ட வரி விதிக்கப்படுகின்றது. மூலதனப் பொருளின் மதிப்பு மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் மதிப்பு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள பணத்திற்கு வரி விதிக்கப்படுகின்றது. இந்த வரியின் நோக்கம் ஒரு நிறுவனம் அதன் மூலதனத்தைப் பயன்படுத்தி மதிப்பு கூட்டியதற்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும் அதனுடைய அனைத்து மூலதனத்திற்கும் அல்ல வாட் வரி, வரி விதிப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருகிறது.
இந்தக் கட்டுரையைன் முடிவில் நாம் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான சிலவற்றைப் பார்க்கப் போகின்றோம்.
தீர்வை
இது அடிப்படை வரியைத் தவிர்த்துக் கூடுதலாக விதிக்கப்படும் வரி. அரசாங்கங்கள் குறிப்பிட்ட செலவினங்களைச் சந்திப்பதற்காக இவை விதிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பெருநிறுவன மற்றும் தனிநபர் வருமானத்தின் மீது இரண்டு சதவிகிதம் கல்வித் தீர்வை விதிக்கப்படுகின்றது. கடந்த பட்ஜெட்டில், அரசாங்கம் இரண்டாம் மற்றும் உயர் கல்வி செலாவணியை ஈடுகட்ட - இரண்டாம் மற்றும் உயர் கல்வி தீர்வையாக வருமான வரி மீது மற்றொரு 1% விதித்தது.
எதிர்மதிப்பு தீர்வை (CVD)
இறக்குமதி சுங்கத் தீர்வைக்கும் மேலாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இது விதிக்கப்படுகின்றது. இதே போன்ற பொருட்களைத் தயாரிக்கும் உள்நாட்டு உற்பத்தியாளர்களால் செலுத்தப்படும் கலால் வரிக்கு நிகரக இந்த வரி விதிக்கப்படுகின்றது. இது இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு இடையே ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை வழங்க உதவுகின்றது. இந்த வரியிலிருந்து அளிக்கப்படும் விலக்கு, உள்நாட்டுத் தொழில்துறையைப் பாதிக்கின்றது. மேலும் இந்த வரி நீண்ட கால நோக்கில் தொழில் துறைகளில் முதலீடுகளை ஊக்கப்படுத்துகின்றது.
ஏற்றுமதி வரி
இது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி. வருவாய்க்காக இது விதிக்கப்படுவதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உள்நாட்டில் அந்தப் பொருளின் தட்டுப்பாட்டை நீக்க இது உதவுகின்றது. கடந்த பட்ஜெட்டில், உதாரணமாக, இரும்பு தாதுகள் மற்றும் செறிவுகளை ஏற்றுமதி செய்ய மெட்ரிக் டன் ஒன்றுக்கு 300 ரூபாய் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. குரோம் தாதுகள் ஏற்றுமதிக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ. 2,000 வரி விதிக்கப்பட்டது.
நிதி பில்
புதிய வரிகள் விதிப்பு மற்றும் ஏற்கனவே உள்ள பொருளுக்கான வரிக்குறைப்பு, தற்போதைய வரிக் கட்டமைப்பு மாற்றம் அல்லது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் இருக்கும் வரிச்சலுகை தொடர்வது போன்ற அரசாங்கத்தின் திட்டங்களை இந்த மசோதா மூலம் பாராளுமன்றத்திற்கு அரசு சமர்ப்பிக்க வேண்டும். வரிகளைப் பொறுத்தவரை இது முக்கிய ஆவணமாகும்.
நிதி உள்ளடக்கம்
நிதிச் சேர்க்கையானது அடிப்படை நிதி சேவைகளை (ஒரு வங்கி கணக்கு, சரியான நேரத்தில் மற்றும் போதுமான கடன்) மலிவு விலையில் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்கின்றது. நிதியியல் சேவைகளிலிருந்து விலக்கப்பட்டவர்களை அதாவது பின்தங்கிய மற்றும் குறைந்த வருவாய்க் கொண்ட மக்களை நிதிச் சேவைக்குள் கொண்டுவருவது இதன் நோக்கம். நிதிச் சேவையில் இருந்து விலகி இருப்பவர்கள் பொதுவாக உள்ளூர் வட்டார கடனளிப்பவர்களிடமிருந்து உயர்ந்த விகிதத்தில் கடன் வாங்குகின்றார்கள். அவர்களுக்கு இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். முறை சார நிதித் துறை இந்தியாவில் தீவிரப் பிரச்சனையாக உள்ளது. மலிவான விலையில் வங்கி சேவையை வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் ஒரு இனிய திட்டத்தை முன்வைத்துள்ளது.
குறைந்த மாற்று வரி (MAT)
பெருநிறுவன இலாபங்கள் மீதான இந்த வரி 1996-97 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அதன் பின்னர் மாற்றப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் பல்வேறு சலுகைகளுக்குப் பின்னர்ச் செலுத்த வேண்டிய வரி அந்த நிறுவனத்தின் புத்தக வருவாயில் 10 % க்கும் கீழ் இருந்தால் அந்த நிறுவனம் புத்தக மதிப்பில் 10% வரியாகச் செலுத்த வேண்டும். புத்தகத்தின் இலாபங்கள் என்பது நிறுவனங்கள் சட்டத்தின் படி கணக்கிடப்படுகின்றது. ஏனெனில் வருமான வரிச் சட்டம் பல்வேறு விலக்குகளை வழங்குகின்றது.
பாஸ்-துரோ ஸ்டேடஸ்
இது இரட்டை வரி விதிப்பைத் தவிர்க்க உதவுகிறது. உதாரணமாக, பரஸ்பர நிதிகள், பாஸ்-துரோ நிலையை அனுபவிக்கின்றன. இந்த நிதிகளின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு வரி கிடையாது. பரஸ்பர நிதியங்களின் வருவாய், அந்த முதலீட்டாளர்களைச் சேருகின்றன. முதலீட்டாளர்கள் அத்தகைய முதலீட்டு வருவாய்க்கு வரி செலுத்துகின்றனர். எனவே பரஸ்பர நிதி வருவாய்க்குப் பாஸ் துரோ நிலை வழங்கப்படுகின்றது. அடிப்படையில், வருவாய் என்பது பரஸ்பர நிதிகள் மூலம் கடந்துசெல்லும் என்பதால், வரி விதிக்கப் படுவதில்லை. சில துறைகளில் துணிகர முதலீடுகளுக்கு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு பாஸ் துரோ நிலை வழங்குகின்றது.
மானியம்
ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இந்த வார்த்தை தவறாது குறிப்பிடப்படுகின்றது. இது அரசாங்கத்தினால் உதவியாகவோ அல்லது ஆதரவாகவோ வழங்கும் பணத்தை வழங்குவதைக் குறிக்கிறது. இந்திய சூழலில், உதாரணமாக, அரசு சில நேரங்களில் சந்தை விகிதத்திற்குக் கீழே விவசாயிகளுக்குக் கடன்களை வழங்கும் படி நிறுவனங்களைக் கேட்கிறது. அந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு வழக்கமாக இந்தகைய மானியங்கள் மூலம் ஈடு கட்டப்படுகின்றது.
இதர கட்டணம்
பெயர் குறிப்பிடுவது போல, இது கூடுதல் கட்டணம் அல்லது வரி. 30 சதவிகித வரி விகிதத்தில் 10 சதவிகிதம் விதிக்கப்படும் கூடுதல் வரி மொத்த வரி சுமையை 33 சதவிகிதமாக உயர்த்தி விடுகின்றது. வரி செலுத்த கூடிய 10 லட்சத்திற்கும் அதிகமாகச் சம்பாதிக்கும் சம்பாதிக்கும் நபர்களுக்கு 10 லட்சத்திற்கும் அதிக வருவாய்க்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படுகின்றது. நிறுவங்களைப் பொருத்த வரை 1 கோடிக்கும் அதிகமாக வருவாய் உள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கு 10% ம், வெளி,நாட்டு நிறுவனங்களுக்கு 2.5% வ்திக்கப்படுகின்றது. ரூ. 1 கோடிக்குக் குறைவான வருமானம் கொண்ட நிறுவனங்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.