பங்குச் சந்தை வர்த்தகம் என்பது மிகவும் சிக்கலானது மற்றும் சவால்கள் நிறைந்தது எனப் பலர் கூற நீங்கள் கேட்டிருக்கலாம். மேலும் சிலர் இதில் எவ்வுளவுக்கு எவ்வுளவு எளிதாகப் பணத்தைச் சம்பாதிக்கின்றோமோ அவ்வுளவுக்கு அவ்வுளவு பணத்தை இழந்து விடலாம் எனத் தெரிவிக்கின்றனர். பெரும்பாலோனோர் பங்குச் சந்தை ஒரு சூதாட்டத்தை விட மிகவும் மோசமானது எனவும் தெரிவிக்கின்றனர். ஒரு சில அறிவு ஜீவிகள், பங்குச் சந்தை அறிவாளிகளின் விளையாட்டுக் களம் எனத் தெரிவிக்கின்றனர்.
இதில் எது உண்மை. எது பொய். மேலே கூறிய அனைத்துமே உண்மை. அனைத்துமே பொய். ஆம், வாழ்க்கை என்பது உண்மையும் பொய்யும் கலந்த கலவை. அதிலும் வர்த்தக வாழ்வைப் பற்றி என்ன கூற.
கலை
என்ன மிகவும் குழப்பமாக இருக்கின்றதா? குழப்பத்தை விடுங்கள். ஒரே ஒரு கூற்றை மற்றும் உறுதியாக நம்புங்கள். பங்குச் சந்தை வர்த்தகம் ஒரு கலை. ஆம் இது ஒரு கலை.
பல்வேறு கலைகளுக்கு இருக்கும் இலக்கணத்தைப் போல் இதற்கும் சில விதி முறைகள் மற்றும் இலக்கணங்கள் உள்ளது. என்ன ஒரு வித்தியாசம். கலைகளுக்கான இலக்கணங்களை யாரோ வகுத்துள்ளனர். இந்தப் பங்குச் சந்தை வர்த்தகத்திற்கான இலக்கணத்தை நீங்கள் உங்களுக்காக வகுக்கப்போகின்றீர்கள். இலக்கணத்தை வகுக்கும் முன்னர் அடிப்படையைச் சரி வரத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அத்தகைய அடிப்படை விஷயங்கள் உங்களுக்காக இங்கே.
அடிப்படை
பங்கு சந்தை வர்த்தகம் என்பது சந்தையின் தேவை மற்றும் விநியோகத்தைப் பாதிக்கும் அனைத்து காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டது. இதுதான் அடிப்படை. இது மட்டுமே அடிப்படை. இந்த அடிப்படையை மூலமாகக் கொண்டு பின்னப்பட்ட வேறு சில முக்கியமான அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றிக் கீழே விரிவாகக் காணப்போகின்றோம். இதைப் புரிந்து கொள்வதன் மூலம் உங்களுடைய வர்த்தகத் திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இழப்பு நிறுத்தங்கள்
இழப்பு நிறுத்தம் என்பது பங்குச் சந்தை வர்த்தகத்தில் உங்கள் நஷ்டங்களைக் குறைக்க உங்களுக்கு உதவும் ஒரு வர்த்தகக் கருவியாகும். உங்கள் பங்குகளின் விலையில் ஒரு குறிப்பிட்ட அளவில் நீங்கள் இழப்பு நிறுத்தத்தை உருவாக்கினால், உங்களுடைய பங்கு அந்த விலைக்குக் கீழே இறங்கினால், அது தானாகவே விற்கப்படும். உதாரணமாக, நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை ரூ. 100 க்கு வாங்கியுள்ளீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். தற்பொழுது நீங்கள் ரூ. 90 விலையில் இழப்பு நிறுத்தத்தை உருவாக்கி விட்டீர்கள் எனில், பங்கு விலை ரூ. 90க்கு கீழே இறங்கினால், உங்களுடைய பங்குகள் தானாகவே விறிபனையாகி விடும். உங்களுடைய இழப்பு ரு 10 என்கிற அளவில் மட்டுப்படுத்தப்படும். அளவுக்கு அதிகமான இழப்பு தடுத்து நிறுத்தப்படும். எவ்வுளவு இழப்பை நீங்கள் தாங்குவீர்கள் என்பது உங்களுடைய தனிப்பட்ட விஷயமாகும்.
பின்னணி ஆராய்ச்சி
ஒரு வெற்றிகரமான முதலீட்டை தொடங்கும் முன்னர், நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனத்தின் பிண்ணனி விபரங்களை முழுமையாக ஆராய வேண்டும். அந்த நிறுவனத்தின் இருப்புநிலை, வருமான அறிக்கை, பணப்புழக்க அறிக்கை, குறுகிய கால மற்றும் நீண்டகால வருவாய், மற்றும் நிறுவனத்தின் கடந்தகாலச் செயல்திறன் ஆகியவற்றைப் பற்றிய விபரங்களை அலசி ஆராய வேண்டும். இதன் அடிப்படையின் நீங்கள் அந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சித் திறனை மிகவும் எளிதாகத் தீர்மானிக்கலாம். அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் உங்களுக்கு முழுத் திருப்தி எனில் தயங்காமல் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திடுங்கள்.
முதலீடுகளைத் தொடர்ந்து கண்காணித்தல்
பங்கு சந்தையில் நீங்கள் ஒரு வெற்றிகரமான மற்றும் சிறந்த வர்த்தகராக விளங்க வேண்டுமெனில், ஒரு வழக்கமான இடைவெளி அடிப்படையில் உங்களுடைய முதலீடுகளைக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு உங்களுடைய முதலீடுகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் வழக்கமானது, ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை விழும் என்று நீங்கள் நினைத்தால் உடனடியாக அந்தப் பங்குகளை விற்க உதவுகிறது. இதைத் தவிர்த்து, உங்களுடைய பங்குகள் அதிகபட்ச விலையில் இருக்கும் நேரத்தில் அதனை விற்று அதிக லாபத்தைச் சம்பாதிக்கலாம்.
பொறுமை
முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளைப் பொறுமை இழந்து மிக விரைவில் விற்கும்போது மட்டுமே பெரிய வாய்ப்புகளை இழக்கின்றனர். விலை சிறிது அதிகமானாலும் கூட, அவர்கள் தங்களுடைய பங்குகளை விற்று குறைந்த லாபத்தைக் கைப்பற்ற துடிக்கின்றார்கள். அவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்தால், லாபம் பன்மடங்கு அதிகரித்திருக்கும். எனவே பங்குச் சந்தை வர்த்தகர்கள் அவசரப்படாமல் சரியான நேரத்திற்குப் பொறுமையாகக் காத்திருந்து சரியான முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும். சந்தையின் போக்கை பகுப்பாய்வு செய்தபின்னர் மட்டுமே உங்களுடைய பங்குகளை விற்க வேண்டும். சந்தை இனி மேலும் உயராது என்பது உங்களுக்கு மிகவும் உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே உங்களுடைய பங்குகளை விற்க வேண்டும்.
கூட்டத்தைப் பின்பற்றாதீர்கள்
பங்கு சந்தையில் நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான தவறுகளில் ஒன்று, மற்றவர்களைப் பின்பற்றுவது. மற்றவர்கள் முதலீடு செய்கின்றார்கள் என்பதற்காக நீங்களும் அதே நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யக் கூடாது. உங்களுடைய சூழ்நிலை மற்றும் நிதி நிலைமை எந்தவொரு நபருடனும் கண்டிப்பாக ஒத்துப்போகது என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவருக்குச் சாதகமாக இருக்கும் முதலீட்டு முடிவுகள் உங்களுக்கு மிகவும் பாதகமாக மாறி விடலாம். எனவே உங்கள் நிதி நிலைமையைக் கவனமாகப் பகுப்பாய்வு செய்து, நீங்கள் எதை இழக்கப் போகின்றீர்கள் என்பதைத் தீர்மானிப்பதன் மூலம் உங்கள் சொந்த முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பற்றி நீங்கள் ஆர்வமாக இருந்தால், இந்த வர்த்தக உதவிக்குறிப்பைப் பின்பற்றலாம். இத் அதிகப் பணத்தை இழக்காமல் உங்களுடைய செல்வத்தை வளர்க்க உதவும்.